இளவயதில் சரஸ்வதி பூஜைக்கு எடுத்து அடுக்கிய புத்தகங்களில் தவறாமல் சித்பவானந்தர் எழுதிய கீதையும் இருக்கும். ஒரு நாள் முழுதும் எதுவும் படிக்காமல் இருக்க வேண்டும். படிக்கும் பிராயத்தில் வாழ்க்கையில் ஒரு நாள் எவ்வளவு மதிப்புடையது என்பது தெரியும், தவறவிட்ட நாட்கள் அவைகள்...இப்படி எழுதலாம். படிக்காமல் இருந்த எவ்வளவோ நாட்களில் இதுவும் ஒன்று. அங்கீகாரம் பெற்றது அவ்வளவுதான். அப்பா 'புத்தகத்தை திறந்து உட்காரமாட்டேங்காணே' என்று மட்டும் தான் சொல்வார். நானும் புத்தகத்தை மடியில் கிடத்தி , கீழ்த் திண்ணையில் உட்கார்ந்து விடுவேன். எங்கோ போய்க்கொண்டிருக்கிறது, ஆனால் இன்னும் விளக்கியே ஆக வேண்டும். நாங்கள் வாழ்ந்த தெருவின் எல்லா வீடுகளிலும் பெரிய திண்ணைகள் இருக்கும். ஒரு ஐந்து ஆறு மாமாக்கள் பெரிய வட்டமாய் அமர்ந்து மூன்று கட்டு ரம்மி விளையாடுவார்கள். ஒருவர் எண்ணிக்கை எழுதுவார். அக்காக்கள் மனைவிகள் மேல்திண்ணையில் இருந்து வந்தும் போயும் பார்த்து , மனதிற்குள் வைவார்கள். ஏனென்றால் இது நாள் பூராம் நடக்கும். மொத்தம் 320 எண்ணிக்கை ஆட்டத்தில் இருந்து வெளியேற. பல மாமாக்கள் 'ஸ்க்ரூட்' என்று சொல்லி டிபென்ஸ் ஆடியே ஆட்டத்தை இழுப்பார்கள். எப்போதும் ஸ்க்ரூட் விடுபவர் இந்த ரௌண்டில் ஆட ஆரம்பித்தால் நன்றாய் ஆடிக் கொண்டிருப்பவர்கள் ஸ்க்ரூட் விடுவார்கள். ஒரு சைக்காலஜிக்கல் warfare போன்று இருக்கும். இதை எல்லாம், திரிகூடம் போல் இருக்கும், மூன்று பெரிய திண்ணைகளில், அடுத்த திண்ணையில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் கோயில் அர்ச்சகர் அல்லது பரமாத்மா. அங்கு முக்குணங்கள் திரிபு பட்டு சமநிலை இழந்து சீட்டாடிக் கொண்டிருப்பவர்கள் இவரது தம்பிகள் , தம்பி பிள்ளைகளே, ஜீவாத்மாக்கள் . இவர் முக்குணத்திற்க்கு அப்பால் நிற்பவர். ஒன்றும் சொல்ல மாட்டார் , பார்த்துக்கொண்டிருப்பார். ஏனென்றால் பிரகிருதியின் செயல் அலையில் , கரை ஏற , மறு நாள் மார்கழிக் காலையில் இவருடன் பிரபந்தம் பாடப் இருப்பவர்களும் இவர்களே. இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் அவ்வளவு பெரிய திண்ணை. எங்கள் வீட்டில் திண்ணை இரண்டு, மேலும் , கீழுமாக. நுழைவின் வலது புறம் திண்ணை மேல் ஒரு திண்ணை இருக்கும். அதாவது படுக்கை. சரியாக ஒரு ஆள் அகலம் மட்டுமே. 32-34 இடுப்பளவு மட்டுமே கொள்ளும். மேலே இருந்தால் , உடல் வெளியே விழும், கனத்தவர்கள் ஒருச்சாய்த்து நிறைய நேரம் படுக்க முடியாது. மண் குறைத்து , சிமெண்ட் பாலில் ஊற்றிய பச்சை உடல். தலைக்கு சிமெண்டில் மெல் மணல் குழைத்த , நன்றாய் இழைத்த கல் தலையணை. இதற்க்கு மாப்பிள்ளை படுக்கை என்று பெயர். வீட்டில் படி என்றால் இங்கு வந்து கால் நீட்டி உட்கார்ந்து , பின்னிருக்கும் அழியில் சாய்ந்து மடியில் புத்தகத்தை வைத்துக்கொள்வேன். எதோ ஒரு சைக்கிள் கடந்து செல்லும். ஒருவர் செருப்பு உரசும், கம்பு நிலத்தில் ஊன்றும். அம்மா 'வாய் விட்டுப் படி ' என்பார். ஆக அப்பாவை சமாளிக்க புத்தகம் திறந்து இருக்க வேண்டும். அம்மாவிற்கு வாயில் இருந்து சத்தம் வர வேண்டும்.
