பெங்களூர் - ஒரு வரலாற்று வரைபடம் - 2
பெங்களூரில் நிறைய கேட்கநேரும் ஒரு பெயர் கெம்பே கவுடா என்பது. மைய பேருந்து நிலையத்தின் , விமான நிலையத்தின், ரயில் நிலையத்தின் பெயர் எல்லாமே ஒன்றே தான் . வீட்டை விட்டு வெளியேறி இவர் சிலையை பார்க்காமல் வீட்டிற்குள் உள்ளே வர முடியாது. சட்டசபையின் முன்னே வாள்பிடித்து , நடக்கும் குதிரையில் அவர் அமர்ந்து செல்லும் ஒரு வெண்கலச்சிலை இருக்கிறது. புரவி நிலம் பார்த்து வல முன்கால் ஊன்றி , பின்னங்கால் அழுத்தி உயர்ந்தும், இடமுன்கால் காற்றில் எழுந்து, இடப்புற பின் கால் நன்றாய் ஊன்றி , ஒரு அபாரமான ஸ்னாப் ஷாட், சிலையில் வடித்தது. அவர் முகமும் கண்களும் எங்கோ வெளியைப் பார்த்து இருக்கும். கையில் தாளப் பிடித்த வாள் . சாந்த மூர்த்தம் என்று தான் சொல்ல வேண்டும்.
பெங்களூருக்கு இரண்டு தலபுராணங்கள்.
முதலாவது, ஹொய்சாள வம்சத்தை துவக்கிய வீரவல்லாளர் வேட்டையின் போது களைப்பாகி இன்றைய எலகங்கா வேளாண்மைக் கல்லூரி உள்ள இடத்தில் உணவு தேடி தனியாக ஒரு குடிசையில் நுழைந்தார். ஒரு வயதான பாட்டி வீட்டில் ஏதும் இல்லாமல் அவித்த வேர்க்கடலையை அரசனுக்கு அளித்தார். பசிக் கொடுமையாக இருந்திருக்க வேண்டும். ஏதும் இல்லாத வனாந்திரத்தில் , ஒரே ஆளிடம் கிடைத்த வேர்க்கடலையின் நினைவாக இந்த ஊருக்கு 'பெங்கால் (பீன்ஸ்/கடலை) ஊரு ' என்று வீரவல்லாளர் பெயரிட்டார். இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்திருக்க வேண்டும்.
இரண்டாவது , இந்த நகரை நிர்மாணித்த கெம்பெகௌடா , ஒரு நாள் வேட்டைக்கு வரும் போது முயல் நாயைத் துரத்தி ஓடுவதைக் கண்டார். இதை வீர பூமி என்று நினைத்து, இன்று நகரில் இருக்கும் கோட்டைக்கு அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே மக்கள் மனதில் இருந்த இருந்த பெங்களூரின் பெயரை மேலும் வலுவாக்கினார்.
கெம்பெகௌடா அப்பாவின் பெயர் கெம்பதேவராஜர். மெட்ராஸ் கெசட்டின் படி கிருஷ்ணதேவராயர் தெற்கு நோக்கி படையெடுத்து உம்மத்தூர் (இன்றைய சாமராஜநகர் அருகில்) கங்க அரசரை வென்று காவிரியில் மூழ்க வைத்து கொன்றார். பின்னர் ஸ்ரீரங்கபட்டணத்தை வென்று திருமலை தேவியை மணந்தார், தோற்ற அரசரின் மகள் . இவர் புலவர், பட்டத்தரசியாய் இருந்தார். ராயர் அப்பா வீரப்பகௌடாவிடம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஒப்படைத்தார்.
இதே கதை கிருஷ்ணதேவராயர் தம்பி அச்சுதராயருக்கும் சொல்லப் பட்டிருக்கிறது. இவரும் உம்மத்தூர் கங்க அரசரை காவிரியில் மூழ்கடித்துக் கொன்றார் என்றுள்ளது. இவர் அப்பா கெம்பதேவராஜர் போரில் உதவினார் ஆகையால் அவரை எலகங்கா மன்னராக்கினார். இது நடந்தது 1532.
