Skip to main content

இரு நியூட்டன் ஆப்பிள் தருணங்கள்

 இரு  நியூட்டன் ஆப்பிள் தருணங்கள் 


கடந்த வாரம் வேலையில் கொஞ்சம்  மன உளைச்சல் அதிகம் . அகால நேர மீட்டிங்குகள், மயிர் பிளக்கும் திட்டமிடல்கள் , உள்ளே  உள்ள சதுரங்க விளையாட்டுகள், வலை விரிப்புகள் . குறிப்பாக நம்மவராயிருந்த அயலவர்கள் - நன்றாக விளையாடுகிறார்கள், எங்காவது எதிர் வரிசை கிடைக்கும்போது  கைகோர்த்து கும்மியடிக்கிறார்கள் .  இவ்வாறு அவ்வப்போது ஆவது வெயில் , மழை போல் தான் என்றாலும் org change (நிர்வாக மாற்றம் ?) ஆகும்போது வரும் ஒரு சில மாதங்கள் இப்பிடித்தான் இழுபறியாக இருக்கின்றன .  எப்போதுமே புதிதாய் வரும் மேனேஜர் நம்மை கீழே விழ விட்டு  தான் தூக்கி விடுவார். இவர் இப்போது முயற்சிக்கின்றார். விழாமல் , விழுந்தாலும் அடி விழாமல், பார்த்து சமாளித்து எழுந்து கொள்ளத் தெரிய வேண்டும். அவரும் இதைக் கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவரும்  ஒரு சில படிகள் கீழே இறக்கப்பட்டு  இப்போது மேலே வந்து கொண்டிருக்கிறார்.   இது இப்படித்தான்  தான் இருக்கிறது . இவைகளை ஒரு விளையாட்டாக எடுத்து கடந்து போக முயற்சிக்கிறேன் . கசப்பு , வெறுப்பு ஒன்றும் இல்லை.  மனுஷ்யபுத்திரனின் இந்தக்  கவிதை ஞாபகம் வருகிறது.


"நீங்கள் ஒரு நல்ல மனிதர்  என்பது 

உங்களுக்குத்  தெரியும் 

நான் ஒரு நல்ல மனிதன் என்பது 

எனக்குத் தெரியும் 


நீங்கள் உங்களைப் பற்றி புகழ்ந்து 

பேசிக்கொண்டிருக்கிறீர்கள் 

நான்என்னைப்  பற்றி புகழ்ந்து

பேசிக்கொண்டிருக்கிறேன் 


உங்களை அவமதித்தவர்களை 

நீங்கள் பழிவாங்கிக்கொண்டிருக்கிறீர்கள் 

என்னை அவமதித்தவர்களை

நான் பழிவாங்கிக்கொண்டிருக்கிறேன் 


உங்களுடைய தந்திரங்களால் 

நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள் 

என்னுடைய தந்திரங்களால்

நான் முன்னேறிச் செல்கிறேன் 

....

....

என்னை எப்படிக்  கையாள்வதென்று 

உங்களுக்குத்  தெரியும் 

உங்களை எப்படிக்  கையாள்வதென்று

எனக்குத் தெரியும்


நல்லது நண்பரே !

நமக்குள் யார் மனமும் 

சந்தேகிக்காமல் 

நம் கைகளை விடுவித்துக்கொள்வது எப்படி ? "


- 'கைகளை விடுவித்துக் கொள்வது எப்படி '



ஆனால் விளையாட்டு தான் என்றாலும் ,அந்த நேரத்தில்  தலைக்குள் அது முழுதாக சென்று விடுகிறது. IPL கிரிக்கெட்டை நான் பார்க்காமல் இருக்க முடிவு செய்தது இதனால் தான். நான்கு மணி ஆட்டத்தில் CSK  தோல்வி அடைந்தால்,  முதல் ஒரு சில நிமிடங்கள் தொண்டை வரளும், பின்  கொஞ்ச நேரம் அடுத்தவர்களிடம் பேசுவது குறைந்து விடும்.  அப்புறம் தேவை இல்லாத எரிச்சல் வரும். சகஜம்ஆவதற்கு  ஒரு மணி நேரமாவது  ஆகும். இதுவே ராத்திரி மாட்ச் அனால் தோல்விக்குப் பின் தூக்கம் கெடும்.


