கலங்கும் பொழுது தெளியுஞ்சொல் - கலைவாணி சரஸ்வதி அந்தாதி அந்தாதி என்றால் ஆதி + அந்தம் , முதலும் , முடிவும் இரண்டுமானது என்று பொருள். சரஸ்வதி அந்தாதி என்றால் , முதலும் முடிவுமான சரஸ்வதி என்று பொருள். சிறுவயதில் பாட்டி அபிராமி அந்தாதி சாத்திரத்திற்கு ரெண்டு மூன்று பாட்டு சொல்லிக் கொடுக்கும்போது அந்தாதி என்றால் முடிந்த எழுத்தில் அடுத்த பாடல் ஆரம்பிக்கும் என்று சொல்லிக் கொடுத்தார். நூறு செய்யுளும் மாலை கோர்த்தது போல் நினைத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பித்த சொல்லில் திரும்ப முடியும். ஆனால் இதன் குறியீட்டுப் பொருள் முதலும் முடிவுமான கடவுளை மனதில் வைத்துப் பாடுவது. கம்பர் ராமாயணம் போக இயற்றிய நூல்களுள் ஒன்று சரஸ்வதி அந்தாதி. டூயட் படத்தில் மெட்டுப்போடு பாட்டுக்கு முன் ஒலிக்கும் , அவரது அம்மா மணி அடித்து ஆரத்தி காட்டிப் பாடும் துதிப் பாடல் கம்பர் அந்தாதியின் இரண்டு காப்புப் பாடலின் முதலாவது. 'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை - தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்'...