இன்னொரு புறம் , அச்சுதராயரில் இருந்து விஜயநகர வீழ்ச்சி ஆரம்பம். கிருஷ்ணதேவராயருக்கு ஆண் வாரிசு இருக்கவில்லை. பிறந்த ஒரு ஆண் குழந்தையும் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுவிடுகிறது. இவர் 1529-ல் இறந்தபின் தம்பி அரியணை ஏறுகிறார். இவருக்கு பிரச்சனை தேவராயரின் மருமகன் ராமராயர். நிர்வாகத்தில் ஓயாமல் தலையிடுகிறார். பாமினி சுல்தான்களுடன் உள்கூட்டு வைக்கிறார். அருகிலிருந்தே இவரை அழித்து விடுகிறார். ராய்ச்சூர் இழந்திருந்த அதில்ஷா திரும்ப படையெடுக்கிறார். ரெய்ச்சூர் விஜயநகர கைகளில் இருந்து நழுவுகிறது. அதில்ஷாவை அண்ணன் கிருஷ்ணதேவராயர் வென்ற போது , ஷா வெள்ளைக் கொடி காட்டினார். அவரே வந்து செருப்பை முத்தமிட்டால் நிலத்தைத் திருப்பித் தருவதாக சொன்னார். இவ்வாறு பாமினி சுல்தான்கள் வடக்கிலிருந்து பிய்த்துக்கொண்டிருந்தார்கள்.
இப்போது வருமானத்திற்கு அச்சுதராயர் தெற்கு நோக்கி செல்ல வேண்டியதானது. ஏற்கனவே மதுரை நாயக்கர்கள் விஜயநகர ஆளுகைக்கு உட்பட்டே இருந்தார்கள். தெற்கே மீதி இருந்த இடங்களில் தான் வென்று ஒரு வலுவான அரசை உருவாக்க கெம்பதேவராஜரையும் அவர் மகன் கெம்பெகௌடாவையும் பணித்தார். இது தசரஹள்ளி பதிவேட்டில் உள்ளது. இதுதான் நவீன பெங்களூரின் தொடக்கப்புள்ளி .
இது தசரஹள்ளி பதிவேட்டில் உள்ளது.
இது எல்லாம் நடக்கும் போது கெம்பெகௌடாவின் வயது 22.இவர் எலகங்கா வம்சாவளியில் மிகச்சிறந்த வீரர். 46 ஆண்டுகள் அரசாண்டார். வடக்கே சிவகங்கையை வென்றார். கீழே சோழர்களிடமிருந்த டொமலூரை ஜெயித்தார். பின்னர் அல்சூர் மற்றும் ஹெசரகட்டா பகுதிகளை வசமாக்கினார். வென்ற பகுதிகளை ஏரிகள் வெட்டி , விவசாயத்திற்கு உள்ளாக்கினார். ஏறத்தாழ எதிரிகளே இல்லாத நிலை ஏற்பட்டது. இது 1513 க்கும் 1537க்கும் இடையில்.
விஜய நகர பாளையக்காரராக இருப்பது சவரக்கத்தி முனையில் நடப்பது போன்றது. லட்சுமண ரேகைகள் அதிகம் உண்டு. விஜய நகருக்கு பாமினி சுல்தான்கள் ஒரு புறம், அவர்கள் பின் டெல்லி சுல்தான்கள். இவர்கள் புகுந்து செய்யும் சதி செயல்களால் உடையக் காத்திருக்கும் விஜயநகரம். பாளையக்காரர்கள் எந்தப்பக்கமும் சாயத் தயாராய் இருந்தார்கள்.
