Skip to main content

பின் பார்த்த கண்ணாடி



பின் பார்த்த கண்ணாடி

மது இவனிடம் இதை இப்போது மூன்று தினங்களாய் செய்யச்சொல்லி கேட்டுக்கொண்டிருக்கிறாள். இவன் ஏனோ அதைச் செய்யாமல் ஒத்திப்போட்டுக்கொண்டிருந்தான். மதுவின் பின்னால் இருந்து அவளுடைய ஒன்றுவிட்ட அக்காவுடைய துரத்தல் அவளுக்கு. காலையும் மாலையும் தொலைபேசியில் அழைத்து என்ன ஆயிற்று என்று கேட்கிறாள். அக்கணத்தில் அவளுக்கு அழைப்பு மீண்டும் வந்திருந்தது. 

 இவனுக்கிருந்த தயக்கம் பாலாஜியிடம் பேசியே பல வருடங்கள் ஆகியிருந்தன. இவனும் அவனும் பன்னிரண்டாவது வகுப்பில் சேர்ந்து  படித்தவர்கள். ஒரே தெருவில் வீடு. இவனது கிழக்கிலிருந்து மூன்றாவது, அவனது வீடு மேற்கிலிருந்து முதலாவது. நினைவில் இருப்பதெல்லாம் அவனுடைய பதின் பருவத்து முகம் மட்டுமே. இப்போது அவன் முகம் எப்படி இருக்கும் என்று இவனுக்கு கற்பனை செய்ய முடியவில்லை. அப்போதே பாலாஜி சற்றுக் கூனியே நடப்பான். ஒரு கித்தான் பையில் புத்தகங்கள், மஞ்சப்பையில் இரண்டடுக்கு டிப்பன் கேரியர். இரண்டடுக்கு கேரியர் திறந்து நடுவில் கிடையாய் கிடக்கும் கரண்டி பூட்டைக் கழற்றி சாப்பிடுவான். இவனைப் போலன்றி தினமும் இரண்டு வகை உண்வு, இரண்டுக்கும் மேல் தனித் தனியாய் தொடுகை இருக்கும்.

'என்னங்க, இன்னிக்காவது இந்த வேலையைச் செய்யக்கூடாதா?' மது போனை கேட் செய்து நேரே வந்தாள்.இனிமேல் கஷ்டம். 

'சரி, போன எடு' .

'இந்த பொண்ணுக்கும்,   என்னோட பிரண்டுக்கும் என்ன ரிலேஷன்?'

'அவரோட அண்ணன்  ஒய்ப்க்கு , அக்காவோட முதல் பொண்ணு'

'இந்தப் பையன் யாரு, என்ன வேலை'

'ஒன்னு விட்ட அக்காவோட எங்கயோ சொந்தம்,  பையன் பயோ கான் ல ரெசெர்ச் என்ஜினீயர்'

மனதில் ஒரு வரைபடத்தை வைத்துக்கொண்டு தொலைபேசியில் எண்ணைத் தேடினான். இதைப் போலவே என்றோ ஒரு நாள், எதோ ஒரு பேச்சில் , நினைவாய் நழுவிக்கொண்டிருக்கும் மற்றொருவர் தொடர்பில் இருந்து அவனுடைய தொலைபேசி எண்ணை வாங்கியிருந்தான். கையால் எழுதியிருந்தால் முகவரி தொலைக்கலாம், எழுத்து நீர் பட்டு அழியலாம், புத்தகத்தை செல் அரிக்கலாம் . தொலைபேசி முகவரி எளிதில் தொலைப்பதில்லை.  இந்த வாய்ப்பை விட்டால், இதுவும் சில எழுத்தாய் , உதிரி நினைவாய் சுருங்கி விடலாம்.

முதல் இரண்டு ரிங்கிலேயே போன் மறுமுனையில் எடுக்கப்பட்டது. மாறாக இவன் நினைத்தது மிஸ்ட் கால் ஆகும் என்றுதான் . 

'பேசுறது யாருன்னு தெரியுதாப்பா?' இவன் ஆரம்பித்தான்.

ஒரு நொடி மௌனத்தின் பின் , 'ரவி , உன் குரலை கண்டுபிடிக்க மாட்டேனா ' என்றான். இவனுக்கு ஆச்சரியம். அவன் ட்ரு காலர் வைத்து பார்த்துவிட்டு சொல்லும் வகையில்லை. மேலும் இவன் பெயர் ட்ரு காலரில் ரவியென்று வருவதில்லை. அலுவலகப் பெயரே வரும்.  இவனுக்கு அவனுடைய குரல் அதே பழைய குரல், அவனுடைய அப்பாவின் குரல். ஆனால் மிக சன்னமாய் ஒலித்தது. அவன் அப்பா இறந்து பல வருடங்கள் ஆகியிருந்தன. அம்மாவும் காலமாகியிருந்தார்கள்.இருவரும் ஆசிரியர்கள் .அவனும் அவன் அண்ணனும் தான் இப்போது. 

