அழித்தல் என்பது இப்போது இன்னும் பல மடங்கு வேகமாகி இருக்கிறது.
சில நாட்கள் முன்பு ஒரே ஒரு தனி புல்டோசர் தர்மபுரி நெடுஞ்சாலையில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டியிருந்தது. ஓட்டுநர் மட்டும் வேலை பார்க்கிறார். இரண்டாவது மனிதரே வேலையில் இல்லை. இதே வேலை பல நாட்களுக்கு நூற்றுக்கணக்கான ஆட்கள் செய்வதை சில வருடங்கள் முன் பார்த்திருக்கிறேன். ஒரு பக்கம் வண்டிகளை மறித்து , கடப்பாரை , மண்வெட்டிகளை வைத்து செய்த வண்ணம் இருப்பார்கள். ஒரு சில கிலோமீட்டர்கள் வாரக்கணக்கில் ஆகும்.
அதே நாள் ஒரு ஐம்பது கருத்து அறுக்கும் இயந்திரங்கள் படை போல் போய்க்கொண்டிருந்தன.
ஒரு வனத்தின் அழிவையும் , அதை அழிப்பவனுடைய மனநிலையையும் துல்லியமாகச் சித்தரிக்கும் நாவல் சாயாவனம்.இது 1969-ல் வெளிவந்திருக்கிறது. மிகை உணர்ச்சிகளே இல்லாமல் இப்படி ஒரு அழிவைச் சித்தரிக்க முடியுமா ? மிக மெதுவாக சூடேற்றுவது போல், வருடக் கணக்கில் மாத்திரைகளை உற்சாகமாய் முழுங்கி கடைசியில் புது வியாதிகளால் உயிர் இழப்பது போல.
சிதம்பரம் வெளி நாட்டில் இருந்து கிராமத்திற்கு வருகிறான். அவனுடைய அம்மா இவனுக்கு இரண்டு வயது ஆகும்போது கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். அப்பா சாமியார் ஆகி ஒரு நாள் வீட்டில் இருந்து சென்று விடுகிறார். அம்மா வளர்த்து ஆளாக்குகிறார். இவர் இறந்தபின் ஊர் தேடி வருகிறான்.
சாம்பசிவ ஐயரிடம் சாயாவனத்தை விலைக்கு வாங்குவதில் ஆரம்பிக்கிறது. கதை முழுவதும், சிதம்பரத்தின் வேகம், செயல் நோக்கிய ஒருமை , எதாவது செய்த வண்ணம் இருப்பது நுண்ணியமாக சித்தரிக்கப் படுகிறது. ஒரே நாளில் பேசி முடிக்கிறான், முழுத்தொகையும் அதே நாள் கொடுக்கிறான். பத்திரம் இல்லாமலே தனி ஆளாக வேலை ஆரம்பிக்கிறான்.
சிவனாண்டி தேவர், இவர் நாட்டாமை, எல்லாக் காடுகளையும் பராமரிக்கிறார். ஐயர் தன்னைக் கேக்காமல் காட்டை விற்றது இவருக்கு கோபத்தை வரவழைக்கிறது. சிதம்பரம் கோபத்திலிருக்கும் இவரை நேரிலே வீடு தேடி பார்க்கிறான். உறவுக்காரர் என்று தெரிகிறது. இதுதான் இவர் கண்ணை மறைக்கிறது. வீட்டிலே தங்க இடம் கொடுக்கிறார். முதலில் 'எம்மாம் பெரிய காடு? அழிக்க முடியுமா? ' என்கிறார்? . சிதம்பரம் 'நான் சீக்கிரத்தில் அழிச்சுடுவேன்' என்கிறான். 'கையில நாலு காசு சேந்துட்டா அதான். தல கால் புரிய மாட்டேங்குறது' என்று சொல்கிறார். ஆனால் கதை செல்லச் செல்ல இவரும் காட்டின் அழிவில் பங்கு பெற ஆரம்பிக்கிறார். சுற்றியுள்ள பலரை உள்ளே இழுக்கிறார். சிதம்பரம் இதை காதில் வாங்காமலே ' இன்னும் ரெண்டு நாள்ல வேல தொடங்கலாம்னு இருக்கேங்க . ஒரு பத்து ஆள் இருந்தா சொல்லுங்க' என்கிறான். பல இடங்களில் இவருக்கு சிறுது தயக்கம் வருகிறது, ஆனால் உறவு தான் இவர் கண்ணை மறைக்கிறது என நினைக்கிறேன். கதை போகப் போக சிதம்பரத்தை புகழ்ந்த வண்ணம் இருக்கிறார். சிதம்பரத்தின் செயலின் தீவிரம் இவரில் ஒட்டுகிறது . அவருக்காக தானே இறங்கி வேலை பார்க்கிறார். பல நாட்கள் காட்டில் வைத்த தீ எரியும் போது தான் , செய்த செயலின் தீவிரம் இவருக்கு விளங்குகிறது.
