Skip to main content

விண்ணில் ஒரு பறவை

விண்ணில் ஒரு பறவை 





நேற்று பெங்களூர் தமிழ் சங்க கட்டிடத்தில் நடந்த கவிஞர் தேவேதேவனின் ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவிற்கு சென்றேன். தமிழ்ச் சங்க செயலாளர் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தேன். 70 வருடங்களுக்கு மேலே சங்கம் செயல்பட்டு வருவதாகச் சொன்னார். பலருக்கு படிப்பு உதவியும் , பதிப்பு உதவிகளும் செய்து வருவதாக கூறினார். அல்சூர் அருகேயே பல வருடங்கள் இருந்தபோதும் இங்கு செல்வது எனக்கு இதுவே முதல் முறை. ஒரு சிறிய திருமண மண்டபம் போல் தோன்றியது . சுவர்களில் தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் , மதுரைக் கோவில் சுந்தரேஸ்வரர் சுற்றுச்சுவர் திருவிளையாடல் ஓவியங்களை நினைவூட்டின. ஐவகை நிலங்கள் , அவற்றின் வாழ்க்கை முறை ஓவியமாய் வரையப் பட்டிருந்தது. 

அபிலாஷ் தேவதேவன் கவிதைகளை அறிமுகம் செய்து பேசினார். அவர் கவிதைகளில் வரும் பறவை,வானம்,கூடு, மரம் ஆகியவை பற்றி பேசி , அவை எப்படி ஆன்மிக தளத்திற்கு அடிப்படையாய் அமைகின்றன என்று பேசினார். பக்திமரபின் நீட்சியாகவும்,ஆனால் ஒரு பக்தரல்லவராகவும் , மாற்றாக முழுவதும் பொருளியல் உலகில் சிக்காமலும் அவர் கவிதைகள் தனித்துத் தெரிகின்றன என்று சொன்னார்.

சாரு அவர்கள் ஜப்பானைச் சான்றாக காட்டி , வாழ்வின் வெறுமை தற்கொலையிலேயே முடியும் என்றார். யாரும் படிப்பதில்லை என்றார். மூன்று கவிதைகளை வாசித்துக் காட்டினார். பரவசமே தேவதேவன் கவிதைகள் என்றார். உண்மையில் கீழ்வரும் இரு கவிதைகளும்  பரவசமே.


நெகிழிச் சுருள் :


தன் பணி முடிந்து 

தவிப்புடனும் கொண்டாட்டத்துடனும் 

அழகாய்த் தொங்கி 

ஆடிக் கொண்டிருந்தது நெகிழி 


எங்காவது சென்றமர்ந்து - அது 

தன் இறுதி இலக்கை அடையட்டும்.


அவன் நெருங்கி வந்து உதவிப் 

பறக்கவிட்டபோதும் 

அது அழகாய்த்தான் ஆடிப்  

பறந்து கொண்டிருந்தது வானில்  


எங்காவது சென்றமர்ந்து - அது 

தன் இறுதி இலக்கை அடையட்டும்.


எத்தகைய ஒரு அரிய செயல் :


அவன் தன் நடைவழியில் 

பசிய இலைகளுக்கு நடுவே 

சிக்கிக் கொண்டிருந்த ஒரு உதிர்சருகை  

அணைத்தெடுத்து நிலத்தில் விட்டான் 


எத்தகைய ஒரு அரிய செயல் 

இவ்வுலகெலாம் மகிழ்ந்து நிரைகொள்ள !!