அப்போதைய முதல் கல்வி பாலி டெக்னிக் என்று இருந்த காலம். முதல் மாணவர்கள் எப்போதும் அங்கேயே செல்வார்கள். இரண்டாம் வருடத்தில் உறை போட்ட துப்பாக்கி போன்று ஒன்றை தினமும் எடுத்துச் செல்வார்கள். சிவில் என்ஜினீயர்கள் மொட்டை வெய்யிலில் ரோட்டில் ஒரு உயர்ந்த முக்காலியை வைத்து அடிக்கடி ஒரு கண்ணால் பார்த்து நாள் முழுதும் நோட்டில் குறித்தபடி இருப்பார்கள்.  மூன்று வருட முடிவில் பெரும்பாலும் எல்லோரும் வேலையில் இருப்பார்கள். சிலர் நேரே சில வருடங்கள் வேலை பார்த்து இன்ஜினியரிங் ரெண்டாம் வருடம் நுழைவார்கள். வேலை பார்ப்பவர்கள் கையில் நூறு ரூபாய் நோட்டுகள் வந்துவிடும். பர்ஸ் வாங்கிவிடுவார்கள். ரப்பர் செருப்பு மாறி தோல் செருப்பு வந்துவிடும். நிறைய நைட் ஷோ சினிமா போவார்கள். பாலாஜியும் இந்த வழியே வந்தவன் தான். பி.இ எலக்ட்ரிகல் என்ஜினீயர். ஊரிலேயே வேலை பார்த்தான் என்றுதான் சொன்னார்கள்.

இவன் படிப்பில் பின் தங்கி மேல் படிப்பு நுழைய வேண்டியதாகியது. திட்டம் போட்டு செய்தான் என்று எதையும் சொல்வதற்கில்லை. அதுவாய் நடந்தது. புதுயுகத்தின் விளிம்பில் , விதியின் வசமாய் சென்னையில் நுழைந்த லட்சோப லட்சம் பேர்களில் இவனும் ஒருவன். பின்னர் இங்கிலிஷ் பேப்பரும் , வாய்ப்பாடும் படித்தவர்களுக்கெல்லாம் ஒரு யோகம் வந்தது. அந்த சந்தியில் இவன் சரியாக அங்கே இருந்தான். ஆனால் அவனோ முந்தைய யுகத்தின் உச்சியில் தான் நின்று கொண்டிருந்தான். யுகம் நகர்ந்தால் யார் தான் என்ன செய்வது?  ஆனால் மனிதர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் தாவ முடியுமா? எதாவது சரியான துருப்புச் சீட்டு இருக்கிறதா? ஏன் கையில் இல்லாதது வேண்டியிருக்கிறது?. தெரியவில்லை.

'குரலக் கேட்டு எவ்வளவு வருஷம் ஆச்சுப்பா, நீ எங்க மெட்ராசில்ல? எத்தனை குழந்தைங்க?'

'ஆமாப்பா , பதினைஞ்சு வருஷம் மேல ஆச்சு, ஒரு பொண்ணு ஒரு பையன், ஏழாவது ஒன்னு, நாலாவது ஒன்னு. ' - இவன் அவனை அந்த  நீண்ட பழைய வீட்டின் , சுவரில் முதுகு சாய்த்து, வேட்டியை உள்மடித்து, உட்கார்ந்து பேசுவதாய் கற்பனை செய்துகொண்டான்.  

தயக்கத்திற்குப் பின் கேட்டு விட்டான்.

'நீ ராஜபாளையம் மில்ஸ்-ல தான் இல்ல?'

'ஒரு காலத்தில ஆமா ..இப்போ வேலைய விட்டுட்டேன் ரவி..'

'அப்போ..'

'ஒரு பிள்ளையார் கோவில் கைல இருக்கு...தினமும் ரெண்டு வேள திறந்து வச்சு மணியடிக்கணும்...தாத்தா தொட்டு விட்ட பாக்கி...எனக்கும் வேண்டிருக்கு...வீட்ட விட்டுக் கொஞ்ச நேரம் பிச்சிட்டு வந்திறலாம் பாரு... '

என்ன கிடைக்கும் என்று இவன் கேட்க நினைத்தான்.

'பஸ் ஸ்டாப் பக்கத்துல இருக்கிற கோவில் இல்ல?'

