Skip to main content

சில கவிதைகள்



 மரணத்தை நடித்தல் 

--------------------------

அற்ப வயதில் ஒருவரைப்  

பறிகொடுத்த அந்த 

வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் 

முடிவின்மையின் சுவரில் மோதி  

செய்ய ஒன்றும் இல்லாமல் 

நடித்துப் பார்க்கிறார்கள் 


கணவர்கள்  கணவராய் 

மனைவிகள் மனைவியாய் 

அன்னைகள் அன்னையாய் 

தந்தையர் தந்தையாய் 

அந்த உடலாய்  

அதன் நோயாய் 


ஒத்திகை முடிந்து 

இழப்பின் அருகில்  இருக்கும்

அவர் கை பிடித்து

ஓரிரு சொல்லில் மற்றோர் முறை 


சொல்லிற்கு அப்பால் 

மற்றுமோர் முறை அவ்வுடல் 




உச்சிக் கிளையின் பறவை 
-----------------------------
அந்தப் பறவை 
உச்சிக் கிளையில் 
அமர்ந்திருந்தது 

கீழிருந்து 
நீரில் மிதக்கும் பறவைகள்   
உற்றோர் உறவோர் 
வங்கி கடன் 
கூடல் பிரிவு
பயம் துணிவு  
தயவு தாட்சண்யம்
உண்டு இல்லை 
என இன்னும் பல 
நாளும் பொழுதும் 
கூறிய படி இருந்தன 

கிளையில் இருந்த பறவை பெரும்பாலும்
மொழியில்லாமல் 
தலையை மட்டும் ஆட்டிக் கேட்டது 

பின் ஒரு கணம் 
விடுதலும் மெய்மையும் 
இரு சிறகுகளாய் 
விண்ணேறி சிறகடித்துப் பறந்தது 

பின்னர் எதோ ஒரு கணம்
மீண்டும் கிளை வந்து அமர்ந்தது



பாற்கடலும் குமிழிகளும்  
---------------------------
நீளமான விடுமுறையென்றதும்  
திசையெங்கும் காற்றில் மிதந்து
ஒன்றென பலவென  
அக்கோயிலுக்குள் வந்து கொண்டேயிருந்தன
ஒரு நூறாயிரம் குமிழிகள்

எழுந்தும் தாழ்ந்தும் வளைந்தும் சென்று  
கோயிலைச் சுற்றிய வழிக் கம்பிகள் 
பாற்கடல் கடையும் கயிறென்றாகின

எவ்விலையேனும்  கொடுத்த பெரிய பசையுள்ள குமிழிகள்  
கடல் கடையும் கயிறின் தலை பற்றின   
முடிந்த விலைகொடுத்து காற்றில் காய்ந்த குமிழிகள் கயிறின் இடை பற்றின
பொதுவில் ஒன்றும் செய்ய இல்லாத குமிழிகள் கயிறின் வால் பற்றின 
கோயிலின் உயர்ந்த கோபுரம் மத்தென்று ஆனது 

பெரிதும் சிறிதும் பொதுவும் ஆன குமிழிகள் சேர்ந்து 
மூடும்வரை மூச்சுமுட்ட கடைந்தன அக்கோயிலை
அயர்ந்து வழியில் அமர்ந்தன சில 
முடியாமல் திகைத்து எதிர் வழியில் வெளியேற நினைத்தன சில
வழி கடிது என்று சரியாய் தெரிந்தவைகளின் உதடுகள் மட்டும் ஏதோ முணுமுணுத்தன

குமிழிகள் தத்தம் பாதையைக் 
பிறர் களவாடிய போது 
எப்போதும் எழுந்தது விடம் 
உடனே ஓர் நீலகண்டனும்    
 
கழுத்தும் உடலும் வாலும் சேர்த்து 
சரியாய் இறுக்கிய ஒரு புள்ளியில் 

தெரிந்தது தெய்வம் அந்தச் சந்நிதியில் 
தூரத்த்தில் ஒரு சிறு வெளிச்சமாய் துளி அமுதமாய் 
வெடித்துக் கலந்தன முன்னிருந்த சில குமிழிகள் காற்றில்
நுரைத்துப் பின் சேர்ந்தன இன்னும் ஒரு நூறாயிரம் குமிழிகள்

ஆயுள் ரேகை 
------------------
நெடுநாள் வாழ்வது எப்படி என்பது 
விடையில்லாமல் நிற்கும் கேள்வி 

நெடுநாள் என்பது 
எழுபதல்ல 
எண்பதல்ல
தொண்ணூறல்ல 
நூறுமல்ல 

விஞ்ஞானிகள் தோற்கடிக்க வேண்டியது 
அந்த 122 வயது வாழ்ந்தவரை 

ஒரு உயிரணுவின் 
ஊன் குருத்தின் 
பிறப்பெங்கே  
இறப்பெங்கே  
நோய் எங்கே 
என்று ஆராய்ந்த பின் அவர்கள் 

ஒரு மனிதன் வாழ்வில் 
எப்போது என்ன உண்ணலாம்
எப்போது என்ன செய்ய வேண்டும்
ஒரு நெருக்கடியை எப்படிப் பார்க்க வேண்டும் 
என்று சொல்லியிருக்கிறார்கள்  

