Skip to main content

சொல்லில் அடங்காத வலி



சொல்லில் அடங்காத வலி


கடந்த சில தினங்களில் மீண்டும் தேவாரப் பாடல்கள் ஒன்றிரண்டு காணொளி பார்த்து கற்றுக் கொண்டேன். 

நாவுக்கரசரின் வீரட்டானதுறைப் பதிகம். குறிப்பாக கீழே உள்ள மூன்று. 


'கூற்றாயினவாறு விலக்ககலீர் கொடுமை பல செய்தன  நானறியேன் 

ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் 

தோற்றதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி  முடக்கியிட 

ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்துறை அம்மானே '


'சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடுயிசை பாடல் மறந்தறியேன் 

நலம்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் என்நாவில் உன்நாமம் மறந்தறியேன் 

உலந்தார்தலை யில்பலி கொண்டுழல்வாய் உடலுள்ளுறு சூலை தவிர்த்தருள்வாய் 

அலந்தேன் அடியேன் அதிகைக் கடில வீரட்டானத்துறை அம்மானே '


'போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்

ஆர்த்தான்அரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட் டருள்செய்த அதுகருதாய்

வேர்த்தும்புரண் டும்விழுந் தும் எழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்

ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே."


திருவதிகை கடலூர் பண்ருட்டி வழியில் இருக்கிறது, நான் பல வருடங்கள் முன் போயிருக்கிறேன் என்றும் நினைவில் இருக்கிறது. ஆனால் வேறெதுவும் உருப்படியாய் இல்லை. இங்கு வந்து அப்பர் தன் வயிற்று வலியை ஆற்றுப் படுத்த பதிகம் பாடியிருக்கிறார். அவர் சமண சமயத்தை தழுவியதால் , அவரை வழி திருப்ப அக்கா திலகவதியார் இங்கிருக்கும் இறைவனிடம் முறையிட அவர் சோதனைக்குக் கொடுத்த வயிற்று வலி என்பது தொன்மம்.

பல நேரங்களில் இந்த வகைப் பாடல்கள் படிக்கும் வேளையில் , அதைச் சுற்றிக் கட்டப்பட்ட பரிகாரங்கள் எல்லாம் காதில் படும் போது , இவையெல்லாம் நடந்திருக்குமா என்ற ஒரு  எண்ணம்  வருவது நியாயமே.

எது எப்படியோ அவர் பாடலில் அந்த வலி தெரிகிறது. 

'வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால்  என் வேதனையான விலக்கியிடாய்' என்று துடித்துப் போய் கேட்கிறார் போல் பட்டது. வயிற்று வலி எனக்கு தாங்க முடியாத வலிகளில் ஒன்று. எப்போதும் வருடம் ஒரு முறையாவது வரும், எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். திடீரென்று எங்கோ இருந்து ஒரு விசை வயிற்றை இழுத்துப் பிடித்து காற்றில்லாமல், கயிறால் இறுக்கக் கட்டி, மெதுவாய் நன்றாய் வலி உச்சிக்கு ஏறி , பின்னர் மெதுவாய் மூச்சுப் போல் நிதானமாய் கீழே வரும். வயிரென்ற மத யானையின் பிளிறல் தான் வயிற்று வலி என்பது. மத யானைக்கு நினநீர் சொரியும் என்பார்கள். நமக்கும் நிணநீர் சொரிந்து வெளியேறினால் வயிற்று வலி போகப் போக நிதானமாகும். ஆனால் வெறும் வலிதான் தங்குவதற்கு கடினம். அதன் துதிக்கை தூக்கி அடுத்த முறை பிளிறுவது தெரியும் என்பதால், இன்னும் கடினம். சரியாய் இடைவெளி விட்டு எதிர்பார்த்து வரும் வலி தாங்க முடியாது. வாத்தியார் கையை நீட்டி அடி வாங்குவது போல்.  வயிற்றோடு துடக்கி முடக்குகிறது என்கிறார். துடக்கு என்றால் இறந்தால் பரவாயில்லை என்ற வலி என்று ஒரு பொருள் இருக்கிறது. பல பாடல்களில் வயிற்றின் அகம்படி என்று சொல்கிறார். அகம்படி என்றால் கீழ் வயிறு. சூலை சுடுகின்றது என்று எழுதுகிறார் , சூலை என்றால் முடக்கிச் சுருக்கும் வலி. கலித்தேயென் வயிற்றின் அகம்படியே , வயிறு உப்பி வரும் வலி.

இதன் மேல் அவர் வலியை வர்ணிக்கும் விதமும் அலாதியானது. 

'தோற்றாதென் வலி' , நான் இதுவரை காணாத அறிந்திராத வலி என்று பொருள். எலும்பு முறிவின் வலி, எலும்பிலிருந்து எழும் வலியே அறிந்தவற்றுள் காணாத வலி, கேள்விப்பட்டு அறியாத வலியாக இருக்கும். தீயால் பட்ட வேதனை இதற்கும் மேலாய் இருக்கலாம், அதனாலோ என்னவோ சுட்டெரித்தது என்கிறார்.

நஞ்சாகி வந்தென்னை பற்றிய வலி , சுடுகின்ற சூலை, சலிப்புற வைக்கும் வலி , வேர்த்து, புரண்டு , விழுந்து மாளாத வலி. 

வலித்து மலத்தை கிளறி அதையே கவர்ந்து தின்னும் அந்த வலி. வயிற்றைக் கலக்கி வெளியே தள்ள வேண்டிய வேளையில் மீண்டும் உள்ளே போவதைத்தான் மலம் கிளறி அதையே உண்ணும் வலி என்று சொல்கிறார் என நினைக்கிறேன்.

ஒரு டாக்டரிடம் சொல்லும் விவரணைக்கு பல மடங்கு மேலே சிவபெருமானிடம் முறையிடுகிறார். இதையெல்லாம் உட்கார்ந்து கேட்கும் டாக்டர்களும் யாரும் இல்லை. பின்னர் மற்றொரு முறை , அலுக்கும் வலி. பட்டுப் பட்டு அலுத்துவிட்ட வலியா ?

அனுபவிக்காத வலியை இவ்வாறு எழுத முடியுமா? முடியாது என்றே நினைக்கிறேன். விட்டால் இன்னும் பல பாடல்கள் வருணித்து வலியையும் நாவுக்கரசர் கரைத்திருப்பார் , இல்லை வலிக்கே வலி வர வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால் பத்துடன் நிறுத்திக் கொண்டார்.

ஆனால் இதையெல்லாம் சொல்லி வலியின் கொடுமை காட்ட இன்னும் ஒன்றையும் சொல்லிச் செல்கிறார். 

அது சொல்லில் அடங்காத வலி, இது தான் அந்த வலியின் உச்சமாக இருக்க முடியும். 

இப்போது கண்ணை மூடி ஒரு முறை கேசாதி பாதம் மனக்கண்ணால் பார்த்தால் பல இடங்களில் தற்காலிக வலிகள் இருப்பதை உணர முடிகிறது. ஆனால் இவையெல்லாம் எழுதிவிடலாம்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...