வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க !
கடந்த வார இறுதியில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின் மணிக்கணக்காய் டெஸ்ட் கிரிக்கெட்டைப் பார்த்தேன். வெள்ளிக்கிழமை பார்த்ததும் துணி கிழிவது தெரிந்துவிட்டது. வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். மீண்டும் மதியம் மூன்று மணி அளவில் ஆஸ்திரேலியா நுனியில் தொங்கிக்கொண்டிருந்தது.
இது இரண்டுக்கும் இடைவெளியில் பண்டிட்டுகள் ட்வீட் விட ஆரம்பித்தார்கள். பும்ரா முதலில் கிழிந்தார். ஒரு கேப்டன் முன்பொருமுறை மைக்குக்கு முன் வந்து டீமில் யார் உள்ளே யார் வெளியே என்று சொல்லுமிடத்தில் பெயர் மறந்து போய் , கால்ச்சட்டைப் பையில் இருந்து பேப்பரை உருவி , பெயரைச் சொன்னார். இதை அசட்டை என்று சொல்லலாம். IPL டீமில் கேப்டன்களுக்கு எல்லார் பெயரும் தெரிய நியாயம் இல்லை. ஒரு ஊரே டீமில் இருக்கும்போது என்ன செய்ய முடியும். இதைப் போல் மறந்து போய் பும்ரா பேட்டிங் எடுத்து விட்டாரா தெரிய வில்லை. கடைசி நேரத்தில் வார்த்தை மாறி வந்து விழுந்து விட்டதா? வண்டி பழகிக்கொண்டு இருக்கும் போது ' ரோட்ல , டிவைடர் இருக்கு பாத்து'என்பார்கள் . நாம் அறியாமல் நம் வண்டி அங்கேயே செல்லும். சிலர் அதை முடிவில் இடித்து விடுவதும் உண்டு. அப்படித்தான் பேட்டிங் எடுத்தாரோ என நினைத்தேன். முதல் முறை கேப்டன் வேறு. பிட்ச் நெல் வயலில் நடுவில் தெரியும் வரப்பு போல் இருந்தது. வரப்பு தான் , நடக்கலாம் தான் , ஆனால் கால் பழக்கம் வேண்டும். ஒரு கால் அந்தப்பக்கமோ இல்லை இந்தப் பக்கமோ போய் விழுந்தால் , மீண்டும் எழுந்து வரப்பில் ஏறி சமாளிக்கலாம். ஒரே நேரம் இரண்டு காலும் நீர் வரப்பில் சறுக்கினால் என்ன ஆவது? பல கால்கள் வழுக்கி, மூலாதாரங்கள் அடி வாங்கிக்கொண்டிருந்தன.
பாவமாய் இருந்தது, பல 'காரியர்கள்' முடிந்து விடும் என்று சொன்னார்கள். இதற்க்கு சில வாரங்கள் முன்னால் இந்தியாவில் இருந்து போன நியூஸிலாந்துக்காரர்கள் திரும்பி வந்து கோச் முதல் கேப்டன் வரை எல்லோரையும் கேள்விக்குறியாக்கி விட்டுச் சென்றார்கள். பல வருடங்கள் முன் என்னுடைய ஐரோப்பிய மேலாளர் , இந்தியர்களுக்கு எதிரி IUS (Indians in US) என்று வேடிக்கைகையாகச் சொன்னார். இது கிரிக்கெட்டில் வரும் காலத்தில் உலகமெங்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது. மூன்று நான்கு புதுமுகங்கள் வேறு. பாவம் படிக்கல் என்று நினைத்தேன்.
