Skip to main content

ஒரு தொழில்நுட்ப உரசல்

 ஒரு தொழில்நுட்ப உரசல்


தொடுதிரை என்னும் கல்பற்றா நாராயணன் கவிதை. ஒரு அப்பா டச் ஸ்கிரீன் திரையில் தடுமாறுவதையும் , அவர் பையன் நீரில் நடக்கும் கிறிஸ்துவைப்போல் தொடக்கூட இல்லாமல் திரையில் கைகளால் நடந்து செல்கிறான். அழுந்தக் கால்பதித்தே நடந்து பழகிய அவர் வாழ்வு நம் கண்முன் வருகிறது. பலமே தேவையில்லாத ஒரு வாசலின் முன் தனியனாய் வந்து நின்று இருக்கிறார்.    

"காய்த்துப்போன விரலிருந்தும்

எத்தனை அழுத்தியபோதும்

செயல்படவில்லை.


இது தொடுதிரை அப்பா

மெல்ல தொட்டாலே போதும்

அழுத்தவே வேண்டியதில்லை

சொல்லப்போனால் தொடக்கூடவேண்டியதில்லை

இதோ இப்படி


அவன் விரல்

நீரின்மேல் ஏசு போல

நடந்தது

அவன் விரும்பியபடி

செயல்பட்டன எல்லாம்


உலகம்

எனக்கு வசப்படாமலிருந்தது

இதனால்தானா?

நான் தேவைக்குமேல் அழுத்திவிட்டேனா? "


...

மேல்தளத்தில்

எடையில்லாமல் நகர

என்னால் இயலவில்லை

முதல் அடியிலேயே நான் மூழ்கினேன்

பூ விரிவதை கண்டதில்லையா

செடி அழுத்துகிறதா என்ன?

ஆனால் நான்

பழுதடைந்த மின்விசிறிபோல

ஓசையிட்டபடி மலர்ந்தேன்

நெற்றி வியர்வையை கொதிக்கவைத்து

என் அப்பங்களை வேகவைத்தேன்

அது ஐந்தாயிரம்பேருக்கல்ல

ஐந்துபேருக்கே போதவில்லை.

என் ஏசு

அற்புதங்கள் நிகழ்த்துபவர் அல்ல

தேவைக்குமேல் சிலுவையேறியவர்.


தொடுதிரை போல் இன்னும் மெல்ல அழுத்தவேண்டிய , இல்லை தொடக்கூட தேவை இல்லாத பல இடங்கள் இன்று உள்ளன. 

பத்து வருடம் முன்னால் கார்களுக்கு ரிமோட் சாவி வர ஆரம்பித்தது. இப்போது காரின் அருகே சென்று நின்றால் அதுவே திறக்கும். சாவி பைக்குள் இருக்க வேண்டும் அவ்வளவே. மூடுவதற்கு கதவில் இன்னொரு ஒரு குறிப்பிட்ட இடத்தை லேசாய்த் தொட வேண்டும். உள்ளே சென்று உட்கார்ந்து சாவியை எங்கு போடுவது என்று தேடியும் காண முடியவில்லை. அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. இப்போது தொடுதிரை எரிந்து இடது ஓர பிரேக்கில் கால் வைத்து,  இக்னிஷனை அழுத்துமாறு சொன்னது. விளக்குகள் அதுவாய் எரிந்தன.போனில் விட்ட இடத்தில் இருந்து தானாய் பாட்டு மீண்டும் ஒலிக்க  ஆரம்பித்தது.

ஆனால் இத்தகைய விஷயங்கள் நம்மை நாளுக்கு நாள் சூழ்ந்த வண்ணம் இருக்கின்றன. கழுத்து பிடித்து, மூச்சு திணர்கிறதோ என்று தோன்றுகிறது.இப்போதெல்லாம் கூகுளை தமிழில் தேடும் போது , ஆங்கில பக்கங்களை தமிழில் மொழி பெயர்த்து வரிசையில் வைக்கிறது. அதை தமிழில் படிப்பதற்குள் மூச்சுத் திணறுகிறது. குப்பையைக் கிளறி , நினைப்பதை, வேண்டுவதை அடைவது கொஞ்சம் சிரமம் தான். அதுபோல் தேடும் போது சினிமா தான் பூத்து முன்னால் வரும். உதாரணமாய், திரௌபதி என்று அடித்தால் முதலில் ஒரு திரைப்படமே வரும். இவையெல்லாம் கொஞ்சம் உரசி,அடிபட்டு தான் சரியாய் வரும். அதற்கு முன் நாம் செய்யக்கூடியது அதைப் புரிந்து கொள்வது ஒன்றே.

