பிரம்ம வித்தை - கீதை குறிப்புகள் 5 - நூல் அமைப்பு
கீதையில் 18 அத்தியாயங்கள். இதில் ஒரு கட்டமைப்பு உள்ளது என்று இதற்க்கு உரை எழுதிய எல்லா முக்கியமான ஆசிரியர்களும் சொல்லியிருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளவது நூலைப் புரிந்துகொள்வதற்கு மிக அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். கீழே வருவது சித்பவானந்தர், நித்ய சைதன்ய யதி, குரு முனி பிரசாத் மற்றும் அவர் வழி வந்தவர்களின் உரைகளில் படித்தது.
சித்பவானந்தர் கீதை சொல்வதை ஞானயோகம் , பக்தியோகம் , கர்மயோகம் என்ற மூன்றாய் வகுக்கலாம் என்கிறார். கீதை பறவை என்றால் ஞானயோகமும் பக்தியோகமும் அதன் இரு சிறகுகள். பறப்பதற்கு சிறகு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் வாலும் ஆகும். ஒரு பட்டத்தின் வாலும் , கயிறும் போல. பறவையின் வாலே அதை நிலையாய் விண்ணில் பறக்க வைக்கிறது. அதன் பறக்கும் திசை அதை நம்பியே இருக்கிறது. ஞானமும், பக்தியும் சிறகுகளென்றால் , கர்மயோகமே அதன் வால். உலகில் ஆற்றும் செயலே கீதை என்ற பறவையின் வாலென்றாகும். எந்த ஒரு இடத்திலும் செயலை நிறுத்து என்று கீதை சொல்லவில்லை. யோகநிலையில் இருந்து தீவிரமாக செயலாற்றவே சொல்கிறது. இகத்துக்கும் , பரத்துக்கும் உரிய இடத்தை அளிக்கிறது. இவை ஒன்றோடொன்று முரண்படுவதாக எண்ணக்கூடாது. அத்தியாயங்கள் ஒரு சரியில் இருந்து மற்றொரு சரியை நோக்கியே பயணிக்கின்றனவே அன்றி , ஒன்றை ஒன்று தூக்கியோ இறக்கியோ பொருள் கொள்ளல் ஆகாது.
நித்ய சைதன்ய யதி கீதையின் பதினெட்டு அத்தியாயங்கள் ஒரு வில் வடிவ பாலம் போல் அமைத்திருப்பதாகச் சொல்கிறார். மேலே வானம், கீழே பூமி , இடையில் பதினெட்டு கம்பிகளால் இணைக்கப்பட்ட அரைவளையம் . இதை ஒரு கணித வரைபடமாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். கிடைமட்ட X அச்சு அன்றாட உலகத்தைக் குறிக்கிறது. செங்குத்தான Y அச்சு முழு அறிவைக் குறிக்கிறது. முதல் அத்தியாயம் உலகியல் புள்ளியில் (இதை 1,1 என்று கொள்ளலாம், ஒரு வசதிக்காக ) ஊன்றி நிற்கிறது. இது அர்ஜுன விஷாத யோகம், அவனது உலகியல் பிரச்சனைகளை பேசுகிறது. அடுத்து வரும் சாங்கிய யோகம் உலகியலில் இருந்து அறிவு நோக்கி மெதுவாக நகர்கிறது (2,2). மேல்நோக்கி முதல்படி. இங்கு முதல் பாதியில் உலகியலில் இருந்து கேள்விகளுக்கு விடை சொல்லப் படுகிறது. இருமைகளைத் தாண்டி முழுமையென்னும் யோகம் நோக்கி அர்ஜுனனை கிருஷ்ணன் நகர்த்துகிறார். இவ்வாறு பின்வரும் ஒவ்வொரு அத்தியாயமும் தூய அறிவு நோக்கி ஒரு ஒரு புள்ளியாய் மேலே ஏறுகிறது.
