ஸ்ரீ குழந்தையாக, ஒரு இரண்டு மூன்று வயது இருக்கும் போது அவர் அழுவதைப் பார்ப்பது அவர் எனக்கு எப்போதுமே அலுக்காது. வசதியாக உட்கார்ந்து கால்கள் இரண்டையும் அகட்டி வைத்து, கைகள் இரண்டையும் ஒன்றாக கோர்த்தபடி, கழுத்தை சிறிது வான் நோக்கி உயர்த்தி , உயர்ந்த ஒரு பிரார்த்தனை போல் அழுவான். எதோ ஒரு நிமிடத்தில் முழு மூச்சை உள் வாங்கி, பலத்தையெல்லாம் திரட்டி, கைகளை அழுத்தி, கண்ணில் உள்ளிருக்கும் தண்ணீரை எல்லாம் வெளியில் பிதுக்கி கொண்டு வருவார். சத்தமும் பெரிதாக வரும்படி செய்வார். இந்த இடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நின்று பார்ப்பார். முடிவில் அந்த உயர் அலைவரிசையில் இருந்து படியில் இறங்குவது போல சத்தமே இல்லாமல் கீழே இறங்குவார் , மலையில் நீயூட்ரலில் இறங்கும் ஒரு ஜீப் போல. பின்னர் ஒரு இடத்தில் டிரைவர் கியர் போடும் போது விம்மும் வண்டி போல் விம்மி திரும்பவும் சம தளத்தில் ஆரம்பிப்பார். மூக்கில் இருந்து வரும் நீரை பிடிக்க நாக்கை ரெடியாக வைத்தே இருப்பார். ஒன்னும் முடியாத நேரத்தில் எழுந்து நடந்தபடியே கொஞ்சம் அழுது பார்ப்பார். முடிவில் பக்கத்து வீட்டு நாயைப் பார்த்து , ஸ்தம்பித்து , அழுகையை மறந்து விடுவார்.
போன வாரம் இதே குழுவின் ஒருவர், முதல் பிறந்த நாள். புதுசாய் என்னைப் பார்த்ததும் அழுவார் என நினைத்தேன். காற்று தடை பட்டு, புழுக்கம் அதிகரித்தது. ஆனால் , ஒரு சிறு காற்று , மழை நகர்ந்தது. மேஜையில் இருந்து ஒரு பிஸ்கட்டை நீட்டினேன். மாமாவின் தோளில் இருந்தார். வாங்க மறுத்தார். இன்னொரு முறை கொடுத்தேன். தட்டையே தூக்கி நீட்டினேன். ஒன்றைத் தானே எடுத்துக் கொண்டார். ஒரு ஆளை சமாளித்து விட்டார்.
மங்களூர் சென்றபோது நடந்து கொண்டே இருந்தார்கள். சிறுவன் ஸ்ரீயை அப்பாவும் அம்மாவும் மாறி மாறி தூக்கியபடி வந்தார்கள். ஒரு தெரு முனையைக் கண்டதும் திடீரென்று கடலைக் காண நேர்ந்தது.இவ்வளவு பெரிய ரூம், சுவரை அவர் கண்டதில்லை. தண்ணீர் இப்படி தொடர்ந்து எழுந்தபடியே, வெளியே துரத்தி விரட்டுவதையும் அவர் அறிந்ததில்லை. கண்ணிலாதவன் யானை தடவுவது என்று சொல்கிறார்கள். எல்லாமும் ஒரே மாதிரி இருக்கும் இந்த யானை , பார்த்தாலும் அறிய முடியாது. இறுதியில் escalate பண்ண முடிவு செய்தார். பீச் மணலில் யாராவது கால் வைத்தால் விடாமல் அழுவது, வெளியேறினால் நிறுத்திவிடுவது. அன்று முழுதும் அதை செய்து சாதித்தார்.
இங்கு புதியவருக்கு சிறு செடிகளைப் பார்த்துப் பழக்கம் இருக்கலாம். ஓரிரு பூக்கள், சின்ன இலைகள் இவர் கண்ணுள் அடங்கிவிடும். திடீரென்று காட்டைக் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வது. அதுவும் ஆட்களால் மட்டுமேயான காடு. தொட்டிபோல் இருக்கும் சேர்களில் அமர்கிறார்கள், திரும்ப எழுகிறார்கள், எதோ தங்களுக்குள் பேசுகிறார்கள்.திடீரென்று நம்மிடம் நேரே வருகிறார்கள், தொடுகிறார்கள், சிரிக்கிறார்கள், கடைசியில் ஆளை பறித்துக் கொண்டுபோக முயற்சிக்கிறார்கள். மேலும், கீழே இருந்து மேலும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இவரும் கடைசிக் காயை நகர்த்த முடிவு செய்தார். மேடையில் யாராவது தூக்கியபடி கால் வைத்தால் அழுவது, பின் பக்கம் சாப்பிடும் இடத்திற்கு போனால் நிறுத்தி விடுவது.
இந்த வகை அழுகை XXL நீளம், அல்லது டெஸ்ட் மேட்ச் போல் நாள் முழுதும் விளையாடி முடித்து, அடுத்த நாளும் விளையாடுவது. நாட்களை எண்ணினால் வெல்ல முடியாது. நோக்கம் விளையாடுவது ஒன்றே.
கம்பனின் இந்தப் பாட்டுதான் நினைவில் வந்தது (கம்பன் விழா உரை 2018, ஜெ ).
'கண்களில் ஆறாக பெருகிய தண்ணீர் , குங்குமத்தையும் , சந்தனத்தையும் சேறாக கலக்கி கரைத்து குழம்பாக்கி, மார்பில் அணிந்த மாலையின் முத்து மாலையின் முத்துக்களை பிய்த்து சேர்த்துக்கொண்டு, மார்பில் இருந்து கீழிறங்கி , அணிந்து இருந்த அரைஞாண் கயிறுகளின் ஊடாக கடலில் கலந்தது. ' ராமன் காடு செல்லும் போது நகரில் உள்ளவர்கள் பட்ட துயரத்தை சொல்வது.
'திடர் உடை குங்கும சேறும் சாந்தமும்
இடை இடை வண்டல் இட்டு ஆரம் ஈர்த்தன
மிடை முலை குவடு ஒரீஇ மேகலை தடம்
கடலிடை புகுந்த கண் கலுழி ஆறு-அரோ'
எல்லாம் முடிந்து எல்லோரும் ஒரு வழியாக கலைந்து சென்ற பின் , இவர் கூட்டத்தைச் சேர்ந்த , இவருக்கு தெரிந்தவர்கள் நாலைந்து பேர் வந்தனர்.ஒரு சிறு அண்ணன் , அவர் தான் மல்லாந்து விழாமலே இவரை இரு தோள்களுக்குக் கீழ் கைகளை கொடுத்துத் தூக்கினார். இவர் முழித்த வண்ணம், சிரித்த வண்ணம் இருந்தார். மற்றொருவர் இவர் முதுகில் ஏறி அமர்ந்தார். கன்னம் , முடியைப் பிடித்து குலுக்கினார்கள். ஒரு சிறு அக்கா , சமநிலை குலையாமல் எப்படியோ, சைடு பையில் பேப்பர் கசக்கி சொருகுவது போல், இவரை இடுப்பில் தூக்கி வைத்தார், இவர் ஒரு சிறு நொடிகளில் வழுக்கி கீழே இறங்கினார். இவர் அப்புறம் சிரித்த வண்ணமே இருந்தார்.


Comments
Post a Comment