இப்படி கீதையின் என் முதல் அறிமுகம், சரஸ்வதி பூஜை மறுநாள் , ஒரு ஆயுத பூஜை அன்று தான் ஆரம்பித்தது என நினைக்கிறேன். அன்று அம்மா சம்பிரதாயமாக பிள்ளைகளை கீதையை எடுத்து , திறந்த உடனே வரும் செய்யுளை வாய் விட்டு , பாட்டும் கருத்தும் படிக்க வைப்பார். கிளி ஏடு எடுப்பது போல் ஆகும். என்ன யோகம் , என்ன செய்யுள் வருகிறது என்பதை எடுத்துச் சொல்வார். பக்கம் குறித்து வைத்து மாப்பிள்ளைத் திண்ணையில் சென்று , ஒரு ஜோசிய எதிர்பார்ப்புடன் , மீண்டும் அதே பக்கத்தைப் படித்துப் பார்ப்பேன். இதை வைத்து என்ன செய்ய என்று தான் தோன்றும். எங்காவது அர்ஜுன உவாச , பகவான் உவாச என்று இருப்பதை படித்து நல்லது வந்துள்ளது என்று நினைத்துக் கொள்வேன்.
இன்னொரு கீதை என்கவுண்டர் இப்படிப்போகும். தெருவில் யாரவது யமனிடம் டெஸ்ட் மேட்ச் அல்லது ஒரு சிலர் போல் டெஸ்ட் சீரிஸ் விளையாடிக்கொண்டிருந்தால் , படுக்கைத் தலைமாட்டில் கூடி கீதையும் , பிரபந்தமும் நாளெல்லாம் படிப்பார்கள். பையன்கள் சண்டையில் , கேலியில் வார்த்தைகள் ஒழிந்து போகும்போது, ' என்ன உனக்கும் ,கீதை படிக்கணுமா ?' - என்பார்கள். இதில் ஒருவர் கீதா கிருஷ்ணன் என்று இருந்தார். பெரும்பாலும் இந்தக் கேள்வியின் எதிர் முனையில் அவரே இருந்தார்.
புத்தகத்தில் சிவப்பு அட்டை போட்டு, பொன் எழுத்தால் பெயர் எழுதியபின் , எல்லோர் வீட்டின் பீரோவில் உள்ளே மேல் தட்டில் மட்டுமே இருக்கும், நெருக்கடியில் கையில் எடுக்கப்படும் இந்தப் புத்தகம் ஒரு மிஸ்டரி என்றே மனதில் பதிவாகியிருக்கிறது.
கீதையை நித்ய சைதன்ய யதி ஒரு உபநிடதம் என்று வகைப்படுத்துகிறார். பதினெட்டு அத்தியாயங்களும் தனித் தனியே உபநிடதங்கள் என்று சொல்லத்தக்கவை என்று கூறுகிறார். உபநிடதங்கள் பிரமாணங்களை அடுத்து வருபவை. தொடக்க கால உபநிடதங்கள் வேள்விகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. எல்லா உபநிடதங்களும் ஒரே பொருள் குறித்தே குவிகின்றன. அவை இரண்டு சொல்லால் குறிக்கப் படுகின்றன. ஒன்று பிரம்மம் , மற்றது ஆத்மா. இது பண்டைய இந்திய கலாச்சாரம் வெளியே இருக்கும் யதார்த்தம் தனக்குள்ளேயும் இருப்பதாகக் கண்டதைக் குறிக்கிறது. பிரம்மம் தனக்கு வெளியே இருக்கும் உற்பத்தி ஸ்தானம். தன் உள்ளிருக்கும் ஆத்மா என்பது இதை பிரதிபலிக்கும் கண்ணாடி. இது இரண்டும் ஒன்றே என்று கண்டுகொண்ட தருணமே புராணங்களை மீறி தத்துவம் வெளியே வந்த தருணம். மனிதனுக்குள் உடலை மீறி இருக்கும் சாரத்தை தேடிக் கண்டறிந்த தருணம். தனி மனிதனை ஒட்டு மொத்த பிரபஞ்ச நடுவில் வைத்து உடலைத் தவிர என்ன என்று சிந்தனை செய்ததின் அடையாளம். புருஷ சுக்தத்தில் மனித உடல் மாபெரும் பிரபஞ்ச உடலுக்கு உருவகமாக கூறப்பட்டிருக்கிறது. மற்றொரு இடத்தில இறந்தவரின் கண்கள் சூரியனிடம் திரும்பிச் செல்வதாக வருகிறது. மூச்சு பேரண்டத்தின் மூச்சில் கலப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எல்லாம் தன் உள்ளே ஒடுங்கும் ஒரே புள்ளி ஆத்மா.