ஒன்பதாவதும் , பத்தாவதும் ஆன அத்தியாயங்கள் இதன் இரு உச்சப் புள்ளிகள். என்றும் அழியாததும் , எல்லாமாய் இருப்பதும், புலன்களால் அறிய முடியாததும், யாராலும் விளக்க முடியாததுமான பர ஞானம் சொல்லப்படுகிறது. இது யாவருக்கும் உரியது. இங்குள்ள எல்லா உயிர்களும் பிரம்மத்திலேயே தோன்றி அதிலேயே மறைந்து பின் மீண்டும் தோன்றுகின்றன. பிரக்ருதியில் இருந்து சுதந்திரம் இல்லாத இவ்வுயிர்களை தாமே மீண்டும் மீண்டும் படைப்பதாக பிரம்மமே சொல்வதாக உள்ளது. தாமே தாய், தந்தை , பாட்டன் , மழை , வெய்யில், அழுக்கு , தூய்மை, நால் வேதம், சாகாமை , சாவு , உண்மை, தோற்றம் எல்லாம். யாரை வணங்கினாலும் தம்மையே வணங்குகிறார்கள். பத்தாவது அத்தியாயம் விபூதி யோகம். விபூதி என்ற சொல்லுக்கு வெளிப்பாடு என்று பொருள். தான் ஒவ்வொரு உயிரிலும் எவ்வாறு வெளிப்படுவதாக இங்கு சொல்கிறார். பிரம்மா முதல் எல்லாக் கடவுளும் தனது வெளிப்பாடே என்கிறார். அவையும் பிரளயத்தில் தோன்றி மறையும். உயிர்களில் உள்ள எல்லா குணங்களும் தம் குணங்களே. மலைகளில் மேரு, பாம்புகளில் வாசுகி, பசுக்களில் காமதேனு, யானைகளில் ஐராவதம், முனிவருள் கபிலன், மக்களுள் அரசன். ஆகவே பிரம்மமே உயர்ந்த இருப்பிடம்.
பதினோராவது அத்தியாயத்திலிருந்து மீண்டும் கீழ் நோக்கி இறங்குகிறது. முதல் பாதியை கீதையின் தியரி என்று சொன்னால், இரண்டாவது பாதியை applied தியரி என்று சொல்லலாம். விஸ்வரூப யோகத்தில் தானும், தன் எதிரிகளும் மற்ற உலகின் உயிர்கள் எல்லாம் ஒரே உடம்பில் தெரியும் விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனன் காண்கிறான். இது ஒரு முக்கியமான இடம் என்றே நினைக்கிறேன். பிரம்மத்தை மனதில் கற்பனை செய்ய ஒரு பிரம்மாண்ட உருவமே சிறந்தது. ஒரு திரட்சி மீனின் வயிற்றில் இருக்கும் பல்லாயிரம் சிறு மீன்கள் போல. அன்று ஒரு காணொளியில் வெள்ளை அணுக்கள், உடலில் புகுந்த வைரஸ்களை சேர்ந்து விரட்டும் காட்சியை கண்டேன். 1000x ஜூம் செய்யப்பட்டது, ஆனால் இன்று மத்திய ஆசியாவில் நடக்கும் போரை 1000x ஜூம் அவுட் செய்து விண்ணில் இருந்து பார்த்தாலும் அவ்வாறே இருக்கும். ஒன்று நம் உடலில் மற்றொன்று பூமியின் உடலில்.
அடுத்த அத்தியாயங்களில் பிரம்மத்தை அடையும் வழிகள் சொல்லப்படுகின்றன. அருவமான அதை , ஒரு உருவம் வைத்து மனதில் கொண்டு வரும் பக்தியும் தியானமும் சொல்லப்படுகின்றன. தனக்குள்ளும் இருக்கும் பிரம்மத்தை அறிதல் பற்றி உரைக்கப்படுகிறது. உடல் மற்றும் அதனுள் உறையும் உடலறிபவன் , இரண்டும் கண்ணாடியும் அதன் பிரதிபலிப்புமேயாகும்.
14-17 அத்தியாயங்கள் கபிலர் இயற்றிய சாங்கியத்தை விளக்குவதாக அமைந்துள்ளன. முக்குணங்கள் எவ்வாறு தோன்றின, அவை உயிரில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன, அவற்றால் வரும் சிக்கல்கள், துன்பங்கள் , அவற்றை ஒடுக்கி, பழக்கி மேம்படுத்தும் வழிகள் சொல்லப்படுகின்றன . அந்தக்கரணங்கள், மனதை அறியும் வழிகள் , உணவு, நல்ல மற்றும் அலைக்கழிக்கும் குணங்கள் என்னென்ன என்று வருகிறது.
பதினெட்டாவது அத்தியாயம் , கிருஷ்ணன் இதுவரை சொன்னதையெல்லாம் , மீண்டும் ஒருமுறை சுருங்கச் சொல்கிறார். மேற்கொண்டு மனதில் பட்டதை செய்யச் சொல்கிறார். அர்ஜுனன் தன் மயக்கம் தீர்ந்தது , ஐயங்கள் அகன்றன. அவர் சொல்லியவிதம் செய்வதாக சொல்ல முடிகிறது.



Comments
Post a Comment