கீழ் நோக்கி வளர்தல்
மாலை இருள் வர ஆரம்பிக்கும் வேளையில் வீட்டிற்குள் இருப்பது ஏனோ எப்போதும் ஒரு சிறு சோர்வை அளிக்கிறது . நேற்றும் அப்படித்தான். ஜன்னல்களின் கண்ணாடிகள் வழியே அடுத்த வீட்டு ட்யூப் லைட்டின் ஒளி கண்ணில் பட ஆரம்பித்திருந்தது . அடுத்த வீட்டு டிவி-கள் தெளிவாய் தெரிய ஆரம்பித்தன . எங்கிருந்தோ கடைசிப் பறவை வானத்தைக் கடந்தது. அதை எதிர்த்து ஒரு பெரிய வௌவால் கூட்டம் அதைப் பார்த்தபடி கடந்து சென்றது .சில தெரு நாய்கள் தூங்க ஆரம்பித்திருந்தன. குழந்தைகள் அடுத்த நாள் தேர்வை எண்ணி படிக்க ஆரம்பித்து இருந்தனர் . ஒருவர் சத்தத்துடன் தெருவெங்கும் கொசுமருந்து அடித்தபடி சென்றார். மேகமே கீழ் இறங்கி வந்தது போல் இருந்தது. சாலையில் வண்டிகளின் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன. புத்தகம் ஒட வில்லை. எங்காவது வெளியில் சென்று வருவது என்று நீலாவைக் கூட்டி வெளியில் வந்தேன்.
வேறு எங்கு செலவில்லாமல் செல்ல முடியும்- கோவில்தான். அன்று ஒருவர் கேட்டார், இப்போதெல்லாம் ஏன் கோவில்களில் கூட்டம். இடம் தான் பிரச்சனை. நேற்று 2 மணி நேரம் உட்கார இடம் இல்லாமல் ரோட்டில் நடந்தபடி, நின்றபடி பொழுதைக் கழித்தேன். இருட்டும் முன் பார்க்குகளை மூடி விடுகிறார்கள். நகரில் உட்கார இடம் கிடைப்பது சிரமம். காபி டே போன்ற இடங்கள் இந்த இடைவெளி நிரப்பத் தான், இவை பற்றி மேலே சொல்ல வேண்டியதில்லை. நமக்கே உட்கார இடம் இல்லாத வேளையில், நடு ஊரில் ஆல மரத்துக்கு இடம் கிடைக்குமா?
இதற்கு முன் பல முறை இந்தச் சிறிய கோவிலுக்குச் சென்றிருந்தாலும் இந்த ஆல மரம் கண்ணில் படவில்லை. ஆலமரம் கண்டே சில வருடங்கள் இருக்கலாம். இதற்கு முன் குஞ்சூர் செல்லும் வழியில் அல்லி பூக்கும் சிறு குட்டை மேல் ஒரு சிறிய ஆலமரம் பார்த்த ஞாபகம்.
இவ்வளவு பெரிய ஆல மரத்தைக் கோவிலின் உள்ளே கண்டதும் என் மனம் எழுச்சி கொண்டது. கோவிலுனுள் ஒரு பெரிய யானையைப் போல் நின்று இருந்தது. ஒரு மாதிரி மரத்தின் போக்கை அட்ஜஸ்ட் செய்து காம்பௌண்ட் சுவருக்குள் அடக்கியிருந்தார்கள். தரையெல்லாம் சிறு இரும்புத்தூண்கள் போல் விழுதுகள். நாகங்கள் போல் இன்னமும் மண்ணில் இடம் தேடி நெளியும் விழுதுகள். சுவருக்கு அப்பால் ஒரு கால் வைத்தவாறு ஒரு பெரிய விழுது வேர் கொண்டிருந்தது.
எப்போதும் ஆலமரத்தை நினைத்தபின் மனதில் தோன்றுவது ஏனோ மனித மூளையின் படமே. ஒரு பெரிதாக்கப்பட்ட broccoli போலே, கைப்பிடியில் ஒரு ஆலமரம்.