எலகங்கா பாளையக்காரர்களான இவர்கள் ராயர் ஆசியுடன் ஒரு புதிய நகரை அமைக்க நினைக்கிறார்கள். விஜயநகருக்கு உட்பட்ட அரசுகள் கல் கோட்டை அமைக்க முடியாது. மண் கோட்டைக்கே மேலிட அனுமதி. வாஸ்து பிரகாரம் நான்கு ஏர் பூட்டிய காளைகளை நாலாபுறமும் ஓட விட்டு , அவை நின்ற இடத்தில் நான்கு கோட்டைகளைக் கட்டினார். பழைய படையெடுப்பின் வழியாக இவருக்கு இடத்தின் புவியியல் நன்றாய் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் பெங்களூரை நோக்கி வரும்போது நாட்புறமும் மேலே ஏறியே உள்ளே நுழைய முடியும். கடல்மட்டத்தில் இருந்து ஊட்டி இரண்டாயிரம் மீட்டர் உயரம், சென்னை ஆறு மீட்டர், பெங்களூர் ஆயிரம் மீட்டர். அன்று முழுதும் காடுகளால் சூழப்பட்டிருக்க வேண்டும். மூன்று பக்கம் நதிகள், சுற்றியும் ஏரிகள். மேற்கே ரிஷபாவதி நதி, இன்றைய காடு மல்லேஸ்வர கோவில் மலையருகே உற்பத்தியாகி , நகர் வழியாகப் பாய்ந்து பிடதி அணைக்கட்டில் முடிகிறது. இப்போது மைசூர் ரோடு மெட்ரோ ஸ்டேஷன் அருகே ஓடும் சாக்கடை ஆகி இருக்கிறது. இந்நதி பாயும் வழிகளில் இன்றுள்ள பல கோயில்கள் அமைந்திருக்கின்றன. பசவனகுடி காளையர் கோவில், காவி கங்காதரர் கோவில், காடு மல்லேஸ்வரர் கோவில். இக்கோவில்கள் எல்லாம் ஒரு குன்றின் மேல் இருப்பதை கவனிக்க வேண்டும். கோவில்களைச் சுற்றி நதி ஓடியதாகத் தெரிகிறது. இதை ஒட்டி அமைந்த குடியிருப்புகளே மல்லேஸ்வரம், பசவனகுடி, காவிபுரம் போன்றவையே பெங்களூரின் பழைய குடியிருப்புகள் ஆகும்.
நாட்புறமும் செம்மண் கோட்டைகள் , குறுக்கு வெட்டாக இரு பெரும் சாலைகள். அல்சூர் - சோண்டேகுப்பா (இன்றைய நெலமங்களா ) மற்றும் எலகங்கா - ஆனேக்கல் சாலைகள். மற்ற எல்லா சாலைகளும் இவ்விரு சாலைக்குள் இணைந்தன. இன்றும் நகரின் அமைப்பு பெரும்பாலும் இதற்குள்ளேயே இருக்கிறது. நகரின் உள்ளேயே பெரிய ஏரிகள் வெட்டப்பட்டன. சம்பங்கி ஏரி (இன்றைய கண்டீரவா ஸ்டேடியம்), சுலேகெரே (இன்றைய KR மார்க்கெட் ), கெம்பபூதி ஏரி (இன்றைய மெஜஸ்டிக்). இரு பெரும் வணிக வீதிகள் - சிக்க பேட், டொட்பேட். இதைச் சுற்றி இன்னும் பல பேட்டைகள் இன்றும் உள்ளன - அக்கிபேட் (அரிசி), உப்பர பேட் (உப்பு), கனிகர பேட் (எண்ணெய் ).