வழக்கம் போல கே எல் ராகுல் லைப் லைன் வாங்கிவிட்டது முதல் இன்னிங்சிலேயே தெரிந்து விட்டது. கடைசி வரை மட்டையை பந்துக்கு காட்டவே இல்லை. எங்கே வடிவேலு வீச்சு அரிவாள் போல சட்டைக்குப் பின் சொருகி விட்டு , கை இரண்டும் பின்னால் கட்டி , நெஞ்சு நிமிர்த்தி நின்று விடுவாரோ என்று நினைத்தேன். பந்தை மைக்ரோ செகண்ட் , நானோ செகண்டுகளுக்கு ஜட்ஜ் செய்து கடைசியில் கீப்பருக்கு விட்டார். நீங்கள் குறைந்த ரேட்டிங் குடுத்து PIP (Performance Improvement Plan ) போட்டாலும் , PIP ஆடத் தெரிந்தவர் வேலையை தக்க வைத்து விடுகிறார். கூட்டமாய் இருக்கும் பஸ்சில் படிக்கட்டு விளிம்பில் தொங்கிச் செல்வது சிலருக்கு த்ரில். அது போல கே.எல். ராகுல், படியில் தொங்க எப்போதும் கூட்டமான பஸ்ஸுக்கு காத்து இருப்பாரோ என்று தோன்றுகிறது.
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி நடந்தால் பார்ப்பவரை உள்ளே இழுத்து விடுகிறது. படம் பளிச்சென்று தெரிகிறது. முன்பிலிருந்தே இப்படித்தான். 1992 உலகக் கோப்பையின் போது காலை 3 மணிக்கு ஒரு சில போட்டிகள் துவங்கும். வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள். எப்போதும் படிக்கிற பையன் கிரிக்கெட் நீண்ட நேரம் பார்க்க முடியாது. மூன்று மணிக்கு எழுந்து டிவி போடுவேன். போட்ட அடுத்த நொடியில் சத்தமில்லாமல் செய்வேன். ஆனால் ஆஸ்திரேலியாவின் ஒளிப் பிரகாசம் என்பது தனி. சூரியன் முதலில் உதிக்கும் இடம் அல்லவா ? நம் கண்ணையும் ஊடுருவி, தூங்கும் அப்பாவின் பிடரி வழியே கண்ணைத் தொடும். வேறு வழி கிடையாது. கொஞ்சம் அணைத்து குறட்டை ஒலி கேட்டதும் மறுபடி போட்டுக் கொள்வேன். நம் ஊரில் நடக்கும் போட்டிகளில் இந்த மாதிரி வெளிச்சம், தூய வானம் தெரிவதே இல்லை.
இவர்கள் போடும் ரன்னிங் கமெண்டரியும் தனி. அப்போதெல்லாம் டெட் கார்பெட், ஹென்றி ப்ளோபெல்டு , ரிச்சி பானட், இயன் சேப்பல் ,கவாஸ்கர் போன்றவர்கள். இப்போது மைக்கேல் வாகன், மார்க் நிகோலஸ் , மஞ்சரேக்கர், மாத்தியூ ஹெயிடன், பாண்டிங் போன்றவர்கள் இருக்கிறார்கள். சுடச் சுட விளையாடி முடித்தவர்களும், நம்மவர்கள், வருகிறார்கள்.
பள்ளிக்கூடத்தில் நோட்டுப் புத்தகத்தில் எழுதும் போது சிக்கனம் பிடித்தால் வாத்தியார்கள் 'நோட்டுல இப்புடி நுணுக்கினா எப்படி படிக்கிறது ? ' என்பார்கள். இந்த நுணுக்கம் இப்போது மைக்ரோ , நானோவெல்லாம் தாண்டி எங்கேயோ சென்றுவிட்டது. படிக்கல் அவுட் ஆகும்போது அவர் இடது முன்கால் தூக்கி , பின்கால் மட்டும் தரையில் படுவதே காரணம் என்று பேசிக் கொண்டார்கள். பிட்ச்சில் எங்கோ இருந்த விரிசல்களை திரையில் பிரம்மாண்டமாய் ஆக்கி , எல்லா நாட்களும் பேட்டிங் சிரமம் என்றார்கள். பிரண்ட் புட் இரண்டு முறை வந்தால், பாக் புட் போக வேண்டும் என்றனர். பின்னால் நின்றால் முன்னால் வரவே இல்லை என்று பேசினார்கள். டாஸ் ஜெயித்தால் என்ன செய்திருப்போம் என்று ஒவ்வொருவரும் கூறினர். யாரைத் தேர்வு செய்திருப்போம் என்று ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டனர். இதில் எல்லோரும் போக்குக்கு தகுந்தவாறே பதில் சொல்வார்கள். அப்போது ஜெயிக்கும் பக்கம் சேர்ந்து கொள்வது.