நேற்று காலை ஊருக்கு வெளியே இருக்கும் 400 வருட ஆல மரத்தை பார்க்கச் சென்றிருந்தோம். NICE நெடுஞ்சாலை முடிந்து , உள்ளே சென்றதும் சட்டென்று நிலவெளி மாறியது. யாரும் அதிகம்  இல்லை, ஒரு ஏழு எட்டு கீமீ தொலைவிற்கு. வழிநெடுக  தோட்டங்கள், நர்சரிகள்.பாக்கெட்களில் , தொட்டிகளில் வண்ணப் பூக்கள்.  பசி அடக்க ஒரு டீ  தேடிக்கொண்டிருந்தேன். அழகாய் பெயர் எழுதப் பட்டிருந்த கடைகள், ஆனால் பூட்டப் பட்டிருந்தன. மீண்டும் திறக்குமா தெரியவில்லை, ஏன் மூடினார்கள் தெரியவில்லை . ஒரு இடத்தில் நிறுத்தினேன். இதுவும் புதுக்கடை தான். தரை ஓடுகள் மிதிபடாமல் பளபளத்தன. திறந்த வெளிக்காற்றை மீறி ஒரு மெல்லிய பெயிண்ட் வாசனை இன்னும் வந்தது . தேநீர் பற்றிய வசனங்கள் சுவரெங்கும் இருந்தன - ' கப் ஆப் டீ இஸ்  கப் ஆப் பீஸ் ' . ஒரு 30 வயதிற்கு உள்ளிருக்கும் இளைஞர் , சிவப்பாய், உயரமாய் மிக அழகாய்த் தெரிந்தார். சதுரமாய் தெரிந்த அடுமனைக்குள் இரு பெரும் பாத்திரங்களில் , ஒன்றில் இருந்து பால் எடுத்து தூள் சேர்த்து   , இஞ்சி தேடி இடிக்க ஆரம்பித்தார். அதற்குள் அந்த சிறிய அறையில் , அவர் இளம் மனைவி அடுப்பு வரை சென்று மறைந்தார்.  இந்த இடத்தில் இந்த அண்டா பால் போணியாய் முடியுமா தெரியவில்லை. இதற்குள் டீ வந்தது. டீயில் சக்கரை போட மறந்து விட்டார். டீக்கும் பிஸ்கட்டுக்கும் சேர்த்து 100 ரூபாய் கொடுத்தேன். சில்லறை தேடி பக்கத்துக்கு பாங்குக்கு செல்வதாக சொன்னார். அப்புறம் 50 ரூபாய் தேடிக் கொடுத்தேன்.மீதம் சில்லறை 5  ரூபாய்  குறைந்தது . வீட்டுக்காரர் டீ 10 ரூபாய் என்று சொல்லியிருந்தார் , மனைவி 15 ரூபாய், அவர் தவறாகச் சொல்லியிருக்கிறார் என்றார். இவர் எல்லாம் சரி செய்து விடுவார், மேலும் கடவுள் காப்பார்  என்று நினைத்தேன். இங்கு இன்று  டீ குடிக்க நிறுத்தியது இறைவன் செயல் என நினைத்துக்கொண்டேன். மேலே சொன்ன கவிதையை சாயங்காலம் கேட்டபோதும்  அப்படித்தான் தோன்றியது.

பின்னர் தேவதேவன் பேசினார். இவர் பேச்சைக் கேட்கவே நான் சென்றிருந்தேன். ஜெயமோகன் இவரை மஹாகவி என்று எழுதியுள்ளார். விழாக்களில் ஒரு சிலமுறை பார்த்திருக்கிறேன். மற்றவர் பேசும்போது, எவ்வித முகச்சலனமும் இல்லாமலே, கேட்டவாறு  அமர்ந்திருந்தார். கவிதை என்றால் என்ன என்று கேட்டுக்கொண்டார். கலையின் உச்சம் கவிதை என்று சொன்னார். எந்தவித உச்சகட்ட அழகையும் கவிதை மாதிரி என்று சொல்வதை உதாரணம் கூறினார். தண்ணீர் இல்லாமல் கூட இருந்து விடலாம், கவிதை இல்லாமல் வாழ  முடியாது என்றார். தற்கொலையின் விளிம்பில் இருக்கும் ஒருவன்,  ஒலிக்கும்  போனை எடுத்ததும், எதிர்முனை 'எப்படி இருக்கீங்க' என்றதும் அவர் 'நல்லா இருக்கேன்' என்று சொன்னது ஒரு கவிதைத் தருணம். கவிஞன் என்பவன் சிறந்த மனிதனாகவும் இருக்க வேண்டும். அப்பொழுது அவன் எழுதுவது கவிதையாகும் என்று பேசினார். பலமுறை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்று சொன்னார். அவர்போல் ஒரு பண்பட்ட நிலத்தில் இருந்து எழும் எந்த விதையும்  மரமே ஆகும். மண் பண்பட மழை , காற்று , நெருப்பு , கால் மிதி உள்பட எல்லாம்  பட வேண்டும். அதிலிருந்து மேலே எழ வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலே கவிதை இருக்கிறது என்றார். வாழத் தெரியவில்லை என்றால் கவிதையும்  எழுத முடியாது என்றார். ஒரு இடத்தில் அடுத்து வரி வராமல் பேச்சு நின்றது. மிக மிக இயல்பாய், கோர்வை மறந்து பேச்சு எங்கோ சென்று விட்டது, இப்போது நினைவில் இல்லை என்று சொல்லி, சொல்ல வேண்டியதை சொல்லி விட்டதாக கூறிச் சென்று அமர்ந்தார்.