ஆனால் கொஞ்சம் எல்லை மீறிவிட்டார். ஒரு கட்டத்தில் அவரே அடித்த நாணயத்தை தன் நாட்டில் புழக்கத்தில் விடுகிறார். இது கல்கோட்டை கட்டுவதை விட பெரிய குற்றம். நாணயம் ஒரு அரசரின் மீதுள்ள குடிகளின் நம்பிக்கையின் அடையாளமே ஆகும் . இது அவரை அவர் நாட்டினுள் இன்னும் ஸ்திரப்படுத்தி இருக்கலாம். ஆனால் மேலிடப் பார்வையில் கோட்டை கட்டுவதை விட பெரிது. சென்னபட்டண பாளையக்காரர் கோள் மூட்டி , மேலிடம் இவரை தலைநகருக்கு அழைக்கிறது. இது எப்போது நடந்தது என தெரியவில்லை, 1950 களில் என்று சொல்கிறார்கள். அப்போது அவருக்கு நாற்பது வயதுக்கு மேல். மேலிடம் பேச்சுக்கு அழைத்து , ஐந்து வருடம் ஆனைகுந்தியில் சிறை வைக்கப் படுகிறார். சிலர் பெனுகொண்டா என்கிறார்கள், இங்கு இன்னும் விஜயநகர சிறை இருக்கிறது.
சிறைவாசம் இவரை இந்து மதத்தைக் கற்கவும் , சிவபக்தராகவும் மாற்றிவிடுகிறது. சிறையில் இருந்து விடுபட்டால் சிவனுக்கு கோவில் கட்டுவதாக வேண்டிக் கட்டியது தான் காவி கங்காதாரேஸ்வரர் கோவில். பீஜப்பூர், அஹமதுநகர், கோல்கொண்டா சுல்தான்கள் ஒன்று திரண்டு விஜயநகரத்தை தாக்கத் திட்டம் போடுகிறார்கள். படைதிரட்ட பணம் வேண்டி ராமராயர் , பணத்தை வாங்கிக்கொண்டு கெம்பெகௌடாவை விடுவிக்கிறார். அவர் பெங்களூர் நோக்கி வரும் வழியெல்லாம் கிடைத்த மக்கள் வரவேற்பை மிகப் பெரிதாகச் சொல்கிறார்கள்.
காவிபுரத்தில் இருக்கும் காவி (குகை) கங்காதாரேஸ்வரர் கோவில் நகரில் இருக்கும் அழகான குகைக்கோயில். இது இவர் ஆட்சியில் கட்டப்பட்டது. ஒரு அழகான சிறு குன்றின் மேல் இந்த கோவில் உள்ளது. பார்த்ததும் நம்மை வியக்கச் செய்வது கொடிமரத்தைச் சுற்றி இருக்கும் நான்கு கல் தூண்கள். ஒரே கல்லாலான திரிசூலம், அதன் பின்னிருக்கும் டமரம்.
எதிர் எதிர் பார்த்து நிற்கும் சூர்ய பானா , சந்திர பானா எனப்படும் இரு உச்சியில் தட்டையான கற்கள். இவை இரண்டும் கிழக்கு மேற்காய் அமைந்துள்ளன. விசித்திரமாக இக்கோவில் தென்மேற்காக உள்ளது. மகர சங்கராந்தி அன்று சூரியன் மறையும் முன் , பொன் போன்ற சூரிய கிரணங்கள் நேரடியாக சிவலிங்கத்தின் மேல் விழுகின்றன. மாலை ஐந்து மணிக்கு மேல் , ஒரு பத்துநிமிடங்கள் நீடிக்கும் இதை விசேஷமாக கொண்டாடுகிறார்கள். இதே நேரத்தில் இந்த தூண்களின் நிழலும் ஒன்றின் மேல் ஒன்றாய் முழுதும் நிரப்பி விழுவதாகச் சொல்கிறார்கள்.
தலை குனிந்தே குகைக்கு உள்ளே செல்ல முடியும் , பிரகாரம் சுற்றி வரும்போது ஏறத்தாழ தவழ்ந்தே வெளியே வரவேண்டும் . உள்ளே எங்கிருந்தோ நீர் கசிந்த வண்ணம் உள்ளது. வெளியே உள்ள கோட்ட தெய்வங்கள் பின்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
Comments
Post a Comment