Skip to main content

வாழ்வின் மெய்யறிதல் : அறிபவர் என்பவர்...ஆர்தர் ஷோப்பனோவர் கட்டுரைகள் -2


அறிபவர் என்பவர்...

                                               
அரிஸ்டாடில் வாழ்வின் நமக்கு நடப்பதை மூன்றாகப் பிரிக்கிறார்.
1.நமக்கு வெளியில் இருந்து வருபவை 
2.மனதில் நடப்பவை 
3. உடலில் நடப்பவை 

நான் பார்த்த வரை எல்லா மனிதர்களையும் பின்வரும் மூன்று வகையில் வேறுபடுத்திப் பார்க்கலாம்.

(1). அந்த மனிதர் யார் : ஒருவரின் ஆளுமை என்ன என்பது இதில் அடங்கும். உடல்நலம், அவரின் பலம்,அழகு,மன வலிமை, அவர் போற்றும் அறம்,அறிவுத்திறன், கல்வி போன்ற எல்லாம் சேர்ந்தது.
(2). அவரிடம் இருப்பது என்ன : சொத்துகள் போன்ற எல்லா வகையான உடைமைகள்.
(3). அடுத்தவர் பார்வையில் இந்த மனிதர் யார்: பிறர் கண்களில் இவர் எவ்வாறு அளக்கப்படுகிறார், இவரைப் பற்றி அடுத்தவர் அபிப்ராயம் என்ன, இவர் பட்டங்கள் யாவை, வரிசை என்ன, புகழ் யாது. 

இதில் முதல் பத்தியில் வரும் விஷயங்கள் இயற்கையால் ஒவ்வொரு மனிதருக்கும் அளிக்கப்படுபவை. அவருடைய மகிழ்ச்சியோ , துக்கமோ மற்ற இரண்டு பத்தியில் வரும் காரணிகளை விட இதனாலேயே என்பது பார்த்தவுடன் தெளிவாகிறது. மற்ற இரண்டும் இரண்டு மனிதர்கள் சம்பந்தப் பட்டது, ஒரு வகையில் மனிதர்களின் கட்டமைப்பு.

ஒருவருடைய ஆளுமையில் உள்ள பலத்தை ஒப்பிடுகையில்,  மற்ற இரண்டும்,  அரசனாக நடிப்பவனுக்கும்  , உண்மையான  அரசனுக்கும் உள்ள வித்தியாசம் போலாகும். உறுதியான உள்ளம் கொண்டவன் என்றும் பிறப்பால் உயர்குடியில் பிறந்தவனை விட மகிழ்ச்சியானவனாய் இருப்பான். மெட்ரொடோரஸ் இதையே சொல்கிறார் : "நம்மால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்றுமே நம்மை சுற்றியிருப்பவர்களிடம் நாம் பெரும் மகிச்சியைவிட பெரியது".  ஒருவருள்ளுலிருந்து எழும் உணர்வுகளும், எண்ணங்களும்,ஆசைகளும் அவர் மகிழ்ச்சியை நேரடியாக பாதிக்கின்றன. மற்ற இரண்டும் மறைமுகமாகவே மகிழ்ச்சியை பாதிக்கின்றன. இதனால் தான் ஒரே புறச்சூழலில் இருந்து வரும் ஒரு  சம்பவம் இருவரை இரு விதமாக பாதிக்கிறது.  ஒரே சூழலில் இருக்கும் இருவர் இருவேறு உணர்வு உலகில் வாழ்கிறார்கள். தன்னுடைய எண்ணங்களிலும், விருப்பங்களிலும் , உணர்ச்சிகளிலும் குறியாய் இருப்பவரை , வெளியுலகம்  இவற்றைக் கொண்டு வரும் கலமாகவே பாதிக்க முடியும். இவருடைய புற உலகம் இவர் அதை எவ்வாறு பார்க்கிறார் என்ற அளவே இருக்கும். இதனால் உலகம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறது. ஒருவருக்கு வறட்சியாய், மந்தமாய் , மேலோட்டமாயும், மற்றொருவருக்கு , வளமானதாய் , ஆர்வத்தை தூண்டுவதாய் , மிக அர்த்தம் பொதிந்துள்ளதாயும் அதே உலகம்  தோன்றும்.  ஒரு சுவாரசியமான மனிதர் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சொல்லும் போது நமக்கு ஏன் இவ்வாறு நடக்க வில்லை என்று நினைக்கிறோம். அவருடைய மனதின் திறனையும், அவருக்கு பார்க்கும் அந்த விஷயத்தில் இருந்த முக்கியத்துவத்தையும் மறந்து விடுகிறோம். goethe , பைரன் போன்றோர் எளிமையான விஷயங்களைப் பார்த்தே மாபெரும் கவிதைகளை எழுதியுள்ளனர். அவர்களுடைய படைப்புத்திறன் சாதாரண விஷயங்களை அழகாக மாற்றுகிறது. சாதாரணமானவர்களுக்கு நமக்கு ஏன் இல்லை என்று தோன்ற வைக்கும்.