அவன் இதை ஓடும் ரயிலில் 
படித்துப் பின் ஆசையில் அந்த 
122 வயது வாழ்ந்தவரை தேடினான் 

தினமும் சாப்பிட்டதும் புகை பிடித்திருக்கிறார்
வாரம் ஒரு கிலோ சாக்லேட்
உழைத்துச் சம்பாதிக்கவில்லை
கோட்பாடுகள் எதுவும் இல்லை 
ஜிம் உடற்பயிற்சி எதுவும் இல்லை 

கணவர் இல்லாமல் 55 வருடம் 
மகள் இறந்து 63 வருடம் 
பேரனுக்குப் பின் தனியாய் 34 வருடம் 
தினமும் கடவுளைப் நன்றியுடன் பிரார்த்தித்து   
தன்னை ஏன் விட்டு வைத்திருக்கிறாய் என்று கேட்டிருக்கிறார் 

122 வயதானவர் கதை இப்படி 
தடம் புரளும் போது 
அவனது ரயில் நிலையம் வராமலேயே 
அவன் தவறாக இறங்கிவிட்டிருந்தான்

நமக்குத் தெரிந்த காலம் 
----------------------------
நியூட்டன் சொன்னார் :
கால நேரம் ஒரு தனிப் பாதை
வற்றாமல் கடல் சேராமல் 
என்றென்றும் ஓடும் நதி   
நாம் எல்லாம் அதன் கரையில்  
கால் நனைத்து வெளியேறும் துகள்கள்  
காலநதியில் என்றும் நமக்கு  முன்னால் 
நீர் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது 

ஐன்ஸ்டீன் சொன்னார் :
காலமும் நேரமும் நாமும் 
சேர்த்து மடித்த துணிப் பொதி  
ஒவ்வொருவருக்கும் ஒரு சிறு துணிப் பொதி  
கேட்டால் கிடைக்கும் என்றார் 
அவரவர் துணிப் பையில் அவரவர் காலம் 
காலத் துணியில் எல்லாமும் முன்னரே நடந்துவிட்டது

ஆனால் நமக்குத் தெரிந்த காலம் 
வியர்த்தால் துடைக்கும் வெள்ளைக் கைக்குட்டை
இல்லை , வரையப்படாத ஒரு வெள்ளை ஓவியத் துணி
இல்லை, எழுதப்படாத ஒரு வெள்ளைக் காகிதம் 
இல்லை எல்லாமும் தான்   
பன்னிரண்டு மடிப்பில்

வயதாகும் ரசம் 
----------------
இப்போதெல்லாம் அம்மா நாளுக்கு 
ஒரு முறையாவது இப்படி ஒன்றை 
எப்படியும் சொல்லிவிடுவாள்  

இப்போதெல்லாம் வைத்த இடம் நினைவில் இல்லை என்பாள் 
கண் சரியாய்த் தெரியவில்லை என்பாள் 
கைப்  பழக்கம் முன்போல் வேகம் இல்லை என்பாள்  
கால் நின்றால் உடல் கேட்கிறது கேள்வி  என்பாள்  

அன்று வருவது அறிந்து 
கொதிக்கும் ரசத்தில் அமைதியாய் 
உப்பையும் புளிப்பையும் 
சரியாக்கினான் மகன்  

அமரர் பூங்கா
---------------------------------------
ஊன்றிப் பார்த்ததும்  கதை புலப்பட ஆரம்பித்தது  

இன்றைய செய்தித்தாளில் ஒருவரின் இறப்புக்கு 
இரண்டு இரங்கல் அறிவிப்புகள்

ஒரு பக்கம்  பூதேவி மறுபக்கம்  ஸ்ரீதேவி
இருவரும் ஆசிரியர் இறந்தவர் தலைமை ஆசிரியர்

பூக்கள் எனப் பெயர்கள் 
தாமரை மல்லி முல்லை என்ற கிளாசிக் முதல் தலைமுறை 
செவ்வந்தி கனகம் செம்பருத்தி என்ற இறுக்கமான இரண்டாம் தலைமுறை
துலிப் ஆர்ச்சிட் பேபிஸ் பரீத் இது கலைத்துப் போட்ட மூன்றாம் தலைமுறை 

எங்கிருந்தோ இவர்களை எல்லாம் மீறி 
ஒரு ரமீலா 
ஜன்னல் உள்ளே பட்டாம்பூச்சியாய் இடைவிரிசலாய் 

இரு கட்டங்களில் ஒரு  வாழ்வு   
கடவுளின்  கோப்புக்குள் அழகிய சிறு ஆவணம்
சில சொற்களும் பெயர்களும் மற்றும் ஒரு படமுமாய்

இப்படித்தான் எரிமேலியும் பழனியும் ... 
----------------------------------------------
ஒரு பின் கால் முன் 
ஒரு முன் கால் 
என்றோர் கணத்தில்    
தொடங்கி 

பின் கால் முன் முன் கால் 
பின் கால் முன் முன் கால் 
பின் கால் முன் முன் கால் 
என்ற ஓயாத ஒரே சீரடியாய் 

அப்போது 
அந்த மலையும் முகடும் 
ஊரும் 
பேருமாய்  
அவர்கள் கால் கீழ் வந்தன

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...