இதைப்போல் கடந்த நான்கு ஐந்து நாட்களாய் ஒரு சம்பவம். இதற்கு முன் எனது பல் கடிக்கும் பழக்கத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஒரு முறை ஒரு பத்துப் பேர் இருக்கும் மீட்டிங்கில் , சென்ற பதினைந்து நிமிடங்களாய் அவ்வப்போது ஒரு மெல்லிய நட்டைத்  திருக்கும் சத்தம் வந்து கொண்டே இருப்பதாகச் சொன்னார். இல்லை நான் பல் கடிக்கும் ஒலி தான் என்றேன். பொதுவாக இது காற்றில் கலந்து விடும், வெளிக்காதுகளுக்கு மாட்டாது. இது நமக்கு பல வருடப் பழக்கம். எதையும் தீவிரமாய்ச்  செய்யும் போதோ , இல்லை யோசிக்கும்போதோ எனது மேல்தாடையும், கீழ்தாடையும் இணைந்து கொள்ளும். ஒரு வேகத்தடையில் வண்டி ஏறி இறங்குவது போல் , பக்கவாட்டில் பற்கள் முன்னும் பின்னும் ஏறி இறங்கி  , ஒரு நட்டுத் திருக்கும் சத்தம், அல்லது மேல் மாடியில் ஒரு அம்மி அரைத்தால், கீழ் மாடியில் கேட்பது போல், மெல்லிய ட்ரில்லர் ஒலி போல், நமக்கே கேட்கும். இது பொதுவாய் வெளியே கேட்பதில்லை, ஏ.சி ரூம்களில் யாரும் பேசாமல் இருக்கும்போது வெளியே கேட்கும், எலி கரும்புவது போல் கேட்கும். புதியவர்களுக்கு பிடிபடாது.  

வழக்கமாக உடற்பயிற்சியின் போதோ, சைக்கிள் ஓட்டும்போதோ  இயர் போன், செவிபேசி (?)..இல்லை செவி மொட்டு (earbud ? )  போட்டு, பாட்டுக் கேட்பது வழக்கம் . இங்குதான் ஒரு வில்லங்கம் ஆரம்பமாகி இருக்கிறது. சென்ற ஒரு சில நாட்களாய் பாட்டு இடையில் வேறு எங்கோ ஒலிப்பது போல் , பாதாளம் சென்று , சில வினாடிகளில் மீண்டும் பூலோகம் திரும்புகிறது. பின்னர் ஒரு சில வரிகள். மீண்டும் காற்றில் பறக்கும் , மெல்லிய காற்றில் கட்டிய, சிறு ஒலி காதில் ஒலிக்க , திரும்ப ஒரு அலையென காற்றில் வரும்.  fading என்பார்கள். எனக்கு பிடிபடவில்லை. அப்புறம் ஒரு சில நாட்களில் புரிய ஆரம்பித்தது. நான் பல் கடிப்பதை , அது எதோ பேச வருவதாக புரிந்துகொண்டு , நமக்கு வழிவிட்டு அது பின் வாங்குகிறது. ஒரு நடைச்  சுற்றுக்குள் , நான் பாடலில் இருந்து விலகி  எங்கோ சென்று , பல்லைக் கடித்து மீண்டும் ஒரு பத்து முறை திரும்பி வர வேண்டியிருக்கிறது. இப்போது இது ஒரு விளையாட்டாகி விட்டது, பல்லைக் கடித்துக் கொண்டாவது , பல்லைக் கடிக்காமல் இருக்க வேண்டியிருக்கிறது.   

இதே போல் நாம் பாடல் வரியில் கரைந்து வாய் திறந்து கூட பாட ஆரம்பிக்கும் போது , அது பாடுவதை நிறுத்தி விடுகிறது. ஒரு வேளை சுருதி சுத்தமாக நாம் பாடும் போது அதுவும் கூடப் பாடுமோ, அதுவரை விடுவதாய் இல்லை ? இன்னும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டாய் , தப்பு விழும்போது , தலையில் ஒரு அடியோ , இல்லை காதை எதாவது திருகிவிடுமா ? இன்னும் கொஞ்ச நாளில் , ஒலி பிறக்கும் முன்னே கண்டுபிடித்து விடுமா? இந்த மெல்லிய ஒலிக்கும், எண்ணத்திற்கும் இடைவெளிதான் எவ்வளவோ? 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...