'மேல் கொண்டு ஜோசியம் படிச்சேன்..ஊர்ல எல்லாருக்கும் நாள் கிழமைன்னா நம்ம தான்...நிறைய ஆளுங்க நம்மட்டதான் ஜாதகம் பார்ப்பாங்க..'

ஜோசியம் பார்ப்பவனாக அவனை இவனுக்கு கற்பனை செய்ய முடியவில்லை. அவனால் சிரிக்காமல் இருக்க முடியாது. யாரோ ஒருவரிடம் சிரித்தாலும் எல்லாம் போய்விடுமே.


'ஊர்ல நம்ம செட்ல நீ மட்டுந்தான் இப்ப இல்ல?'

'மத்த எல்லாம் வந்தா வருவாங்க...நீ இப்பக்குள்ள வரல இல்ல...போன் பண்ணது சந்தோசம்...எவ்வளவு சேட்டைகள் செஞ்ச நாட்கள்..எப்பவாவது நினைப்பேன்...காத்திருக்க நேரமில்லை படம் ஒனக்கு ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்..'

அன்றெல்லாம் வார நாட்களில் காலை ஷோ பொதுவாய் யாரும் பார்க்க மாட்டார்கள். உள்ளே வெளியூர் வியாபாரிகள் போன்று பொழுதை வலுக்கட்டாயமாக போக்குபவர்கள் மட்டுமே இருப்பார்கள். அவனும் இதில் ஏற்கனவே பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். டிக்கெட் கொடுப்பவர் அடையாளம் கண்டு கொண்டார்.  சரியாய் அதே சீட்டில் அமர்வான். ரொம்பப் பின்னால சீட்டுகள் கிழிந்திருக்கும் என்பான். உடனே கொண்டுவந்த காலை உணவை உண்பான். அன்று ரவை உப்புமா. 

'சிவரஞ்சனி  கார்த்திக் டூயட் பாட்டு ஒன்னு வரும்...அப்ப மட்டும் என்ன எழுப்பு...நீ பாரு..படம் நல்லா இருக்கும்'.

அன்று சனிக்கிழமை , அரை நாளே பள்ளி. இல்லையென்றால் இன்னொரு ஷோ பார்த்தால் தான் ஆறு மணி ஆகும் என்றான்.

'வீட்ல எப்படிப்பா சமாளிப்ப?' 

'அம்மா பிரச்சினையில்ல...அப்பா வைவாரு கவலையில்லை...அண்ணன்தான் பிரச்சனை..அடிப்பான், வலிக்கும்..பல்ல கடிச்சுக்கிடுவேன் ..நமக்கு ஒரு நாள் வரும்ல...'