வாங்கிய நடை மண்டலம் என்ற கவிதைத் தொகுப்பில் உள்ள பின்வரும் இக்கவிதை பரவசம் கொள்ளச் செய்தது.

இப்போது வேலை பார்க்கும் அலுவலகத்தின் எட்டாம் தளத்தில் இருந்து Cubbon பார்க் ஒரு மாபெரும் காடு போல் தெரியும். காலையில் புறாக்கள் மணிக்கணக்கில் கூட்டமாய் உள்ளே பறந்து வெளியே வருவதுமாய் ஸ்டார்லிங்ஸ் செய்யும். அடிக்கடி கேட்கும் இந்த பாரதியார் பாடல் நினைவு வரும். ஆம் வானவளையம்... 

https://www.youtube.com/watch?v=WSfMPIkhBsw

"மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற் கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.
...
ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
...
சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவி“என்ன செய்தி சொல்”என்றேன்;
“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதி”என்றாள்....
 
எப்போது வந்து சாளரத்தில் பார்த்தாலும் ஒரு சில பருந்துகள் வட்டமிட்டபடி இருக்கும். நாளில் வேலையில் அலுப்பு ஏற்படும் போதோ , அழுத்தம் ஏற்படும் போதோ, cafeteria இருந்து வானில் பறக்கும் பருந்தை பார்த்துக்கொண்டிருப்பது என் வழக்கம்.  ஒரு இரண்டு சிறகடிக்குப்பின் , அப்படியே நிமிடக் கணக்கில் வானில் வட்டமடித்து மிதப்பதையே பார்த்துக்கொண்டிருப்பேன். ஒரு முறை என் மேலதிகாரி வேலையில் மிதப்பது முக்கியம் என்று சொல்லியிருக்கிறார். அவர் போல் மிதப்பது அவ்வளவு எளிதல்ல. எதற்கும் சலனப் படாமல், யாரையும் போட்டியாக எண்ணாமல் , தன்முனை குத்தி மழுங்காமல் , இருப்பது எளிதல்ல. ஆனால் ஒரு கட்டத்தில் முடிகிறது. சிறகடிக்காமல் விண்ணில் வட்டமிடும் பருந்தைப் பார்க்காமல் ஒரு நாளும் வேலை முடிந்ததில்லை.


விண்ணில் ஒரு பறவை :

உச்சிவானில் 

சிறகடிக்கும் தேவையின்றி 

வட்டமிட்டுக் கொண்டிருந்தது 

ஒரு பறவை,

உள்வானின் சிறகடிப்பில் 

வட்டம் கண்டுகொண்டதால் !


அசையாது நீந்திக்கொண்டிருந்த அது 

அண்டத்தின் ரகசியங்கள் அத்தனையும் அறிந்ததுவாய் !

உண்பதற்கும் உடுப்பதற்கும் உறைவதற்குமான இடத்தை 

அத்துணை சிறிதே எடுத்தபடி! உயிர்வாழ்தல் தவிர 

தன மய்யம் வளர்க்கும் 

அத்தனை தீமைகளையும் விலக்கியபடி ! 


இந்த இன்னொரு கவிதையும் மனத்தைத் தொட்டது.

சிறு முடிச்சுடன் தொங்கும் 
நீள் நெடுங் கருங்கூந்தல் :
ஒரு பணியும் செய்யாதிருந்துகொண்டே 
எத்துணை அழகாக இருக்கிறது !

பணி செய்யாமலே பணியோடு 
பிரியாமல் இணைந்திருப்பதின் அழகு !


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...