யோசிக்கும் வேளையில் - 1
---------------------------------
சென்ற சில நாட்களாய் யோசிப்பதைப் பற்றி படித்தும் , யோசித்தும் பொழுது போய்க் கொண்டிருக்கிறது. எழுதிவைத்தால் வசதி என்று நினைத்து எழுதுகிறேன்.
நான் பிறந்து வாழ்ந்த வீடு மிக நீளமானது. தெருவின் எல்லா வீடுகளும் அவ்வளவு நீளம் தான். ஐம்பது மீட்டர் இருக்கும். ஒரு நாளில் எவ்வளவு முறை வாசலும் புறமும் கடக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொள்கிறேன். எல்லோருக்கும் கால்களில் வலு இருந்திருக்கிறது. தெரிந்தோ என்னவோ தலை வாசலில் ஒரு திண்ணை உண்டு. சரியாக உடம்பின் அளவே இருக்கும் திண்ணை அது.இதைப் போல் புறவாசலில் ஒரு துவைக்கும் கல் இருந்தது. அதை ஒட்டியவாறு கிணறு. கிணற்றை சுற்றிக் கட்டிய சுவர் முடியும் இடத்தில் இன்னொரு உயர்ந்த கருங்கல் மேடை இருந்தது. பின்னால் எங்கும் கண் முட்டும் அளவுக்கு பச்சை நெல் வயல்கள், வாழைத் தோட்டங்கள் இருந்தன. அருகில் ஓங்கி அடர்ந்து வளர்ந்த முள் மரங்கள், மஞ்சணத்தி, முருங்கை, அகத்தி மரங்கள் உண்டு. மூன்றாவது வீட்டு சம்சாரியின் ஒரு காளையும் , எருமையும் அதன் நிழலில் அசை போட்டுக் கொண்டிருக்கும். அருகில் மலைபோல் ஒரு வைக்கப்போர் இருந்தது.
சிறு வயதில் வீட்டில் வசைகள் விழும்போதும், கண்டிப்புகள் முடிந்த பின்னும் போன்ற இக்கட்டான நேரங்களில் முன் திண்ணையிலோ அல்லது பின் வாசல் கல்லிலோ போய் தனியே அமர்வது என் வழக்கம். உள்ளிருந்து கிளைமாக்ஸ் முடிந்து இன்னும் தொடரும் வசைகள் காதில் விழாது. குற்ற உணர்ச்சி எல்லாம் இல்லை, அது சௌகரியம். பின் கொஞ்சம் வயதான பின் , பொறுப்பும் தெரிந்த பின், எதிர்கால யோசனைகளை இந்தக் திண்ணையிலும், கல்லிலுமே அமர்ந்து செய்திருக்கிறேன். சாயங்காலம் திண்ணையில் அமர்ந்தால் அம்மா என்ன யோசனையோ, பேசாமல் என்று கோபிப்பார். காலை எழுந்ததும் புழக்கடை குத்துக்கல்லில் ஏறி உட்கார்ந்து பல் தேய்த்தால் தான் அன்றைய நாள் நன்றாய் வரும். என்ன யோசித்திருப்பேன் என்று சரியாய்த் தெரியவில்லை. ஒரு இடத்தில் எதிர்காலம் பற்றிய நினைப்புகள் வந்தது நினைவில் உள்ளது.
யோசிப்பதற்க்கு என்று ஒரு இடம், சூழல் தேவை என்றே நினைக்கிறேன். இதுவே என்னளவில் யோசிப்பதின் அடிப்படை. ஒரு பக்கம் டிவி ஓட , இன்னொரு பக்கம் யாராவது பேசிக்கொண்டிருந்தால் எனக்கு யோசனை ஒருங்குவதில்லை. புலன்களும் , குறிப்பாக கண்ணும் காதும் , மனத்தை தூண்டுபவை. மனம் கிளை பிரிந்தபடி ஓடும் ஆறு. பழகினால் ஒழிய, சந்தையின் நடுவே ஒரு விஷயத்தில் கொஞ்ச நேரம் குவியாது. எனவே இடம் முக்கியம். ஒரு அமைதி லேபிளுடன் இருந்தால் , தெரிந்தால் மனம் இன்னும் பழகிவிடும். இப்போதெல்லாம், சைக்கிளில் செல்லும்போது ஒரு விஷயத்தை நெடு நேரம் யோசிக்கப் பழகியிருக்கிறேன். அலுவலகத்தில் ஒரு மணி நேரம் எனக்கென்று ஒதுக்கி வைக்கிறேன். இந்த நேரத்தை யோசிப்பதற்கு செலவழிப்பது என் வழக்கம். காதில் ஹெட் போன் மாட்டிக்கொள்வேன். மற்ற நாள்களில் தனியே நடக்கும்போதும் சிந்தனை குவிகிறது.