சிதம்பரம் ஒரு தேர்ந்த நிர்வாகி போல் வருகிறான். மிக குறைவாக , சுருக்கமாக பேசுகிறான். சிவனாண்டி தேவர் பல நீள கதைகளை சொல்லிய வண்ணம் இருக்கிறார். ஆனால் இவன் சொல்வதெல்லாம் ஒரு வரியே. எல்லோரையும் பார்த்த வண்ணம் இருக்கிறான். கூலிக்கு ஆள் கிடைக்காத போது , அடுத்த ஊரில் இருந்து அழைத்து வருகிறான். யார் திட்டினாலும் கோபமே வருவதில்லை. தூக்கம் வராமல் இரவில் காட்டுக்குச் சென்று வேலை பார்க்கிறான். பொறுமை இழந்தால் சில நேரம், பேச்சை நுணுக்கமாக தன் பக்கம் திருப்புகிறான். அடுத்த கட்டத்தை மனதில் திட்டமிட்டபடியே இருக்கிறான். ஒரு இயந்திரம் போல் செயல்படுகிறான். வேத பாட வகுப்பு நடத்தும் பாலசுப்பிரமணிய ஐயர் வாழ்க்கை , பயனற்றது, வெறுமை நோக்கிச் செல்வது என்று நினைக்கிறான். இவரும் கடைசியில் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வருவது , அவரது சரிவைச் சொல்கிறது.
தான் செய்யும் அழிவின் தீவிரம் சிதம்பரத்திற்க்கு தெரிவதே இல்லை. தானாய் இறங்கி வேலை பார்க்கும் முதல் நாள், குறிஞ்சாக் கொடியில் கட்டித் தொங்கும் ஊஞ்சலை சாதரணமாக வெட்டுகிறான். இயற்கை நுகர்வதற்கே என நினைக்கிறான்.காட்டை எதிரி என எண்ணுகிறான்.
புதர்களை, கொடிகளை , மரங்களை வெட்டிச் சென்றபடியே இருக்கிறான். தேனீக்கள் கொட்டுகின்றன, முட்கள் கிழிக்கின்றன , கீழே விழுகிறான் , அருவாள் வெட்டுப்படுகிறான். எதுவுமே அவன் வேகத்தைக் குறைக்கவில்லை. வேலை நடுவில் ஒரு குருவிச் சத்தம் கேட்ட வண்ணம் இருக்கிறது. புதரில் தவறி விழுந்த குருவி , சிறகில்லாதது, கத்தியபடியே இருக்கிறது. இவன் கண்ணில் நீரை வரவழைக்கிறது.ஆனாலும் இவன் தயங்குவதே இல்லை. குரங்குகள், நரிகள், கை விடப்பட்ட மாடுகள் எல்லாம் ஓடி வெளியேறுகின்றன. இறுதியில் சில தீயில் கருகி இறக்கின்றன. காட்டில் தீ வைக்கும் செயல் தான் இவனை சிறிது யோசிக்க வைக்கிறது. வைத்த நெருப்பு பல நாள் எரியும் போது தான் சிறிது கலங்குகிறான். பன்னிரண்டாவது நாள் மழை வந்து அணைக்கிறது. எல்லா மரங்களும் எரிந்து முடிகின்றன. புதர்கள் எல்லாம் தடம் இல்லாமல் கருகுகின்றன.சாம்பலாய் ஓடி வாய்க்காலில் கலக்கிறது. சிவனாண்டி தேவருடன் எரிந்து முடிந்ததை பார்க்கச் செல்கிறான்.