சினிமாவையும் இதே காரணத்திற்காகவே தவிர்க்கிறேன் . வயதாகும் நேரத்தில் இறுதியாக வரும் 'சுபத்திற்கு ', கண்ணீர் மல்குவதற்கு காத்திருக்கலாம் என்றாலும் , நடுவே வரும் சின்னச் சின்ன சூழ்ச்சிகள், பதற்றக் காட்சிகள் மனதிற்கு இப்போது தேவையாக இல்லை. போன வாரம் குடும்பமாக பார்த்த விக்ரம் படமும் இங்கு விலக்கல்ல. படம் தோறும் வரும் பின்னல்கள், சதிகள், திடீரன வீட்டில் இழுக்கும் காட்சிகளை  மனம் ஒட்டி பார்க்கும் போது சோர்வே  வருகிறது . இறுதியில் அவருக்கு கிடைக்கும் வெற்றிக்காகவே முழுப் படம் என்றாலும், வழி நெடுக இந்த சிக்கல்களை நாமும் அனுபவித்து வர வேண்டி இருக்கிறது . இதே மன நிலையையே அசுரன் திரைப்படம் பார்த்த போது அடைந்தேன். 


நிற்க , சுற்றி வளைத்தாயிற்று , விஷயத்திற்கு வருகிறேன். 

இவ்வாறு எதிர்மறை நினைப்புகளை தவிர்ப்பதற்கும், மனதை வேறு இடம் செலுத்துவதற்கும் "எங்க ஊரு பாட்டுக்காரன் " படத்தை youtube -ல் வைத்துப் பார்த்தேன் - மனைவியுடன் . ஏனோ கடந்த இரு நாட்களாக 'செண்பகமே  செண்பகமே'  பாட்டு மனதில் ஓடிக் கொண்டே இருந்தது தான் காரணம். 


எந்த விதமான சிக்கல்களோ, எதிர்மறை விஷயங்களோ இல்லாமல் பேட்டரி கார் , yulu- பைக் போல படம் செல்கிறது. பெரும்பாலும் நியூட்ரல் , உச்சத்தில்  30 கிமீ வேகம் . 


உதாரணத்திற்க்கு இது. 


ஊர்த் திருவிழா, ஜல்லிக்கட்டு நடக்கிறது. எல்லாரும் மாட்டை அடக்குகிறார்கள் . எல்லாம் நடக்க ராமராஜன் மாட்டு வண்டியில்  நண்பர்களுடன் உட்கார்ந்து இருக்கிறார். ஒரு வழியாக உதிரி மாடுகளை சிலர் அடக்குவதை டாப் ஆங்கிளில் காட்டி முடிக்கிறார்கள். இது வரை ஹீரோ செய்வதற்கு ஒன்றும் இல்லை , மாட்டு வண்டியில் இன்னும் உட்கார்ந்து பொங்கல் தின்று கொண்டு இருக்கிறார்.