இதைப்போலவே வெளியே தெரிவது என்ன என்ற கேள்வியும் உபநிடதங்களில் தொடர் கேள்வியாக வருகிறது. இவ்வாறு வெளியில் தெரியும் எல்லாம் கடைசியில் போய் முடியும் புள்ளி பிரம்மம் எனப்பட்டது. மேலும் கீழிருந்து விரித்தால் தெரிவதும், மேலிருந்து இறங்கிக்கொண்டே வந்தால் தெரிவதும் ஒன்றே. தத்வ மஸி , அகம் ப்ரம்மாஸ்மி போன்ற ஆப்த வாக்கியங்கள் குறிப்பதும் அதுவே. பிரம்மத்தைப் பற்றி அறிவதை பர வித்தை (para vidya, para - அங்கிருப்பது ) என்று மரபில் சொல்லப்படுகிறது. மற்றதெல்லாம் அபர வித்தை. இது உயர்ந்த நிலை அறிவு எனப் படுகிறது, ஏனென்றால் களிமண் பற்றி அறிவது களிமண்ணால் செய்த எல்லாப் பொருள்களைப் பற்றி அறிவதற்கு மேல் ஆகும். இதை இயற்கை என்றும் , மனித மனத்தால் அல்லது நமக்கு இருக்கும் புலன்களை வைத்து வரையறுக்க முடியாது என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதை Absolute , Cosmic, Transcendental என்று மொழி பெயர்க்கிறார்கள். இந்த அறிய முடியாமை , அளவிட முடியாமை பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. உச்சம் என்று ஹரியண்ணா வேதாந்த சூத்திரத்தில் வரும் இந்த இடத்தைச் சொல்கிறார். மாணவர் ஆசிரியரிடம் பிரம்மத்தை விளக்கக் கேட்கிறார். சரி என்று சொல்லி ஆரம்பிக்கிறார். காத்திருந்து ஒன்றும் சொல்லாமல் இருக்கவே , மாணவர் மீண்டும் 'சொல்க ஆசிரியரே ' என்கிறார். ஆசிரியர் மௌனமாய் இருந்தார் . மூன்றாவது, நான்காவது முறை முடியவே , கடைசியில் ' நான் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். நீ கேட்க மறந்தாய் ' என்று சொல்கிறார். பிரம்மம் என்பது மௌனமே, வெற்றிடமே என்கிறார். அளவிட முடியாத பிரபஞ்சம், அதன் இடையிலா ஆக்கமும் , அழிவும் ஒருபுறமும் , உனக்குள் இருக்கும் அழியாத ஒன்றும் அதுவே என்று மறுபுறமும் சொல்லும் போது அது ஏற்புடையதாகவே தோன்றுகிறது.
இதைத் தெரிந்து கொள்வதே முக்தி , மோக்ஷம் , விடுதலை என்பது. இது எதற்கு , பின் வருவன பாரதியாரின் கீதை முன்னுரையின் வரிகள்:
கீதையிலும் பகவான், 'எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்' என்கிறார்.
நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.
'ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?' என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கோட்கிறோம், 'முக்தியாவது யாது?'
எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்யை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை' என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. 'ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் - எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) 'ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்' என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :- 'இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது' என்று பொருள்படும்.
இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், 'இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்' என்று சொல்லுகிறார்.
எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில், எவனும் கவலைப்படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?
'எல்லாம் சிவன் செயல்' என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? 'இட்டமுடன்' என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ?'
நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே ''ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்'' - அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?"

Comments
Post a Comment