இன்று திங்கள் கிழமை, கொஞ்சம் கடினமான நாள். எழுந்தவுடன் வேலையைப் பற்றிய நினைப்பு வந்து மனதை மிரட்டும். அடுத்து சரியாக தூங்கி முடித்தோமா என்ற கவலை. ஒன்பதரை மணிக்கு மீட்டிங், அப்போ எவ்வளவு முன்னால் கிளம்ப வேண்டும், அதற்குப் பின் நாளில் என்ன செய்து முடிக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் தலகாணியிலேயே துவங்கி விடும். ஜன்னல் வழி நூலாய் வர ஆரம்பிக்கும் பகலாகும் இருட்டைப் பார்த்து , இது இன்னமும் கொஞ்சம் நீளாதா என்றே நினைக்கத் தோன்றும். அன்றைய தினம் உங்கள் தலையணை அடியில் உங்களுக்காக மடித்து வைக்கப் பட்டுள்ளது, இன்று புதிதாய் பிறந்தோம் போன்ற சிந்தனைகள் வரவே வராது.
இப்படி இன்றைய நினைப்பு போய்க் கொண்டு இருக்கும் போதுதான், 1000-ம் மணி படிப்புக்காக புத்தகத்தை எடுக்கச் சென்றேன். (தினம் ஒரு மணி காலைப் படிப்பு முயற்சி). ஸ்ரீ தனது படுக்கையில் இருந்து புரண்டு இருந்தான் . இரவில் இவன் தூங்குவதற்கு எல்லோரையும் அமட்டுவது என் வேலை. நேற்றும் அவ்வாறே நடந்தது . அம்மாவும் , அக்காவும், சிரித்து அவனை எழுப்பிய வண்ணம் இருந்தார்கள். இவனும் தலையைத் தூக்கிப் பார்த்த வண்ணம் இருந்தான். பொதுவாக முகம் இழுத்து போர்த்தியிருக்கும் இவன் முகம் தெரிந்தது. தூங்குகிறானா, விழித்திருக்கிறானா என்று பார்த்தால் தெரியவில்லை. நான் அவனை கண்ணை முழித்து பார்த்தேன். அவன் வெள்ளைக் கண் திரையும், வெள்ளைப் போர்வையும், பெரிய இரு வெள்ளை முன் பற்களும் தெரிய ஆரம்பித்தன. எனக்கு ஒரு கணம் இரண்டு பற்களும் இரண்டு வெள்ளைப் பூக்கள் போல் தோன்றின .
அப்போது தான் அவன் விழிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.
'இதுக்குள்ளவா எந்திருச்சுட்ட?' என்றேன். 'அப்பா, நல்லா ஏமாந்த !! ' என்று படுக்கையில் எழுந்து இருந்து கீழே குதித்தான். ஹால் நோக்கி ஓடினான். அம்மாவிடம் நான் ஏமார்ந்ததைச் சொல்லி மீண்டும் ஒருமுறை சிரித்தான். கீழே கிடந்த புட்பால் - ஐ இரு கால்கள் நடுவே கிள்ளி மெதுவாய் கன்னத்தில் தட்டும் விதம் தட்டி வீடு பூரா ஒரு ரவுண்டு அழைத்துச் சென்று திரும்பவும் அதே இடத்தில விட்டான். இதையெல்லாம் வேடிக்கை பார்த்தவாறு இருந்த எனக்கும் உற்சாகம் பிறந்தது.
இப்போது பெங்களூரில் வசந்த காலம். குளிரும் வெம்மையும் சேர்ந்து முயங்கும் காலம். அதிகாலையில் வீட்டிற்குள் வெம்மையாகவும், வெளியே குளிர்ந்தும் இருக்கும். ஊரே பூக்களால் நிறைந்து இருக்கிறது.
நான் செல்லும் வழியெங்கும் மரங்கள் நிறைந்திருக்கும். சில கிலோமீட்டர்கள் மர நிழலில் செல்ல முடியும் . இன்று அண்ணாந்து பார்த்தவாறு சென்றேன்.
jarul அல்லது trumpet எனும் வசந்த ராணிப் பூக்கள், இளஞ்சிவப்பு பூக்கள் மட்டுமே இருக்கும் மரத்தில், அதன் மடி எல்லாம் பூக்கள். ஒரு கொப்பில் உள்ள பூக்கள் சேர்ந்து அழகிய சிறு பந்து போல் தோன்றின.
சில நீல வண்ணத்திலும் , மஞ்சள் நிறத்திலும் பூக்கின்றன. இம்மரங்கள் தென் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு லால்பாக்கில் நடப்பட்டன என்று படித்தேன் . ஏன் பூக்கள் மனித மனதிற்கு இவ்வளவு முக்கியமாய் இருக்கின்றன?.
இரண்டு பருந்துகள் வட்டமிட்டவாறு, விலகி , தன் இறகுகளால் மோதி, மீண்டும் விலகின. ஒன்றின் கீழ் ஒன்று பறந்து, இடித்த பின் , திரும்பவும் ஒரு நொடி தலை கீழாய்ப் பறந்து, விழும் முன் , நடு வானத்திலேயே புரண்டு எழுந்தது.
இன்னும் பூக்கள். ஒரு குட்டித் தூரிகை போல் இளஞ்சிவப்பு பூக்கள் பூக்கும் மழை மரங்கள். வெள்ளையிலும் , இளஞ்சிவப்பிலும் காகிதப் பூக்கள்.
சில மரங்கள் இலைகளை உதிர்க்கத் தயாராய் பழுக்க ஆரம்பித்து இருந்தன. மரங்களின் இலைகள் ஒன்றொன்றாய் கழுவித் துடைத்த வண்ணம் ஒளிர்ந்தன, அப்போது எண்ணெய் தடவி வாரப்பட்ட தலை போல . பல முறை சைக்கிளை நிறுத்தி நின்று பார்த்தேன். ஆனாலும் ஆபீஸ் போய்ச்சேர வேண்டி இருந்தது. வழியில் வரும் cubbon park -ல் நுழையலாமா என்று நினைத்தேன், இன்று இல்லை.

Comments
Post a Comment