Skip to main content

அசைபோடுதல்




இதில் வந்த 'rumination' என்ற வார்த்தை தான் என்னை  இப்புத்தகத்தை(Stop Overthinking : Nick Trenton) படிக்கத் தூண்டியது. இந்த வார்த்தை தான் எருமை மாட்டை நினைக்க வைத்தது.

அப்பா எப்போதாவது கடிந்து கொள்ளும் போது 'எருமைப் பால் குடிச்சு வளந்தா?' என்பார். இல்லை 'எருமைமாட்ல மழை பெஞ்ச மாதிரி' என்பார். பாட்டி வீட்டில் மாடுகள் உண்டு. தாத்தா மழை வந்தால் எப்போதும் பசு மாடுகளை உள் கொட்டத்தில் பிடித்துக் கட்டுவார். ஆனால் எருமையை வெளியேயே நனைய விட்டு விடுவார். என்ன மழைக்கும் எழுந்து கூட நிற்காது. அதிக பட்சம் கண்களை உருட்டிப் பார்க்கும். வலது பக்கம் தாத்தாவின் வைக்கோல் போரும் , எதிர்த்தாற்போல் பக்கத்துக்கு வீட்டு மாடுகளும் , வைக்கோல் போரும் இருக்கும். இரண்டு வைக்கோல் போர்களின் நடுவே உள்ள வெற்றிடத்தை பார்த்தவாறு அசை போட்டவாறே இருக்கும். பசுமாடு தோலின் மேல் கொஞ்சம் தண்ணீர் விழுந்தால் தோலை மட்டும் தோகையைப் போல் சிலிர்த்து , வாலை ஒரு முறை ஒடித்து தன் முதுகில் லேசாய் அடித்துக் கொள்ளும். எருமை தோல் சிலிர்ப்பது அரிது  ,  அதைப் பார்ப்பது அதிலும் அரிது.     

அதிகாலையில் மாடுகளை தெரு வழியாக கயிறு பிடித்து , ஊரின் வெளியே இருந்த ஊரணியில் குளிப்பாட்ட  கூட்டிச் செல்வார்கள். காளைகளும் , பசுக்களும் தலைகளை அசைத்தபடி செல்லும். வேகமாய் மணிகள் ஒலிக்கும். கயிறின் மறுமுனை சுருட்டி கையில் வைத்தவாறு, அடிக்கடி பின்பக்கம் தொட்டு வேகம்  கொடுப்பார்கள். கன்றுகள் ஒட்டியபடி பின் செல்லும். இதையெல்லாம் ஒரு திண்ணையில்  உட்கார்ந்து பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். ஒரு ஊர்வலம் போல் மாடுகள் சென்றவண்ணம் இருக்கும்.

காளை மாடுகளை கால் அளவு நீரில் நிறுத்தி, தண்ணீரைக் கோரி ஊற்றி வைக்கோலால் தேய்த்துக் குளிக்க வைப்பார்கள். எருமை நீர் கண்டவுடன் அதுவே உள்ளிறங்கிவிடும். பெரும்பாறை ஒன்று  நீரில் சரிவது போல் இருக்கும். தெளிந்த ரசத்தைக் கரண்டி விட்டு நன்றாய் கலக்கியபின் குடிப்பதற்கு ஒரு சிலர் போல், இல்லை கரி அடுப்பில் சமையலின் நடுவே பாத்திரத்தை இறக்கி வைத்து, ஒரு முறை ஊதுகுழலால் கிளறி விட்டவுடன் , கரியின் கீழே அடைபட்ட காற்று  பொன் துளிகளாய் சில  மேலே பறக்கும் அது போல.  கலங்கிய நீரே ஏனோ அதற்குப் பிரியம் போலும். கலங்கலில் திளைப்பதற்கும்  ஒரு மனம் வேண்டும். தலைமட்டும் வெளியில் தெரியும் படி தண்ணீரில் நின்று கொண்டே இருக்கும். காலை ஒளியில் சிறு சிறு கரும்பாறைகள் போல் அங்கங்கு தோன்றும். கண்கள் மட்டும் திறந்து மூடிய  வண்ணம் இருக்கும் - கல்பொறு சிறுநுரை. நீர் பாறாங்கல்லில் மோதும் போது ஏற்படும் சிறு நுரை இல்லையா ?. எல்லா மாடுகளையும் குளிப்பாட்டி முடித்து எருமையை நீரை விட்டு வெளியேற்ற படாத பாடு படுவார்கள்.சாதாரணமாக வெளியே வராது , அதுவாக வந்தால் தான் உண்டு. நீருள்ளே இருக்கவே அது படைக்கப்பட்டது என நினைக்கிறேன். கருமை என்பது குளுமையே ஆகும்.

