Posts

Translate

காலச் செங்கல் (குறுங்கதை)

Image
காலச் செங்கல் (குறுங்கதை) ------------------------------------- ஒரு மனிதக் கூட்டம் மலையில் ஏறிக் கொண்டிருந்தது. சிறிய இடைவெளிகளில் குதிரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரிந்தன. அவை தலையாட்டி, விசை கோர்த்து, முன்னிழுத்து பனியில் கால் பதித்து நடந்தன. குதிரையின் மேல் பொதிகளுக்கு நடுவே இன்னொரு பொதியாய் ஒருவர் அமர்ந்து கடிவாளத்தைப் பற்றியிருந்தார். குதிரையின் காலின் கீழே தூய வெண்பனி, உறைந்த கடலென தெரிந்தது. குதிரைகளின் ஒவ்வொரு காலடியும் உள்ளிறங்குவதும் , வெளியேறுவதுமாய் இணைந்து விசித்திர ஒலியாய் மாறுகிறது. மரத்தின் அடிமரக் கருமை தவிர அதைப் பனி மூடியிருக்கிறது. இலைகள் பனியை உதிர்த்து பச்சை வர்ணத்தை இடைவெளிகளில் காட்டிக்கொண்டிருந்தன. கடல் மேலே எழுந்தது போல் விண்ணில் வெள்ளையாய்த் தெரிந்தது. வானின் வெள்ளை நடுவில் மயில் கழுத்து நீலம் எட்டிப் பார்த்தது. அதற்கு மேல் இன்னோர் முழு நீலம் ஒழுங்கற்ற கோடுகளை வரைந்து கொண்டே போனது. மாபெரும் சிலந்தி வலை. நடுவில் அந்த உயர்ந்த முகடு இருந்தது. அங்கிருந்த மற்ற முகடுகள் அதைக் கை கூப்பி சுற்றி நின்று பார்ப்பது போல் இருந்தன. அது நம் பார்வைகள் எதுவும் அறியாமல் ...

மெட்ராஸ் பேப்பர் - கட்டுரை

Image
நான் எழுதிய Get-set-go நிறுவனர் கனிகா தெக்ரிவால் பற்றிய கட்டுரை மெட்ராஸ் பேப்பரில் வெளியாகி இருக்கிறது. மரணத்தின் விளிம்பில் வாழ்வில் எல்லாம் அர்த்தப்பட்டுப் போகிறது என்பதைச் சொல்வது. ஆசிரியர் பா.ராகவனுக்கே நன்றி சொல்ல வேண்டும். எழுத்திலும் ஒரு ஒழுக்கம் இருக்கவேண்டும் என்பதை அவரிடமே கற்றேன்.  எழுதுவது விளையாட்டல்ல, ஆனால் செயல்முறை விளையாட்டைப் போல் இருக்கலாம் என்று காட்டியவர்.    https://madraspaper.com/jet-set-go/

நீரின்றி (சிறுகதை)

Image
நீரின்றி (சிறுகதை) ----------------------- காயத்ரி வீட்டின் பின் கதவைத் திறந்து கொல்லையில் நின்று நெற்றியில் கை வைத்து கிழக்கே பார்த்தாள். சூரியன் பார்வையை இன்னும் மறைத்தது. நீல வானில் ஒரு துண்டு மேகம் தெற்குப் பக்கம் இருந்தது. வெள்ளைத் தனித் துண்டு. காற்றே இல்லாததால் ஸ்தம்பித்து நின்றிருந்தது. அவள் இங்கிருந்து பார்க்க வேண்டிய ஊரின் நல்ல தண்ணீர்க் கிணறு அவள் நிற்கும் இடத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேலே இருக்கலாம். அவளுக்கு கிணற்றில் கூட்டம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் .ஒரு அரிசி மணியை பத்து எறும்புகள் திசைக்கு ஒன்றாய் இழுப்பது போல் மனதில் ஒரு பிம்பம் வந்து போனது. முள்ளுக் காடுகளாய் மண்டியிருந்த கிடங்கைத் தாண்டி ஓங்கிய இரட்டைப் புளிய மரம் தெரிந்தது. அதை ஒட்டிய மஞ்சள் பள்ளிக் கூடக் கட்டிடம் பார்வைக்குப் பிடி கொடுத்தது. கிணற்றைச் சுற்றி நிறைய தலைகள் தெரிந்தன. அவள் நிற்கும் தரையின் அனல் கழுத்துக்கும் தாடைக்கும் தலைக்கும் ஏறி ஓடு என்றது. இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் என்று உள்ளே போய் விட்டாள். நேற்று தான் காயத்ரி அம்மா ஊரில் இருந்து வந்திருந்தாள். அப்பா தவறிப் போய் ஒரு மா...