இந்த ஆலமரம் இன்னும் இங்கே ஊரின் நடுவில் இருப்பதற்கு காரணம் , இது மேல்நோக்கி வளரும் ஒவ்வொரு கணமும் அதனால் கீழ் நோக்கி வளரமுடிவதுமே ஆகும். வேர், தண்டாய் , இலையாய் , காயாய் , கனியாய் , விதையாய் ஆகும் போது, ஏதோ ஒன்று மீண்டும் வேர் நோக்கிச் செல்கிறது.
மரம் வேர் ஆகிறது..வேரும் மரமாகிறது...
கணிணியில் search algorithm என்று ஒன்று உண்டு . தரவுகளை ஸ்டோர் செய்து பின்னர் வேண்டியபோது எடுத்துக்கொள்ள கையாள வேண்டிய வழிமுறை. இதில் ஒன்று மரமாக உருவகப் படுத்துவது. இலைகளை தரவுகள் என்று கொண்டால் , கிளைகளின் வழியாக எப்படி இலையை விரைவாக அடைவது. இதில் எங்கு தரவு இருக்கிறது என்பதைப் பொறுத்தும், எவ்வளவு இலை, கிளைகள் இருக்கின்றன என்பதை பொறுத்தும் , தரவைக் கண்டுபிடிக்கும் நேரம் கூடும். இதில் recursive(மறுநிகழ்வு) ப்ரோக்ராம் என்று ஒன்று உண்டு. ஒரு நுனியை அடைந்தும் கண்டடைய முடியவில்லையானால், அடுத்த கிளையில் தேட ஆரம்பிக்க வேண்டும். முழு மரத்தையும் ஒரு எறும்பு ஊர்ந்து தேடுவது போல். இதில் recursive(மறுநிகழ்வு) ப்ரோக்ராம் என்று ஒன்று உண்டு. இதில் கண்டு பிடித்து முடியும் வரை ஓயாத முடிவில்லாத் தேடல் ஒளிந்துள்ளது. தேடும் எறும்பு எல்லா நுனிகளையும் காணும் வரை.
"The power of recursion evidently lies in the possibility of defining an infinite set of objects by a finite statement. In the same manner, an infinite number of computations can be described by a finite recursive program, even if this program contains no explicit repetitions. " - — Niklaus Wirth, Algorithms + Data Structures = Programs,
நம் கண்முன் இருக்கும் முடிவிலியின் தோற்றம் தான் ஆலமரம் என்று தோன்றியது.
வீட்டில் சென்றவுடன் வெண்முரசின் சொல்வளர்காடு எடுத்துக் படித்தேன். பாண்டவர்கள் சூதில் தோற்று காடேரும் பொது போகும் இரண்டாவது காடாக சுனகம் என்னும் காடு வருகிறது. சௌனகர் குருநிலை, ஆலின் கீழ் அமர்ந்து அவர் சொல்வதாக வரும் வரிகள் இவை:
"இதன் வேர் விண்ணில் விரிந்துள்ளது. கிளைகளோ மண்ணில் பரக்கின்றன. இதன் விழுதுகள் மரங்களாகின்றன. மரங்கள் விழுதுகளாகின்றன. தனிமரமே காடானது. இதற்கு இறப்பே இல்லை.
"பார், இதோ சூழ்ந்திருக்கும் காட்டின் ஒவ்வொரு இலையும் விண்ணை நோக்கி இறைஞ்சுகிறது. நீர், விண்நீர் என. காற்று, இன்காற்று என. ஒளி, மேலும் ஒளி என. இறைஞ்சுதல் உயிர்களின் அறம் என்றுணர்க! தான் என்று உணர்ந்த அணு மறுகணம் விழைவைச் சூடுகிறது. உயிரை அளிக்கக் கோருகிறது. அன்னத்தைக் கோரிப்பெற்று உடல் சமைக்கிறது. மூச்சை அள்ளிக்கொள்கிறது. வெளிவந்ததும் மொழியை பற்றிக்கொள்கிறது. விழைவின்றி உயிர்கள் இல்லை. விழைவின் புலன் அறியும் வடிவையே உயிர் என்கிறோம்.”
“ஆகவே விழைக! வாழ்வை, வெற்றியை, புகழை, அறத்தை, வீடுபேற்றை. விழைவை வேண்டுதலாக்குக”
Comments
Post a Comment