இதே போல, மனக்கவலை உடைய ஒருவருக்கும் , உற்சாகம் உள்ள மற்றவருக்கும் , எளிதில் உணர்ச்சியே காட்டாத மூன்றாமவருக்கும், ஒரே சம்பவம்  துன்பமாயும், இன்பமாயும், சுவை இல்லாததையும்   தோன்றும்.  ஒவ்வொரு சம்பவமும் நடப்பதற்கு ஒரு ஆள் , ஒரு பொருள் என இரண்டும் தேவை, தண்ணீரில் இருக்கும் ஆச்சிஜன் ஹைட்ரஜன் போல. அதனால் பொருள் ஒன்றாய் இருக்கும்போதும் , பார்ப்பவர் கோணத்தில் அது வேறொரு பொருளாய் ஆகி விடுகிறது. தன்னுணர்வைப் பொறுத்து தான் பொருளை வரையறுக்க முடியும். நாம் யாரும் தோலை தாண்டி வளர முடியாது, அது போல தன்னுணர்வுதான் நாம் இருக்கும் உலகத்தின் எல்லை. புறவயமான விஷயங்கள் தன்னுணர்வின் எல்லைக்குள் ஊடுருவ முடியாது. ஒரே மேடையில் பல பாத்திரங்கள் நடிப்பது போல்,   ஒரே தன்னுணர்வில் புற உலக சம்பவங்கள் நடக்கின்றன. ராஜா , மந்திரி , வேலைக்காரன் யாரானாலும்  மேடைக்குள்ளேயே இருக்க முடியும். பேர், புகழ், போன்றவை பாத்திரங்களை மாற்றுவது போல் ஆனால் உள்ளிருப்பது தான் மேடை. அதுவே சந்தோஷமோ துக்கமோ தருவது, ஏழையானாலும் சரி  , பணக்காரனாலும் சரி. ஆக இருப்பதும் , நடப்பது எல்லாமும்  நம் மனத்தினுள்ளேயே. இன்னும் சரியாக கூறினால் நம் மனதிற்க்காக மட்டும் தான் மட்டும்தான் . எனவே இந்த பிரஞை எதனால் , எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்வது, இதன் வெளிப்புற தூண்டுதல்களை அறிந்து கோலத்தை விட  அவசியம். மிகப்பெரிய சந்தோஷமும், இன்பமும் புற உலகில் இருந்தாலும்  ஒரு சாதாரண பிரஞையுள்ளவன் சிறையில் இருப்பது போலத்தான் இருப்பான். புறஉலக பாதி விதியின் வசம் நடப்பது, தற்செயலானது, மாறுவது . ஆனால்  தன்னுணர்வின் பாதி நமக்கே உரியது, என்றுமே மாறாதது.

இதனால் எவ்வளவுதான் வெளிச்சம்பவங்கள் அவரைச் சுற்றி நடந்தாலும் ஒருவருடைய குணம் என்பது வாழ்க்கை முழுதும் மாறுவதே இல்லை. ஒரே சேலையில் டிசைன் ஒரே மாதிரியும் கலர் மாறுவது வருவது போல, கீழ் உள்ள அவரது குணம் மாறாது, அவராலேயே மீறிச் செல்ல முடியாது.  ஒரு விலங்கு எந்த ஒரு நிலைமையில் இருக்கும் போதும், இயற்கை அளித்த ஒரு வரம்புக்குள் தான் இருக்கிறது. நாம் விலங்கை மகிழ்ச்சிப்படுத்தும் எந்த முயற்சியும் இந்த வரம்பினுள்ளேயே இருக்க வேண்டும். மனிதனுக்கும் அவ்வாறே, சந்தோஷம் என்பது அவனுடைய குணத்தால் முன்னதாகவே தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது. இன்னும் குறிப்பாக  சொல்லப் போனால், ஒருவரின்  மனவலிமை என்பது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டு விடுகிறது.  மனவலிமை மனிதன் அடையக்கூடிய அதிக பட்ச மகிழ்ச்சியை  தீர்மானம் செய்கிறது.   
மனவலிமை குறைவாக இருக்கும் போது, ஊரே கூடி வந்தாலும், உலகமே கீழ் இருந்தாலும் இவருக்கு மனமகிழ்ச்சி என்பது கிடைக்காது. விலங்கைப் போல் உண்டு, உறங்கி, புலன் சார்ந்து வாழ்க்கை முடியும். வம்பளக்கும் உறவுகள், சிறியோர் சேர்க்கை,இழிவான செயல் செய்து பொழுது போக்குதல் போலே.  இவருக்கு படிப்பும் உதவ முடியாது.