சாயாவனம் எனக்கு சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டத்தில் வரும் மதுரை கோட்டையின் அழிவை ஞாபகம் செய்தது.
பின் வரும் கதை காவல் கோட்டம்நாவலில் வருகிறது. முழு நாவலைப் பற்றி பின்னர் எழுதுவேன்.பின் வருவது இதில் ஒரு பகுதி.
1803-ல் முஸ்லீம் ஆட்சி முடிவுக்கு வந்து பிரிட்டிஷ் கையில் மதுரை வருகிறது. எல்லா பாளையக்காரர்களையும் தங்கள் கோட்டைகளை தாங்களே இடிக்கச் சொல்கிறார்கள். எல்லா கோட்டைகளும் தரைமட்டம் ஆகின்றன.
மிஞ்சியது மதுரை கோட்டை இன்னும் சில வருடங்களுக்கு. 1844-ல் இதை இடிக்க கலெக்டர் வில்லியம் ப்ளாக்க்பர்ன் ஒரு வினோத திட்டம் தயாரிக்கிறார். கோட்டை பல மைல் நீளம் , 15 அடி அகலம் , 24 அடி உயரம். இரண்டு சுவர்கள் உள்ளது. கோட்டையை இடிக்காமல் மதுரையின் வளர்ச்சி இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார். சஸ்பெண்ட் ஆகி திரும்பி வருகிறார்.
மிஞ்சியது மதுரை கோட்டை இன்னும் சில வருடங்களுக்கு. 1844-ல் இதை இடிக்க கலெக்டர் வில்லியம் ப்ளாக்க்பர்ன் ஒரு வினோத திட்டம் தயாரிக்கிறார். கோட்டை பல மைல் நீளம் , 15 அடி அகலம் , 24 அடி உயரம். இரண்டு சுவர்கள் உள்ளது. கோட்டையை இடிக்காமல் மதுரையின் வளர்ச்சி இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார். சஸ்பெண்ட் ஆகி திரும்பி வருகிறார்.
வேலைக்கு 25000 பேர் வேண்டும். இவ்வளவு பெரிய வேலைக்கு அரசிடம் பணம் இல்லை. இப்போது கலெக்டர் இடிப்பவர்களுக்கு இடித்த இடம் சொந்தம் என்கிறார். மக்கள் ஆசைப் பட ஆரம்பிக்கின்றனர். கோட்டையில் வசிக்கும் காவல் தெய்வங்கள் இடி படுவது எல்லோர் மனதிலும் ஒரு தயக்கத்தை ஏற்படுத்துகிறது. யாரும் முதலில் வேலைக்கு வர உடன்படவில்லை. பின்னர் எருமை பலி கொடுத்து , பரிகாரம் செய்து கடவுள்களை கோட்டையில் இருந்து வெளியேற்றி , செல்லத்தம்மன் கோவிலில் தெய்வங்களை மீண்டும் எழுப்புகிறார்கள். பின் தயக்கம் இல்லாமல் நகரின் செல்வந்தர்கள் , மக்களை திரட்டி இடிக்க ஆரம்பிக்கிறார்கள். விழுந்த தூண்களையும் , கற்களையும் எடுத்து வீடுகள் கட்டுகிறார்கள் . பாலங்கள் அமைகின்றன. எலும்பு முறிவு , காயம் பட்டவர்களுக்கு மருத்துவ மனை அமைகிறது, நாவிதர்கள் வேலை செய்கின்றனர்.1847-ல் கோட்டை முழுவதுமாக இடித்து முடிக்கப் படுகிறது. இன்று இருக்கும் விளக்குத்தூண் வில்லியம் ப்ளாக்க்பர்ன் நினைவில் கட்டப் படுகிறது. கீழே கல்வெட்டில் ‘மதுரை மக்களின் நண்பன்’ என பொறிக்கப் படுகிறது. முன்னின்று இதை நடத்திய மாரட் , மேஸ்திரி பெருமாள் ஆகியோரின் பணியின் நினைவாக நான்கு தெருக்களும் பெயரிடப் படுகின்றன.


Comments
Post a Comment