ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு. அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே.
அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால் ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்' சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர். எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும்.
எழுத்துங்கறது கதை சொல்றது.
கதைங்கிறது உண்மை..அஸ் இட் இஸ்..நடக்காத கதையை எழுதமுடியாது'
இங்கே நிறுத்தி பாட்டி வடை சுட்ட கதையை எப்படி எழுதுவீர்கள் என்று கேட்டார்.
ஊரு கிராமமா, நகரமா , யாரு வடை வாங்கப்போறது என்று கேட்டார்.
நரியை அதற்கான காட்டையும் எதிர் பார்த்து ' கிராமம் , ஊருக்கு வெளியே' என்றேன்.
'இதுனால தான் இந்தக் கதையை யாரும் எழுதல..வாயால சொல்லிக்கிட்டே இருக்காங்க'
இக்கதையை எழுதினால் வரும் தர்க்கப் பிழைகளைக் காட்டினார். இதே கதையை நரியின் பார்வையில் , காக்காயின் பார்வையில், வடையின் பார்வையில் சொல்லிக் காட்டினார்.
பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது என்று சொன்னேன். எண்பது புத்தகங்கள் எழுதியிருப்பவர் வகுப்பில் தன்னைப் பற்றிச் சொல்லாமல் இருக்க முடியுமா? எட்டு நாட்களில் ஒரு இடத்திலும் தன்னுடைய எழுத்தை முன்நிறுத்தவே இல்லை. பெரிய எழுத்தாளர்களையும் , மரபையும் மட்டும் மீண்டும் முன்னிறுத்தினார்.
தன்னுடைய எழுத்தைத் தொட்டுக்காட்டி இவ்வாறு எழுதினேன் என்று சொல்வது அவருக்கு எளிதாக இருந்திருக்கும். ஆனால் தான் கற்றது யாரிடம் என்று காட்டினார். அழகிரிசாமியையும், லா.ச.ராவையும், சு.ராவையும் அ.முத்துலிங்கத்தையும் ஜெயமோகனையும் தொட்டுக்காட்டியபடி வகுப்பை நடத்தினார்.
முதல் கதை பொன்ஜூர் ரூஸோ!, ஷோபாசக்தி இரண்டு வாரங்கள் முன் எழுதியிருந்தது. பிரான்சில் இருக்கும் லிபி வட்டம் என்னும் ஈழத் தமிழர் அமைப்பு இலங்கையில் இருக்கும் எழுத்தாளருக்கு விருது கொடுக்கிறது. விருது வாங்க வந்தவர் அகதியாக அடைக்கலம் கேட்கிறார். சட்டச் சிக்கல் வரும் என்கின்றனர் லிபி வட்டத்தினர். காணாமல் போகிறார். பந்தியோன் மண்டபத்தில் ரூசோவின் சமாதியின் மேல் ஒளிந்து கொள்கிறார். இது கலைஞர்கள் , புரட்சியாளர்கள் சமாதி. அங்கு கூட்டித் துடைப்பவர் ஆப்பிரிக்கப் பெண். அவர் மேலிருக்கும் குற்றம், பிரெஞ்சு பழகாதது. ஆனால் மேலதிகாரிகளுக்கு பொன்ஜூர் (வணக்கம்) சொல்ல மட்டும் கற்றிருந்தார். அவர் மேலதிகாரியிடம் சொன்னார்: பொன்ஜூர், திரு. ரூசோ சமாதியில் இருந்து வெளியே வந்து விட்டார்.
அடுத்து இரண்டு கதைகள் வண்ணநிலவனின் அந்திக் கருக்கல் , மா.வெ.சிவக்குமாரின் நாயகன் ..
எத்தனை கதைகள் எழுதியவர். பாத்திரங்களும் கதைச்சூழலும் அவர் மொழியில் கச்சிதமாய் விரிந்துகொண்டே சென்றன. மேகக்கூட்டம் விலகி தெருவில் சூரிய ஒளி மீண்டும் வருவது போல். சரியாய் நிழல் விழவேண்டிய இடமும், ஒளிபாய்ச்சும் இடமும்.
பையன் வைப்பு வைத்திருப்பதைக் கண்டிக்கப் போகிறார் கண் தெரியாத பெரியவர். மருமகள் படும் பாடு இவருக்குச் சகிக்கவில்லை. அவள் காப்பி கொடுத்து உபசரிக்கிறாள். நயமாக பையன் போகமாட்டேன் தான் ஒன்றும் செய்வதற்கில்லை என்கிறார். கடைசியில் காலில் விழுகிறார், பெரியவர் ஆசிர்வாதம் செய்து திரும்புகிறார்.
வாழ்வில் எதுவும் கருப்பு வெள்ளையாக துல்லியமாக இல்லை. எழுத்து அதைத் தொட்டுக் காட்ட வேண்டும்.
நாயகன் தன்னை கமலுக்கு மேல் என்று நினைக்கும் ஒருவரின் கதை. ஒரு பேங்க் குமாஸ்தா கமலைப் பார்ப்பது. என்ன நடந்தது என்று தெரியாமல் வாழ்வு திசை திரும்பிவிடுகிறது. குண்டுப் பெண்ணை கல்யாணம் பண்ணி, கடன் வாங்கி வீடு கட்டும் குமாஸ்தாவாகிவிடுகிறார்.

Comments
Post a Comment