காலச் செங்கல் (குறுங்கதை)
காலச் செங்கல் (குறுங்கதை) ------------------------------------- ஒரு மனிதக் கூட்டம் மலையில் ஏறிக் கொண்டிருந்தது. சிறிய இடைவெளிகளில் குதிரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரிந்தன. அவை தலையாட்டி, விசை கோர்த்து, முன்னிழுத்து பனியில் கால் பதித்து நடந்தன. குதிரையின் மேல் பொதிகளுக்கு நடுவே இன்னொரு பொதியாய் ஒருவர் அமர்ந்து கடிவாளத்தைப் பற்றியிருந்தார். குதிரையின் காலின் கீழே தூய வெண்பனி, உறைந்த கடலென தெரிந்தது. குதிரைகளின் ஒவ்வொரு காலடியும் உள்ளிறங்குவதும் , வெளியேறுவதுமாய் இணைந்து விசித்திர ஒலியாய் மாறுகிறது. மரத்தின் அடிமரக் கருமை தவிர அதைப் பனி மூடியிருக்கிறது. இலைகள் பனியை உதிர்த்து பச்சை வர்ணத்தை இடைவெளிகளில் காட்டிக்கொண்டிருந்தன. கடல் மேலே எழுந்தது போல் விண்ணில் வெள்ளையாய்த் தெரிந்தது. வானின் வெள்ளை நடுவில் மயில் கழுத்து நீலம் எட்டிப் பார்த்தது. அதற்கு மேல் இன்னோர் முழு நீலம் ஒழுங்கற்ற கோடுகளை வரைந்து கொண்டே போனது. மாபெரும் சிலந்தி வலை. நடுவில் அந்த உயர்ந்த முகடு இருந்தது. அங்கிருந்த மற்ற முகடுகள் அதைக் கை கூப்பி சுற்றி நின்று பார்ப்பது போல் இருந்தன. அது நம் பார்வைகள் எதுவும் அறியாமல் ...