இப்போது நாம் மனது எதிர்பார்த்து  காத்திருந்த காட்சி வருகிறது. சண்டி மாடு உள்ளே நுழைகிறது. நம்பியார் படை பரிவாரங்களுடன் மேடை ஏறுகிறார். மைக்கை வாங்கி காளையின் மெய்க்கீர்த்தி படிக்கிறார். மாட்டை அடக்க அறைகூவல் விடுக்கிறார். பரிசு அறிவிக்கிறார். அப்புறம் போனஸ் அறிவிக்கிறார். இதற்கும் யாரும் முன் வரவில்லை. இலக்கணப்படி இந்த இடத்தில்  "பொதுவாக எம்மனசு தங்கம்' template - ஐ  நினைத்துக்  காத்து இருக்கும் போது இவ்வாறு நிகழ்கிறது. இதுவரை வண்டியில் உட்கார்ந்து இருந்த ராமராஜன் இன்னும் உட்க்கார்ந்தவாறே பொங்கல் கொண்டு வந்த பையனிடம் எதோ கேட்டு வரச் சொல்கிறார். என்ன கேட்டார் கவனக் குறைவால் என்பதை விட்டு விட்டேன், அப்புறம் மனைவி சொல்லித் தெரிந்தது  , அவர் கேட்டு வர சொன்னது  மாட்டின் பேரை. இப்போது எனக்கு பொறி தட்டியது. பையன் வந்து காதில்  'பேச்சி' என்கிறான். இப்போது ஒரு வழியாக மாட்டு வண்டியில் இருந்து  ராமராஜன் எழுந்திருக்கிறார்.  வேட்டியை மடித்துக் கட்டி மைதானத்தில் இறங்குகிறார். நாம் அவர் காளையை கொம்பு பிடித்து அடக்கக் காத்து இருக்கும் போது , பேச்சி பேச்சி என்று பாடியே வழிக்கு கொண்டு வருகிறார். கடைசியில் காளை குழந்தை போல் கீழே உட்கார்ந்ததும் தலையில் இருந்த பரிசு பவுனை ஒரு கையால் எடுத்துக் கொள்கிறார்.


https://www.youtube.com/watch?v=wbLHt9nhCjc


இந்த இடத்தில் ஜெயமோகனின் 'ஆனையில்லா' சிறுகதை ஞாபகம் வருகிறது.

https://www.jeyamohan.in/130198/


இதில் குட்டி யானை ஒன்று வீட்டிற்குள் நுழைய முயன்று முன்பக்கம் வீட்டிற்குள்ளும் , பின்பாகம் வீட்டிற்கு வெளியேயும் மாட்டிக் கொள்கிறது. ஊரே முயன்றும் முடிய வில்லை. “எலிப்பொறியிலே பெருச்சாளி சிக்கின மாதிரில்லா நிக்குவு!”. யானை மேல் நாலு டின் எண்ணெய் , கிரீஸ்  தடவி வெளியே இழுக்க முயல்கிறார்கள் . கடைசியில் வீட்டை இடித்து தன ஆக வேண்டும் எனும் நிலையில் ஒரு மந்திரவாந்தியை (கடுவா ) அழைக்கிறார்கள். கடுவா அந்த யானையின் பெயரைத் தெரிந்து கொண்டு அதைக்  கொஞ்சியே மத்தகம் தாழ்த்தி , சுருங்க வைத்து விடுவிக்கிறார். 


“அவரு நம்ம கோபாலகிருஷ்ணனை பாத்து சின்ன குட்டிய விளிக்குத மாதிரி விளிச்சாரு… சின்னக்குட்டிக்கிட்ட பேசுத மாதிரி பேசினாரு… இவன் அதைக்கேட்டு அப்டியே நம்பி சுருங்கி சின்னக்குட்டியா ஆயிட்டான்”


திரும்பவும் கதைக்கு. தோல்வி அடைந்த நம்பியார் ராமராஜனை வீட்டுக்கு போகும் வழியில் மடக்கி வம்புக்கு இழுக்கிறார். இங்கும் இலக்கணப் படி நம்பியார் வில்லனாய் உருவெடுப்பர் என்று எதிர் பார்க்கும் பொது, அவரே சண்டையை நிறுத்தி மன்னிப்பு கேட்டு , டெஸ்ட் செய்ததாகச் சொல்கிறார். வாழ்த்தி விடை பெறுகிறார். 


இருந்தாலும் இறுதிவரை பார்க்க முடியவில்லை , தூக்கம் இழுத்தது, சில தினங்களுக்குப்   பிறகு.


இவ்வாறு எழுதித் தீர்ப்பதும் நன்றாய்த்தான் இருக்கிறது

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...