Skip to main content

இன்னொரு மெஷின் யுகம்



அடிக்கடி காய்கறிக் கடைகளுக்குப் போகும்போது பில் போட கடைக்குப் புதிதாக வேலைக்கு வந்துள்ள மாணவிகளிடம் மாட்டிக் கொள்ள நேரிடுகிறது. இன்று அப்படி ஆனது. நம்மைப் போல் ஒருவனை கடவுள் கண்டுபிடித்துக் கருணையுடன் அவர்கள் வழி அனுப்புகிறான் என்று எடுத்துக் கொள்கிறேன். ஒரு வெள்ளைக் கோட்டை மாட்டியிருந்தார். மொத்தம் நாலு பேர் உள்ள பில் கவுண்டர். எல்லாம் இளம்பெண்கள் , இவர் மூணாவது மெஷினை ஓட்டிக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரும் பில்லை அடித்துத் தள்ளினார்கள். .
நான் இந்த இடம் தேடி இப்போதெல்லாம் வருவதன் காரணம் நாளிதழில் வந்துகொண்டே இருக்கும் முழுப்பக்க விளம்பரம். இதைப் போலிருக்கும் வேறு கடைகளில் தனியாய் ஒருவர் நிறுப்பதற்கென்றே போட்டிருப்பார்கள். அவர் அதில் நிபுணர். காய்கறிகளை அதில் ஒவ்வொன்றாய் வைத்து , அதற்குள்ள எண்ணை நினைவில் கொண்டு வந்து , அதை அழுத்த வேண்டும். மெஷினுக்கு அந்தக் காய் என்பது அந்த நம்பர் தான் . ஒரு இடத்தில் நிறுத்து நிறுத்து அவர் கைகளே எண்ணை வரவழைக்கும். சில சமயம் வீட்டிலிருக்கும் அவரை போன் போட்டு முதலாளி நம்பர் கேட்பார்.
எனக்கு ஒரு நொடியில் இவர் தோதுப் பட மாட்டார் என்று தோன்றியது. என்னிடம் ஒரு கொஞ்சம் பெரிய ஷாப்பர் அளவுப் பை நிறைய காய்கறி இருந்தது. பையை இழுத்து அடுத்த இடம் போலாமா என்று கையை வைத்தேன். மெல்லியதாய் எதிரில் பிடித்து இழுத்து மறுத்தார்.
மூன்றாவதாக இருக்கும் இவருக்கு மூன்று சிக்கல்கள். ஒன்று கம்ப்யூட்டர், இரண்டு காய்கறிக்குள்ள உள்ளீட்டு எண், மூன்றாவது காய்கறிகளுக்குள்ள ஆங்கிலப் பெயர். செர்ரி டொமட்டோவை தூக்கி 'அக்கா நம்பர் ஏனு ?' என்றார். இரண்டு அக்காக்கள் இரண்டு வேறு நம்பர் சொன்னார்கள். முதலில் போட்ட நம்பர் உள்ளே இல்லை என்று தப்பு காட்டியது. கான்செல் அழுத்தாமல் போகாது. இவர் தொடுதிரையில் அதன் பின்னால் உள்ள அட்டவணையை அழுத்திய வண்ணம் இருந்தார். அது அதிர்ந்து கோபத்தை வெளிப்படுத்தியது. 'கான்செல் பிரஸ் மாடி' என்றேன். பின்னர் கொய்யாப்பழம் கண்டுபிடிக்க வேண்டும், நம்பர் கேட்டு உள்ளே அடித்தார். 421 கிராம் என்று எடைமுள் காட்டியது. இவர் அதே 421 ஐ உள்ளே அழுத்தினார். கணக்கிட்டுத் தெரிந்த கொய்யாப் பழ விலையைப் பார்த்து என் இதயம் அதிர்ந்தது - 41,679 . அது புள்ளி 421, முதலில் ஒரு புள்ளி வைக்கச் சொன்னேன். எனக்கும் சிலவற்றின் ஆங்கிலப் பெயர் தெரியவில்லை. பாதி வெட்டிய கருணைக் கிழங்கு மல்லாந்து படுத்து என்னைப்பார்த்து சிரிப்பது போல் இருந்தது. அதனருகில் பூச்செண்டு போல் ஒன்று கட்டிக் கிடந்தது. பெயர் நினைவில் வரவில்லை , ஆம் லெட்டூஸ். அதன் பின் நீண்ட கத்தரிக்காய், அதன் பெயர்?
இதற்குள் சூப்பர்வைசர் வந்தார். எல்லா நம்பர்களும் கீழே பேப்பரில் இருப்பதைக் காண்பித்தார். 'பேக மாடு பேக்கு, ஜல்தி , ஜல்தி' என்று காதில் சொல்லிவிட்டுப் போனார்.
இப்போது நான் கீழே இருக்கும் தாளைப் பார்த்து ஒன்றொன்றாய் நம்பர் சொன்னேன். காதில் வாங்கி உள்ளே செலுத்தினார். சென்றமுறை பார்த்தவருக்கு இவர் பரவாயில்லை. பில் வெளியே வந்தது. கல்லூரி எல்லாம் படித்திருக்க வாய்ப்பில்லை. இவரும் வேலை பார்க்கிறாரென்றால், வீட்டின் நிலைமை என்னவோ? அண்ணன் , தம்பி உண்டோ? அவர் படிப்பாரா? இல்லை இவர்தான் அவர்களை படிக்க வைப்பாரோ ? அதெல்லாம் சரி , செர்ரி டொமட்டோ ஒரு முறையேனும் ஒரு பழம் எடுத்து வாயில் போட்டிருப்பாரா ?
எல்லாம் நிறுத்து முடித்தாயிற்றா என்று என்னிடம் கேட்டார். ஒரு சில பைகளை நிறுத்தவைகளுடன் வைத்திருந்தார். அவை இன்னும் ஆகவில்லை என்று சொன்னேன். மீண்டும் சில உள்ளீடல்கள்.
இங்கும் தவறுகள் செய்துகொண்டே இருந்தால் , வேலையில் இருந்து நிறுத்திவிடுவார்கள். மூவரில் ஒருவர் இவர் என்ன கேட்டும் பதில் சொல்லவே இல்லை என்பதை நினைத்தேன்.. ஆனால் , இவர் பிழைத்துக் கொள்வார். கண்ணில் அச்சமில்லை. ஆண்டவன் நம் போல் ஆட்களை இன்னும் சில நாட்கள் அனுப்புவான்.
வரிசையில் எனக்குப் பின்னால் இருந்தவர் ஒரு நேபாளி. அவருக்குப் பின்னால் யாரும் இல்லை.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...