மனவலிமை உடைய ஒருவருக்கு, மனதினால் பெரும் மகிழ்ச்சியே மிகப் பெரிதாகப் படுகிறது. மிக வேறுபட்ட , நிலைத்திருக்கும் மகிழ்ச்சி மனதினால் மட்டுமே கிடைக்கிறது. மனமகிழ்ச்சி மனவலிமையினால் மட்டுமே சாத்தியம் . 

இதிலிருந்து நம் மகிழ்ச்சி என்பது நம் குணம் சம்பந்தப்பட்டது என்று தெளிவாகத்  தெரிகிறது. ஆனால் நாம் சொத்து என்று சொல்வது பணத்தையும், புகழையுமே இன்று குறிக்கிறது. இன்னும் இதை நாம் சேர்த்துக் கொண்டே செல்லலாம். ஆனால் முட்டாள் ஒருவர் சொர்க்கத்தில் இருந்தாலும் அவருக்கு தெரியப்போவதில்லை. Goethe சொல்வது போல் ஒருவர் மேலிருப்பதையும் , கீழே இருப்பதையும் அவர் குணமே தீர்மானிக்கிறது.

மற்ற எதையும் விட உடல்நலம் என்பது பெரிய வரமாகும். அமைதியும், குதூகலமும் உள்ள மனமும்,  உறுதியான உடலும், உள்ளதை உள்ளபடி பார்க்கும் தெளிந்த அறிவும், மிதமான அசையுள்ள இளகும் மனமும், அதனால் வரும் தெளிந்த குற்றமில்லாத மனசாட்சியும் - இவற்றால் வரும் மகிழ்ச்சியை எந்தப் புகழும் பேரும் கொடுக்க முடியாது, அழிக்கவும் முடியாது.

ஒரு மனிதன் தனிமையில் இருக்கும் போதும் கவர முடியாத அதுவே அவனுக்கு முக்கியமானது அல்லவா ?. அவனிடம் இல்லாமல் போகக்கூடிய உடைமைகளையும், பெயரையும் எப்படி என்றும் இருக்கும் ஒன்றை விட முக்கியம் என்று சொல்லமுடியும். தனியே  இருக்கும் ஒரு அறிவுடையவன்,  அவனுடைய எண்ணங்களின் மூலமே மகிழ்ச்சியாய் இருப்பான். ஆனால் தியேட்டரிலும் , விருந்துகளிலும்  , கேளிக்கைகளிலும் இருக்கும் அறிவற்றவன் சோர்வுள்ளவனாகவே இருப்பான். ஒரு நல்ல மனதுள்ள மனிதர் சோதனை வேளைகளில் சந்தோஷமாகவே இருப்பார். ஆனால் பேராசையும், பொறாமையும் , நஞ்சும் உள்ள ஒருவன் , பெரிய பணக்காரனாக இருந்தாலும் துயர் மிகுந்தவனாகவே இருப்பான். இல்லை, மனதால் தனித்திறனும், அறிவுத்திறனும்  அமையப்பெற்ற பெற்ற ஒருவன், மற்றவர்கள் துரத்தும் உலகாயத இன்பத்தை மேலோட்டமானதாகவே நினைப்பான். துன்பம் என்றும் சுமை என்றுமே அவனுக்கு அது தெரியும். ஹோரஸ் (ரோமன் கவிஞர்) சொல்வது போல் பொருள் இல்லாமல் இன்னலுறும் ஆயிரம் பேர் இருந்தாலும், ஒருவனாவது பொருள் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருப்பான். சாக்ரடீஸ் உயர் விலைபொருள்கள் விற்கும் கடைவீதியில் நடந்து  செல்லும்போது, உலகில் எனக்கு வேண்டாத பொருள்கள் இவ்வளவு இருக்கிறதா என்று ஆச்சரியப்பட்டாராம். 

ஆக ஒருவன் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு மூலமானது அவனது ஆளுமையே. ஏனென்றால் இது என்றும் மாறாமல் இருப்பது. நம்மை மட்டுமே சார்ந்தது. காலத்தாலும் அழியாதது. நல்லியல்பு ஒன்றே காலத்தால் தொட முடியாதது.பேரும் , புகழும் அடைய முடிவதால் எல்லோருக்கும் உள்ளதாக ஆகிறது. ஆனால் தன்னியல்பு என்பது உள்ளிருந்து வருவது, அடைய முடியாதது,மாறாதது. Goethe சொல்வது போல் , ஒவ்வொருவனும் பிறக்கும் போது மாற்ற முடியாத ஒரு ஊழின் தடத்தில் தான் பிறக்கிறான். அந்தப் பாதை அவனுக்கு என்றே விண்ணில் இருந்து வகுத்த பாதை. அவனே எண்ணினாலும் அப்பாதை மாறாது.   

