ஷீரான்னம்
------------
இப்போது மார்கழி மாதம் நடுவில் நிற்கிறது. பெங்களூரின் நிலைமையில் டிவி வழியாகத்தான் மார்கழி தெரியவர வேண்டும். டிவி இல்லாமல் பல வருடங்கள் தாண்டி இப்போது சில மாதங்களாய் டிவி வீட்டில் புகுந்திருக்கிறது. நடு வீட்டில் அது சிலுவையில் தூக்கி அறைந்தது போல் பரிதாபமாக நிற்கும்போது எப்போதாவது போட்டுப் பார்த்தே ஆக வேண்டியிருக்கிறது. மதுரையில் இருந்தால் மார்கழி தெரிவது வேறு விதம். காதில் யானைக் காதை குளிருக்கு மாட்டிப் பலர் நடமாடுவார்கள். அதிகாலை வீரமணியின் குரல் குழல் ரேடியோவில் கேட்கிறது. அய்யப்ப பக்தர்கள் சிறு கோவில்களை குத்தகைக்கு எடுத்து வேட்டி துண்டு காயவைத்து ,குளித்து சாப்பிட்டு கோயிலில் இருந்து கொண்டு வீட்டிற்கும் அவ்வப்போது போய் வருகிறார்கள். திருப்பரங்குன்ற முருகனும், அன்னை மீனாட்சியும் அய்யப்ப பக்தர்களுக்கும் , முருக பக்தர்களுக்கும் முழு நேர அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். உள்ளூர்க்காரர்கள்இந்த இடைவெளி அறிந்து போகிறார்கள்.
ராஜகுலராமனின் மார்கழி இன்னும் வேறு விதம். மார்கழி முதல் தேதி ஆரம்பித்து பொங்கல் முடியும் வரை காலை மாலை குழல் ரேடியோ ஒலிக்கும். சரியாய் ஐந்து மணிக்கு சீர்காழி பாட ஆரம்பிப்பார். அடுத்து KP சுந்தராம்பாள் முருகனை நோக்கி எல்லாம் பாடி முடிப்பார்- 'ஏறுவது சினம் , ஆறுவது மனம், ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு, ஏற்றுக் கொள்வான் , கூட்டிச் செல்வேன் ' , அவரை அடுத்து டி எம் எஸ் , பின்னர் கடைசியில் வீரமணி. என்ன கேட்டாலும் இந்த மாதங்களில் சினிமாப் பாட்டுகள் போட மாட்டார்கள். படிக்கும் காலங்களில் காலை 645 பஸ் பிடிக்க வேண்டும். உள்ளேயும் இந்த ரகப் பாடல்கள் துரத்தும். டிரைவர் கண்டக்டர் எல்லாம் பெரும்பாலும் மாலை போட்டு மலை ஏறுவார்கள் . சாதாரமானவர்கள் தப்ப முடியாது. பாடல் நின்ற பின் ஏற்படும் கணநேர அமைதி சொல்லால் சொல்லி முடியாது.
எங்கள் வீட்டின் இரண்டு வீடு தள்ளி கிழக்கு நோக்கி நின்ற ராஜகோபாலனின் சிறு கோவில் இருந்தது. பெருமாள் கோவில் என்று சொல்வார்கள்.இதனால் தான் மார்கழி இன்னும் மனதிலிருந்து அகல மறுக்கிறது. பத்து கிலோமீட்டரில் ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்தது. சைக்கிளில் குறுக்கு வழியில் போய்விட்டு வரலாம். ஆழ்வார் திருநகரியும், திருக்குறுங்குடியும் தெரிந்தவர்கள் ஊரில் இருந்தார்கள். ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பிறந்த ஊர். ஆக இந்த வாடை ஊரிலும் மார்கழியில் நன்றாய் அடிக்கும்.
கோவில் முன்னால் பெரிய தகரம் போட்டு சுதைச் சுவரில் எழுப்பப் பட்டிருக்கும். பத்துப்படிகள் , அதன் முன்னர் விரிந்த வெற்றிடமும் தூண்களும் உண்டு. அர்த்த மண்டபம், முக மண்டபம் எல்லாம் அது தான் . கோவிலும் அது தான் . கருவறை அதன் பின்னால் , ராஜகோபாலன் இருவர் சகிதம் நிற்பார். அர்ச்சகரை கோவில் தாத்தா என்று அழைப்போம். 'ஏன்டா அய்யா , இத்தனை சேட்டையா' என்பார்.
கோவில் முன்னால் பெரிய தகரம் போட்டு சுதைச் சுவரில் எழுப்பப் பட்டிருக்கும். பத்துப்படிகள் , அதன் முன்னர் விரிந்த வெற்றிடமும் தூண்களும் உண்டு. அர்த்த மண்டபம், முக மண்டபம் எல்லாம் அது தான் . கோவிலும் அது தான் . கருவறை அதன் பின்னால் , ராஜகோபாலன் இருவர் சகிதம் நிற்பார். அர்ச்சகரை கோவில் தாத்தா என்று அழைப்போம். 'ஏன்டா அய்யா , இத்தனை சேட்டையா' என்பார்.
'எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்' என்றபடி செய்தவர் கடைசி நாள் வரை அங்கிருந்து என்று அறிந்தேன், இப்பொழுது அவர் மைந்தர். மார்கழியில் கிணறும் குளமும் நிரம்பியே இருக்கும். அவரே பாத்திரங்களை கழுவி , நீர் இறைத்து கோவில் சுத்தம் செய்வார். தினமும் காலையில் பிரபந்த பாசுரங்கள் பாடுவார்கள். அதற்கென ஒரு ராகமும் தொனியும் இருக்கிறது. குறில் குறிலாய் , நெடில் நெடிலாய் என்று சொல்லலாம். இது எனக்கு காதில் புளித்து ஓரிரண்டு பாடல் வாயில் வந்தது. என்னுடைய பாட்டி இதைச் சொல்லக் கேட்பார். பெரியாழ்வார் திருப்பல்லாண்டு , திருப்பள்ளியெழுச்சி , பின்னர் திருப்பாவை பாசுரங்கள் கேட்ட நினைவிருக்கிறது. மார்கழியின் ஒரு சில தினங்களில் சில மணி நேரம் அமர்ந்து பாசுரம் சொல்வார்கள். அவர் என்றும் மனதில் இருந்தே சொன்ன ஞாபகம் இருக்கிறது. 'மார்கழித் திங்கள்' 'ஆழி மழைக் கண்ணா' மாலே மணிவண்ணா போன்ற சில வரிகள் தவிர மற்ற எல்லாம் உள்ளே அடி ஆழத்தில் புதைந்து விட்டன.
இந்தப் பாசுரங்களின் நடுவே அவரே மடப்பள்ளியில் அன்றைய பிரசாதத்தை சமைப்பார். இதற்கு தமிழில் தளிகை என்ற ஒரு சொல் உண்டு, இறைவனுக்கு கொடுக்கும் சோறு என்று பொருள். இதைத்தான் சொல்வார்கள்.வீடுகளில் அவர்களாய் முன்வந்து மார்கழி முழுதும் பொங்கலுக்குக் கொடுப்பார்கள். இதுதான் என் போன்ற எல்லோரையும் கோவிலை நோக்கி ஈர்க்கும். பூஜை முடிந்ததும் அந்த வெண்கல மணி அடிப்பார்கள். தெரு முழுதும் கேட்கும். பொங்கல் ரெடி என்று அர்த்தம். முதலில் ஸ்லோகங்கள் சமஸ்க்ருதத்தில் ஆரம்பிக்கும். பின்னர் தமிழுக்கு வந்தால் பொங்கல் நெருங்கி வருகிறது என்று அர்த்தம். பல்லாண்டு பாடினால் இன்னும் பக்கம்.
பெரும்பாலான நாட்களில் வெண்பொங்கல். மிளகு, ஜீரகம் , பெருங்காயம், கருவேப்பிலை தாளித்த , பாசிப் பருப்பு குறைந்த, பச்சரிசிப் பொங்கல். நாட்காலே நீராடி நெய்யுண்ணோம் என்று சொல்லி விழுங்க வேண்டும் மற்ற நாட்களில் சர்க்கரைப் பொங்கல். பொன்னிறமும் , சிறிதே கருமையும் கலந்த பொங்கல். அந்த நிறத்தை எப்படி எழுத்தில் எழுதுவது. கரு வண்டலும் , தூய ஆற்று மணலும் கலந்தாற்போல் என்று சொல்லலாம். ஒட்டிய நெய் ஒளியில் பிரதிபலிக்கும். வெள்ளாற்றுப் படுகை போல், அப்போது பெய்த மழையில் நீர் ஓடி தடம் மிஞ்சிய கால் படாத மண் போல் நினைவுக்கு வருகிறது. ஒரு பித்தளை அடுக்குப் போகினியில் விநியோகம் செய்வார். இடது தோளில் சுமந்து , கோயில் சாவியை வலப்பக்கம் மாட்டி நாளெல்லாம் சுமந்து நடந்த அதே அடுக்குப் போகினி. இதை வைணவத்தில் சேவை என்கிறார்கள். இதே போல் மதுரை வீட்டுக்கருகில் ஒரு முதுகு கேள்வியாய் வளைந்த, வயிறே இல்லாத, ஒளி பார்க்க முடியாத , வயதானவர் பல வருட காலமாய் ஊழியம் செய்கிறார். கடவுள் மட்டுமே காக்கிறார் எல்லோரையும்.
Comments
Post a Comment