எப்படிச் சிந்திப்பது என்பது தனி விஷயம். இதைப் பற்றி நிறைய யோசித்து எழுதியிருக்கிறார்கள். என்னளவில் ஒரு விஷயத்தை தியானம் போல் உருட்டிக் கொண்டே இருந்தால் புது யோசனைகள் கிடைக்கும். அன்றைய நாளின் சிந்திக்கப்பட வேண்டிய விஷயம் முதலில் நின்றால் , மற்ற எல்லா விஷயங்களிலும் அதற்கான பொறி தட்டுவதை, புது வழிகள் பிறப்பதை நம்மால் காண முடியும். சிந்தனை என்பது விஷயங்களை இணைப்பது மட்டுமே என்று நினைக்கிறேன்.
சிந்தனையை ஒரு உடல் என்று கற்பனை செய்தால் , அதன் கையும் காலும் , தனிமையும், நிதானமும் மட்டுமே என நினைக்கிறேன். முதலாவது கவனம் குவிக்க, இரண்டாவது நேரம் எடுத்து , கவனிக்க உற்று நோக்க. இது இரண்டும் கலை கற்ற ஒருவருக்கு தானாய் கை கூடுகிறது என்று நினைக்கிறேன். ஒரு மூன்று நிமிட பாடலை காதால் கேட்டுவிட்டுப் போவது எளிது. அதைக் பாடுபவர் பல மணி நேரம் செலவழித்து, பல முறை பாடிப் பழகினால் தான் , நாம் கேட்கும் ஒரு முறையில் அவ்வளவு சரியாய்ப் பாட முடியும். பாடல் என்றால் ஒரு பல்லவி, அநுபல்லவி , இரண்டு மூன்று சரணம் என்று எல்லோருக்கும் தெரியும். ஒவ்வோர் வரிக்கும் ஆரோகணம் அவரோகணம் இருக்கிறது. ஆனால் பாடுபவர் ஒவ்வொரு சொல்லாய் கற்கிறார். ஒவ்வொரு எழுத்தின் இடையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சொல்லின் இடையில் நுட்பம் இருக்கிறது.அதன் ஒவ்வொரு வரியிலும் ஒரு பயணம் இருக்கிறது. கவனம் இருந்தால் மட்டுமே இது காதில் விழுகும். பாடலை எழுதியவர், தாளம் சேர்ப்பவர்கள் என பலர் அப்பாடலில் உள்ளனர். வேகமாய்ப் போகும்போது இது எதுவும் நம் மனதில் விழுவதில்லை.
கோவிலைப் பார்ப்பது நாம் அன்றாடம் செய்வது. ஒரு முறை செல்கையில் சிற்பியின் பார்வையில் சிற்பத்தைப் பார்த்தால் நமக்குத் தெரியும் கோணம் வேறு. ஒரு நிமிடம் நம்மை சிற்பியாக எண்ணிப் பார்த்தால் வரும் கேள்விகள் ஏராளம். சிந்தனை என்பதும் நல்ல கேள்விகள் மட்டுமே. கேள்விகள் எழுந்தபின் விடை கொஞ்சம் எளிது. ஒரு கேள்வி மூலம் அடுத்த கேள்விகளுக்கு பயணிப்பது தான் சிந்தனை எனப்படுகிறது. மேலான ஆராய்ச்சியாளர்கள் பேசும்போது குறிப்பிடுவது அவருக்கு என்ன கேள்வி இருந்தது என்பதையே. தெளிவும், ஊகமும்,, கற்பனையும் கலந்து தான் சிந்தனைக்கான பயணம் அமைகிறது.
சிந்திப்பதன் வழிகள் என்று எனக்கு உதவிய புத்தகங்கள் எட்வர்ட் டி போனோ வின் லேட்டரல் திங்கிங், six hat thinking போன்ற புத்தகங்களைக் குறிப்பிடுவேன்.இவை படிக்கையில் எளிதாய்த் தோன்றும். ஆனால் செயல்படுத்த அனுபவம் வேண்டியிருக்கிறது. நெட்டுரு போட்டு அதில் சொல்லியவாறு செய்தால் தகர டப்பா சத்தம் வர ஆரம்பித்துவிடும். துறை சார்ந்த அனுபவம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்கு மேலான அனுபவம் வாழ்வில் இருந்தே கிடைக்கிறது என்று நினைக்கிறேன். இரண்டாவதற்கு நூல் வாசிப்பும், ஆட்களிடம் பேசிக் கேட்ட அனுபவமும் உதவும். இது இரண்டும் இல்லாமல் சிந்தனையின் தரம் மட்டுப்படும். துறை அனுபவமும் வாசித்தும், கேட்டும் , அடி பட்டும் மட்டுமே வர முடியும். சிந்தனையைக் கட்டமைக்க கற்றுக் கொண்டால் பின்னர் தரத்தை போகப் போக உயர்த்தலாம். இவை இரண்டுமே சிந்தனையின் மூளையும், இதயமும் என்று நினைக்கிறேன்.
சிந்தனையில் மற்றும் ஒரு முக்கியமான விஷயம் தீர்ப்புச் சொல்லாமல் இருப்பது. சிந்திக்கும் போது பக்கம் சார்வது சிந்தனையைப் பாதிக்கும்.

Comments
Post a Comment