நம் கையில் இருக்கும் வாய்ப்பு நம்முடைய தன்னியல்பை சரியாக பயன்படுத்துவதும், அதற்க்கு ஏற்ற செயல்களில் ஈடுபடுவதும், அது அனுமதிக்கும் பாதைக்குள் நிறைவாய் இருப்பதும், தன்னியல்பை ஒட்டி வராத செயல்களை செய்யாமல் இருப்பதும் ஆகும். தொடர்ந்து இவ்வாறு செய்வது நம் தன்னியல்பை மெருகேற்றும்.

மலையே நகர்த்தும் பலம் உள்ள ஒருவர் , நாள் முழுதும் அமர்ந்திருக்கும் ஒரு வேலையையோ , ஒரு கையால் செய்யும் நுணுக்கமான வேலையையோ, இல்லை படிப்பது போன்ற வேலையையோ செய்யக் கூடாது. இது அவர் இயல்பில் இல்லாதது.இயல்பை மறுத்து செய்யும் எச்செயலும் இன்பமாய் இருக்காது. மாறாக தன்னியல்பில் மூளை வேலை செய்யும் திறனுடையவர், உழைப்பு கோரும் செயல்களில் இன்பம் காண இயலாது. இளமையில் தன்னியல்புக்கு மாறான செயல்களில் , இல்லாத திறனை மிகையாக நம்பி இறங்கக் கூடாது.

தன்னியல்பு மகிழ்ச்சிக்கு காரணியாக இருப்பதால் , அதைப் பேணும் செயல்களை ஈடுபடுவது நல்லது.  உடல் நலத்திலும் , தன்னியல்புக்கு ஏற்ற செயல்களும், பேரும் , புகழும் கொடுக்கும் செயல்களை விட மகிழ்ச்சிக்கு நல்லது. பணமும் , புகழும் தேவையே இல்லை என்பதில்லை. ஆனால் அளவுக்கு மேலான பணம் மகிழ்ச்சிக்கு துணை புரியாது. பெரும் பணம் உள்ளவர்கள் , மனவளம் இல்லாமல் மகிழ்ச்சி இல்லாமலே இருப்பார்கள். அடிப்படைத் தேவைக்கு மேல் பணம் என்பது மகிழ்ச்சிக்கு பயனளிக்காது. சுமையாகவே அமையும் ஏனென்றால் அதைக் காப்பது கவலையளிப்பதாகவே இருக்கும். ஆனால் பணம் பண்ணுவதே நம் மேலாக படுகிறது. நம்மைப் பண்படுத்தும் செயல்கள் இரண்டாம் பட்சமாகின்றன. எறும்பைப் போல், காலை முதல் மாலை வரை பணம் சேர்க்கும் செயல்களிலே ஈடுபடுகிறோம். இதைத் தவிர எதுவுமே தெரியாமல் ஆகிறோம். மனதும், மூளையும் மழுங்க விடுகிறோம். இங்கு மனதில் மகிழ்ச்சி இல்லாமல் போக ஆரம்பிக்கிறது. மேலும் மேலும் புலன் சார்ந்த மகிழ்ச்சிகளில் தொலைகிறோம். அதிர்ஷ்டக்காரர் இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கிறார். பிள்ளைகளுக்கு விட்டுச் செல்கிறார். இருப்பதை இன்னும் செலவு செய்து புலன் சார்ந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார். இந்த ஒரு வாழ்க்கையென்பது  முட்டாள் தனமான வாழ்வேயாகும்.

ஆக ஒரு மனிதன் தான் யார் என்பதே அவன் மகிழ்ச்சியின் பெரும்பகுதி. மனதில் வெற்றிடம் இருக்கும் போது எவ்வளவு பணமும் போதாது. செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்த ஒருவர், மனதில் ஒன்றும் இல்லாத போது, பணத்தை எல்லாம் புலன் இன்பத்தில் விட்டு,மகிழ்ச்சியையும் விடுகிறார். ஏன் ? மனதில் வெறுமையும், வெற்றிடமும், வாழ்வே சுமையாய் முடியும். உள்ளளவில் ஏழை, வெளியில் பணக்காரர். வெளியில் இருக்கும் செல்வத்தை வைத்து உள்ளே இருக்கும் வறுமையை போக்க முடியாது.

கடைசியாக  இரண்டாவது, மூன்றாவது மகிழ்ச்சி காரணிகளான  பணமும் புகழையும் பற்றி ஒரு முக்கியமான விஷயம் இது. பணத்தை விட புகழ் புனிதமானதாக தோற்றம் அளிக்கலாம். எப்போதுமே பணம் வழியே புகழும், வரிசையும் வருகிறது. இரண்டு வேறு வேறு போல் இருந்தாலும் வழி ஒன்றுதான்.  

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...