பசுக்களிடமும், காளைகளிடமும் அருகில் நாம் எல்லோரும் செல்ல முடியாது. கொம்பைத் தொடவும், வால் பிடித்து முறுக்கவும், பால் கறக்கவும் முயற்சித்திருக்கிறேன். இதெல்லாம் சிரமம், உதை, வால் அடி போன்ற அபாயங்கள் உண்டு. எருமை இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. மிக அகலமான , திடமான   கொம்புகள், சுவர் போன்ற தோல், கம்பி போன்ற வால் , எங்கு தொட்டாலும் உறுதி ஒன்றுதான்.  மிகவும்  துன்புறுத்தும் போது  தன்னுடைய சிறுநீரில் ஊறிய வாலைச் சுழற்றி நம் மேலே தெளிக்கும். 

மற்றபடி எருமை  வாயில் அசைபோட்டபடி இருக்கும் -இது தான் rumination.

பழைய நினைவுகளை மீட்டியபடி  இருத்தல். துன்பமான , பயம் தரும் , எதிர்பார்ப்புகள் கூடிய நினைவுகள் மன உளைச்சலின் முக்கிய காரணம்.இவ்வகை நினைவுகளை எவ்வாறு வழியில் கொண்டு வருவது. நிக் ட்ரெண்டன் ஒரு மனநல மருத்துவர். ஒரு சிலர் பிறவியிலேயே அதிக யோசனை செய்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இப்போது யோசனை செய்வது ஒரு வேலையாகவும், முன்னேற்றமாகவும் கருதப் படுகிறது. செயலில்லாத யோசனையில் பிரயோஜனம் இல்லை. இது மன உளைச்சலுக்கே வழி வகுக்கும். இறுதியில் உடலில் சென்று முடியும். நேற்று கர்நாடக தேர்தல் முடிவுகள் வாட்சப் குரூப் சண்டைகளாய் ஆயின.  யோசனையை நிறுத்துவதற்கு சில நல்ல யோசனைகளை சொல்கிறார். மனக் குமுறல்களை எழுதி வைப்பது, 4-A ரூல் (avoid, alter , accept , adapt , மேலே சொன்னது avoid-ல் விழுகிறது) போன்ற பல . 

எனக்குப் பிடித்தது  இரண்டு . முதலாவது 5-4-3-2-1 விதி என்று ஒன்று .  நீங்கள் பதட்டமாய் உணரும் போது 5 புலன்களையும் யோசனையில் இருந்து வேறு விஷயத்தில் செலுத்துவது இது . 5- பொருள்களை கண்ணால் நோக்குவது, 4 - பொருள்களை கையால் தொட்டு உணர்வது, 3-சப்தங்களை காதால் உணர்வது , 2-வாசனைகளை நுகர்வது (உப்மா வாடை இப்போது வருகிறது), 1- பொருளை நாவால் உணர்வது. இதில் எதாவது ஒன்றே பலன் தருவதை உணர்ந்திருக்கிறேன்.  

மற்றொன்று கவலைப் படுவதை தள்ளிப் போடுவது. எதாவது உடனே செய்ய முடிந்தால் அலசிப் பார்ப்பது, அவசரம் இல்லையென்றால் நாளை பத்து மணிக்கு மேல் யோசிக்கலாம் என்று நாமே சொல்லிக் கொள்வது. நாளடைவில் இது பழகிவிடும் என்கிறார். 

ஆனால் பதட்டமில்லாத ஒரு பிறவி என்றால் அது எருமை என்றே எனக்குப் படுகிறது. எருமையை ஒரு கணம் நினைத்தால் பதட்டம் தணியும் என்றே நினைக்கிறேன். அதன் rumination அதற்கு ஒரு தியானம் போல் என்றே எண்ணத் தோன்றுகிறது. புலன் ஒடுக்கி இருக்கும் நிலை போல் அல்லவா அது. கடைசியில் நாம் அடையும் விடுதலையும் இதன்  மேல் அல்லவா வருகிறது. அவரும் இதன் கழுத்தில் இருக்கும் கயிற்றை கழற்றி அல்லவா நம்மைக் கட்டுகிறார்.  

ஒட்டு மொத்தமாக எருமையாய் இரு என்றே இப்புத்தகத்தில் இவர் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...