வாதம் , சைத்தியம் , பூண்டு , பூசணி

Image
வாதம் சைத்தியம் , பூண்டு , பூசணி ------------------------------------------- சனிக்கிழமை இந்தப் பகுதியில் சந்தை. மடிவாலா சந்தையைப் போல் பெரிதில்லை இல்லையென்றாலும் , தனியாக இதுவும் பெரிதுதான். மடிவாலா சந்தை அவ்வளவாக பொங்கி வழிவதில்லை. உள்ளேயே சுருண்டிருக்கும். நடந்து போய் வாங்கி வர வேண்டும். ஒரு கிலோமீட்டர் நீளத்தில் இரு புறமும் கடைகள். சனிக்கிழமை சந்தாபுரா சந்தை ஓசூர் சாலையை ஸ்தம்பிக்க வைத்து விடும். சரியாக மேம்பாலத்தின் கீழ் சந்தை இருக்கிறது.எட்டாய்ப் பிரிந்த சாலை. அதன் முனையில் சந்தை. இதுதான் சந்தடி என்பது. திசைகள் என்பது இல்லை. திசைகள் ஒன்றான பந்து போன்ற இடம்.இல்லை எட்டுத் திக்கும் இடிக்கும் இடம். இதற்குள் தான் சரக்கு வண்டிகள், காய்கறி வாங்கும் கார்கள், பைக்குகள் போக வேண்டும். முக்கியமாக நிறுத்த வேண்டும். நாலு கம்பும், படுதாவும், தார்ப்பையும் தான் கடை என்பது. இல்லை அதுவுமே இல்லாமல் பூமியில் மட்டும் நிற்பது.காலை மனிதக் குரல்களாலும் , வண்டியின் உறுமும் ஒலிகளாலும், ஹாரன் சத்தத்தாலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. இல்லை சூடு பபிடிக்கவில்லை. மணி எட்டு மட்டுமே. சிறு கல் குவியல் போன்று உரு...

இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி

இயற்கையை அறிதல் - எமர்சன் -3 மொழி ------------------------------------------------------ இயற்கை மனிதனுக்கு அளிக்கும் மூன்றாவது உபயோகம் மொழி. 1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் குறியீடுகள் 2. ஒவ்வொரு இயற்கை நிகழ்வும் மனதில் நிகழும் ஆன்மீக நிகழ்வின் குறியீடு 3. இயற்கை ஆன்மாவின் குறியீடு 1. சொற்கள் இயற்கை நிகழ்வுகளின் நேரடிக் குறியீடுகள் இயற்கையின் வெளிப்புறத் தோற்றத்தை அறிவது , அதன் பின்னிருந்து இயக்கும் அதீத ஒன்றையும் அறிய உதவும். படைப்பில் இருக்கும் பொருள்கள், மொழி வழியாக , நம் உள்ளிருக்கும் படைப்பாக உருமாறுகின்றன. ஒரு பொருளின் தோற்றத்தில் இருந்தே நாம் அறிவையும், ஒழுங்கையும் குறிக்கும் சொற்களைப் பெறுகிறோம். சரி என்பது நேராக இருப்பது. தவறு என்பது கோணலானது. ஆத்மா என்பது காற்று. மீறல் என்பது ஒரு கோட்டைத் தாண்டுவது. இதயம் என்றால் உணர்ச்சி. தலை சிந்தனையைக் குறிக்கும். சிந்தனை , உணர்ச்சி போன்ற சொற்கள் பொருளைக் குறிப்பதில் இருந்து , மனதைக் குறிப்பதாக ஆன்மீக உலகிற்கு வந்தன. குழந்தைகள் இதையே செய்கின்றன. குழந்தைகளும், பழங்குடியினரும் பெயர்ச்சொற்களையே செயலைக் குறிக்கவும், மனதைக் குறிக்கவும் பயன் ப...