இதனிடையில் பேட்ஸ்மேன்கள் வருவதும் போவதுமாய் இருந்தது. ரோட்டில் கிராஸ் செய்ய ஆரம்பித்து நடுவில் வண்டிகளுக்கு இடையில் மாட்டி விடும் சிலர், குறிப்பாய் தாய்மார்கள் , நாம் அவர்களை மோதி விடுவது உறுதியாய்த் தெரிந்தாலும் , அதுவரை நம்மையும், நம் வண்டியையும் பார்த்தவர்கள், சடக்கென்று வேறு எங்கோ அல்லது எதிர்பக்கம் பார்க்க ஆரம்பித்து, இன்னும் வேகமாய் நடப்பார்கள். இந்த இடத்தில் அவர்களை இடிக்கக் கூடாத, அல்லது இடிக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் வந்து விடுகிறது. நீங்களாய் பார்த்துச் செய்ய வேண்டும். பௌலரும் இப்படித்தான். வெளியில் ஓங்கி அடிக்கும் நோக்கம் தெரிந்தாலும், உள்முயற்சி இப்பவோ எப்பவோ என்பது உறுதி. பாதி வழி சென்றபின் நமக்கு என்ன ஆகப் போகிறது.
இதன் நடுவில் என் பையனுக்கு டெஸ்ட் மேட்ச் மீண்டும் சொல்லிக்கொடுக்க வேண்டியதாயிற்று. கொஞ்சம் இடைவெளி விழுந்து விட்டது. 'ரெண்டு T20 மேட்ச் தொடர்ந்தா' என்று கேட்டான். 'இல்லப்பா , அஞ்சு நாளு மொத்தம்...ரெண்டு தடவ பேட்டிங்..விளாடி முடிச்சி நாலு அஞ்சு நாள் கடைசில ரன்னு கணக்கு பார்க்கணும்..அப்புறமா யாரு ஜெயிச்சாங்கன்னு தெரியும் '
'ப்ராக்கெட்ல இருக்குறது ரன்னா ...இல்ல பாலா?..'T20 ல இடம் மாறி இருக்கும் ' என்று அவனாய்ச் சொன்னான்.
'இல்லப்பா இதுல வேகமா விளையாடக் கூடாதுப்பா.. அப்புறம் அஞ்சு நாள் என்ன பண்றது'
'...'
'ஸ்லோ சைக்கிளிங் மாதிரிப்பா ' என்று சொல்லிப் பார்த்தேன்.
'ஸ்லோ சைக்கிளிங்னா என்னப்பா..?' எனக்கு இதை விளக்குவது இன்னும் சிக்கலாய் தோன்றியது.
'யாரு கால தரையில ஊனாம கடைசியில போறாங்களோ அவங்க வின்னர் ' என்றேன்.
'ஸ்லோவா போறவன் ஏம்ப்பா ஜெயிக்கணும் ?'
'வண்டில போகாம நடந்து போற மாதிரி... ... இது மாரத்தான்...ஸ்ப்ரின்ட் இல்ல ... '
'...'
'நேரந்தான் இதுல விளையாட்டுப்பா...நேரத்த ஜெயிக்கிறதுக்கு நேரத்த நினைக்கவே கூடாதுப்பா...அடுத்த பந்து ஒண்ணுதான் கணக்கு ' என்று எதோ சொன்னேன். எனக்கு மேற்கொண்டு சொல்லத் தெரியவில்லை.
" எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்

Comments
Post a Comment