25/30 ஒன்றாய் பலவாய் --------------------------------------- ஆதிமூலம் பேரில்லாத அந்தக் கடையைத் திறந்தார். அறுபடை வீட்டின் பிரகார சஷ்டி மண்டபத்தில் போட்டோ அங்காடி. தோரண வாயில் போல மேலே காவல் நின்ற ஒன்பது தெய்வங்கள். நடுவில் பித்தளை செம்பு மூல உருவங்கள். சிறிய பெரிய தேய்க்கப்பட்ட விளக்குகள் சுற்றி வரிசையில் மின்னின. அதே தெய்வம் குழந்தையாய், வீரனாய், மகனாய், துணையாய் ஒளிப்படங்களாய்த் தொங்கியது. பின் அவைகளே தனியாய் சுவரெங்கும் மீண்டும் இருந்தன . ஒன்றில் ஒன்றென நான்கு சுவர்களிலும் வெவ்வேறு வண்ணங்களில் பிரதிபலித்தன. முருகா என்று இரு கை கூப்பி தன்னையே ஒருமுறை சுற்றினார். கடைசியாய் ஆலயத்தினுள் எப்பொழுது சென்றார் என்பது அவருக்கு நினைவிருக்காது. ஒருவர் சன்னிதி உள்ளிருந்து , கடைக்குள் ஏறி நிதானமாக ஒரு வலம் வந்தார். உள்ளங்கை அளவான அக்கடவுளை வாங்கி மேல்சட்டைப் பையில் வைத்தபடி வெளியேறினார். 26/30 கதிர் அரிவாள் --------------------------- இரண்டு கதிர் அரிவாள்கள் நிலத்தைக் கிளறிக்கொண்டிருந்தன. நகரின் புழக்கடை. ஊரின் கழிவுகள் கடைசியில் சேரும் இடம். அது கறுத்து இ...