அவனுடைய முகத்தில் இருந்து அவனுடைய நகைச்சுவை உணர்வை சொல்லிவிட முடியாது. மேலும் அதை அப்பாவித்தனமாக அதை வைத்துக் கொள்ள முடியும். நெருங்கிய மிகச்சிலருக்கே தெரியும்.
 'அண்ணன் இப்ப எங்க இருக்கான்'  என்று கேட்டேன்.
'காலேஜ் HOD , வேலைய விட்டான் இப்ப...ரெண்டு அட்டாக் ஒரு பைபாஸ்...வேகம் மட்டுப்பட்டுருக்கு..இப்ப பரவால்ல..'
'நரஸி வருவானா ஊர்ப் பக்கம்' என்றேன். அவனும் இவனும் இன்னும் நெருக்கம். அவரும் எப்போதும் முதல் மாணவன். 
'மும்பைல இருந்தான்...அப்புறம் இப்ப மெட்ராஸ்ல...சுகர் வந்து கொஞ்சம் சிக்கல்னு கேள்விப்பட்டேன்...அவனுக்கு தெரியாம அவன் வீட்ட எல்லாம் சேந்து வித்துட்டாங்க...அதுல இருந்து இங்க வறதில்ல..நாலஞ்சு வருஷம் இருக்கும்...வந்தா வருவான்... '
'பாலு அங்கதான் ராஜபாளையம் இல்ல..' 
'ஆமா , அவனை பார்த்தா நம்ப முடியாது...ஒடம்பு ஏனோ பெரிசாப் போச்சு...பழய ஒடம்புல நாலு பாலு சேத்தா எப்படி இருக்கும்னு பாரு...பொண்ணுக்கு கல்யாணம்...நான் தான் ஜாதகம் பாத்தேன் ..எல்லாம் நல்லா நடக்கும் செய்டான்னேன்..சில பரிகாரங்கள் செய்யச் சொன்னேன்... நான் தான் செஞ்சு வச்சேன்....'
...
'ரொம்ப நடந்து போச்சுப்பா...நடுவுல ஸ்டாக் மார்க்கெட் பேய் பிடிச்சது...லட்சக் கணக்குல பணம் விட்டேன்...ரீடைல், பியூச்சர்ஸ் ரெண்டும் பிடிச்சு ஆட்டுச்சு...தூக்கம் பூரா நம்பர்கள்...எந்திருச்சா நம்பர்கள்...எதிர் வீட்டு அனந்துகிட்ட கத்துக்கிட்டேன்...அவன் என்கிட்டே கடன் வாங்கி, குடுக்க முடியாம சண்டையாகி, கொரோனா வந்து செத்தான்...தூக்க ஆளு இல்ல...ஸ்டாக்கில அடிக்ட் ஆகி தூக்க மாத்திரை இல்லாம தூங்க முடியாம போச்சு...சேத்ததெல்லாம் எப்படிப் போச்சுன்னு தெரியல...எப்படியோ கடவுள் வெளிய கொண்டு வந்தாரு...அதான் கோயில் பாக்கேன்..ரெண்டு பொம்பள புள்ளைக ...கடன் வாங்க மாட்டேன்...நாளைக்கு கடவுள் பார்ப்பார்...அவருக்கு என்ன செய்யணும்னு தெரியும்... '  
இன்னும் ஒவ்வொரு இடமாய் சொல்லியபடி சென்றான். அபிராமி அந்தாதி பாடும் இறைவனே கதியென்ற அந்த அம்மாளின் உடல் உயிர் பிரிந்தது கவனிக்கப்படாமல் அழுகிவிட்டதாகச் சொன்னான்.
சாவின் விளிம்பில் எல்லோருடைய வாழ்வும் ஒரு சுருக்கமாய் சில மணித்துளிகள் ஓடும் என்று படித்திருக்கிறேன். இறப்பின் அருகில் சென்று மீண்டவர்கள் சொல்வது. எல்லாம் கலைந்து கிடப்பது போல் தோன்றியது. இல்லை எல்லாம் சரியாய்த் தான் நடக்கிறதா? நடந்து முடிந்து பின் திரும்பிப் பார்த்தால் தான் இப்படியா? இல்லை பிறரில் நம்முடைய எதிர்பார்ப்புகள் தான் இவையா? இவன் சொல்லும் இவர்கள் எல்லோரும் கொடிகட்டிப் பறந்திருக்க வேண்டியவர்கள் இல்லையா?

'ஜோசியம் பக்கம் நீ எப்படிப்பா...' எனக் கேட்டேன்.
'வேற வழியில்லாதப்போ இது ஒண்ணுதான் வழியிருக்குன்னு சொன்னது...அதான் பிடிச்சுக்கிட்டேன்...எல்லாம் நம்ம சொல்றதுதான் இல்லையா...ஒனக்கு ஈஸ்வரன் பிள்ளை கணக்கு வாத்தியார் ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன்...நான் அவர்ட்ட வாங்காத அடியா..கடைசி பெஞ்சுல இருந்து எந்திச்சுப் போய் பேப்பர வாங்குறதுக்குள்ள வகுப்பெல்லாம் கேக்குற மாதிரி 'லே எல்லாம் பாருங்கலே ..இவன் மார்க்க..' பேப்பர கீழ தரையில போட்டுருவாரு ...அவர ஒரு நாள் கல்யாணத்தில பாத்தேன்...நான் உங்க ஸ்டுடென்ட்டுன்னு சொன்னேன்...அப்புறம் ஒரு வழியா ஞாபகம் வந்துச்சு...வீடு பூராம் சிக்கல்...நாலஞ்சு தடவை வீட்டுக்கு போய் பாத்து பரிகாரம் சொன்னேன்...திரும்பி சரியாகிட்டு வரும்போது கொரோனால செத்துப் போனாரு...கடைசில பாலாஜி இப்ப உனக்கு கணக்கு ரொம்ப நல்லா வருதுலே...நீ இல்லாம ஏன் கணக்கு தப்பாகியிருக்கும்னாரு ...'  

நம் வாழ்க்கையும் என்றாவது ஒரு நாள் இப்படி ஒரு சில சொற்களுக்குள் முடிந்துதான் போகும். இல்லை பிறர் வாழ்வில் நாமும் ஒரு சில சொற்களாகவே இருக்கிறோம்.

கடைசியில் அந்த விஷயத்தைச் சொன்னேன். அவன் அண்ணன் மனைவி வழியில் இருக்கும் ஒரு பொண்ணுக்கு ரெபரென்ஸ் கிடைக்குமா என்று கேட்டேன். அவன்  அந்த இடம் வேண்டாம் என்றான். சரியென்று சொல்லி போனை வைத்தேன்.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...