மெட்ரோவின் ஒரு திங்கள் கிழமை காலை

Image
மெட்ரோவின் ஒரு திங்கள் கிழமை காலை ---------------------------------------------------- பருவமழை துவங்கிவிட்டது. மாலை ஐந்து மணியில் இருந்து மேகம் நீர் கட்டிக் காத்துக் கொண்டிருந்தது. துண்டு மேகங்கள் ஒரே பெரிய கருப்புத் திரட்டாக மாற ஓடி உழைத்துக் கொண்டிருந்ததன. இப்பகுதியில் ஓங்கிப் பெய்ய திட்டம் இல்லாமல் துளிகளை மட்டும் சிதற விட்டுக் கொண்டிருந்தது. சாரலில் மனிதத் தலைகளில் குடை முளைத்து விட்டது. இன்று காலை ஊரே கழுவிப் பளபளத்தது. ஒரு இலையிலும் தூசி இல்லை. கருங்கல் ஜல்லிகள் மழையில் குளித்து மின்னுகின்றன.எதிர் பொட்டலில் போகிக்கு அடுக்கிய செங்கல் , பழமைச் சின்னங்கள் போல், மழையில் ஊறி முனையிழந்து மணலில் பதிந்தும் , பதியாமலும் நிற்கிறது . இரவு மழை வண்டிகளிலும், கைப்பிடிகளிலும் ஈரத்தை மிச்சம் வைத்துப் போயிருக்கிறது . காலைக் காற்று ஈரம் கொள்ளத் துவங்கியிருக்கிறது. மெட்ரோவில் ஏறி என்றும் போல் கடைசிப் பெட்டியில் உட்கார்ந்தேன். முதல் ஸ்டேஷன் ஆகையால் இருக்கை நிச்சயம். என்னைப் போல் பழக்கப்படவர்கள் கடைசிப் பெட்டியில் ஏறுவார்கள். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இறங்கியதும் அடுத்த ரயிலுக்கு படி நாலடியில் ...

இயற்கையை அறிதல் - எமர்சன் - 2 - அழகு

Image
  இயற்கையை அறிதல் - எமர்சன் - 2 - அழகு மனிதனின் ஆத்மார்த்தமான இன்னொரு தேவையை இயற்கை நிரப்புகிறது. அது அவனுடைய அழகுணர்ச்சி. லத்தீனில் உலகம் எனும் சொல்லுக்கு அழகு என்று பொருள். இங்கிருக்கும் எல்லாம் அப்படி இருப்பதாலோ , இல்லை மனிதனின் கண்கள் தான் அப்படியோ , இயற்கையின் முதன்மை வடிவங்கள்- நீல வானும், ஓங்கிய மலையும், மரமும், விலங்கும் நம்மை அப்படியே உவகை கொள்ளச் செய்கின்றன. அவற்றின் கோட்டு வடிவம், வண்ணம் , நகர்வு, சேர்ப்பு எல்லாமும். இது பாதி நம் கண்களால் ஏற்படலாம். கண் ஓர் உன்னதமான கலைஞன். வேறுபட்ட பொருள்களின் அளவையும், ஒளியையும், ஒருங்கே இணைத்து வண்ணமும், நிழலும் கொண்ட கோளமாய் கண்ணில் தோன்ற வைக்கிறது. சிறிதாயும், பெரிதாயும் உள்ள பொருள்கள் உருண்டையாகவும், ஒருமையுடனும் எப்படித் தெரிகின்றன? கண் மாபெரும் ஒருங்கிணைப்பாளன் என்றால், ஒளி ஒரு சிறந்த ஓவியன். ஒளியால் அழகாக்க முடியாத கெட்ட பொருள் என ஒன்றுமே இல்லை. பொருள்கள் ஒளியால் தான் கால வெளியில் எல்லையற்றவை எனத் தோன்றுகின்றன. நம் உணர்வுகளை எழுப்பி மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. பிணமும் ஒளியில் அழகாகும். ஒட்டுமொத்தக் காட்சி இன்பம் தருவது போ...