இந்த நாள்...
--------------
நவம்பர் 1 என் வாழ்வில் ஒரு முக்கியமான நாள். இன்றுடன் கல்யாணம் ஆகி பதினெட்டு வருடம் ஆகிறது. ஒரு வயதில் கல்யாண நாள் மறந்துவிடும் என்பார்கள். இப்போதெல்லாம் பெயர்கள் மறக்கின்றன. நேற்று ஒரு அம்மாள் போனில் நான் பையனை வகுப்பில் பேர் போட நினைவில் நிறுத்த வேண்டிய இரண்டு பெயர்கள். அப்புறம் அவர் பெயரை அவர்களிடம் சொல்ல வேண்டுமா என்று கேட்டேன். நல்ல வேலையாக அவர் பெயரை மீண்டும் சொன்னார். ஆக மூன்று பெயர்கள் அரைமணிக்கு நினைவில் நிற்க வேண்டும். மூன்று பெயர்கள் போக அந்தப் பள்ளியின் பெயர் மறந்து போனது, ஒரு மாதிரி பெயரில்லாமல் சமாளித்து முடித்தேன். இப்போது வருகிறது, ஆண்ட அம்மாள் பெயர் ஸ்நேகல்.
திருமண நாள் அன்று என்றைக்கும் பெங்களூரில் விடுமுறை. கர்நாடகா தனி மாநிலமாக மாறிய நாள். ஆக மறப்பது கடினம். அப்படி ஒரு தானாய் அமைந்த அமைப்பு.
அப்படித்தான் வாழ்க்கை சுவரில் கிழித்த இந்த 18வது மணக் கோடும் ஆரம்பித்தது. காலை காபிக்கு பால் சுட வைக்கும் வேலை முதலில், ஏனோ பித்தா பிறை சூடி என்று வாயில் வந்தது. பின்னர் தெரிந்த இன்னும் சில தேவாரப் பதிகங்கள் காபியுடன் கரடு முரடாய்ச் சொன்னேன். 'அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரோ' என்ற வரியின் நேர்மை என்ற சொல்லை அவள் கேட்கமாலே வலுக்கட்டாயமாக விளக்கினேன்.
பின்னர் மீண்டும் சந்தீப் நாராயணின் வருவாரோ வரம் தருவாரோ தொடங்கி சில பாடல்களை அவர் குழந்தைகளுடன் பாடுவதைக் கேட்டேன். இடையில் புதுப் பாலை வாங்கி காய்ச்சச் சொல்லியிருந்தாள். பால்க்காரர் ஹாரன் அடித்தார். பின்னர் சஞ்சயின் துன்பம் நேர்கையில் தானாய் வந்தது, அதையும் பார்த்தேன். மேலிருந்து பால் காய்ச்சியாச்சா என்ற ஒலி வந்தது. எனக்கு பாலை அடுப்பில் வைத்த ஞாபகம் மட்டுமே இருந்தது. பால் பொங்கினால் வேறு சகுனத் தடைகள் அந்த நாளின் தலையில் ஏறி அமரும். அந்த நாளை நம் தோளில் சுமப்பது இன்னும் சிரமம். ஓடிப் போய் அடுப்பைப் பார்த்தேன். அதற்க்கு முன் அவள் நின்றிருந்தாள், 'சரி காய்ச்சிருக்கு'. எனக்கு எப்போது அடுப்பை அணைத்தோம் என்ற நினைவு இல்லை. இதுவே படைப்பின் செயல் என்பது.
அப்புறம் பக்கத்து சிவன் கோவிலுக்குச் சென்றோம். சிவன் கோவிலில் சரியாக திரை போட்டிருந்தார் அர்ச்சகர். சிறிது வெளியே அமர்ந்தேன், பின்னர் அவரே வெளியில் வந்து திருமண நாளா என்று கேட்டார். எதிரில் இன்னொரு தம்பதியர், அவர்கள் மண நாள் போலும் இன்று.
அமர்ந்து நிதானமாய் மலர்களால் சிவனைப் பூசித்தார். சரியாய் இரண்டடி மேல் நின்ற லிங்கத்தின் பூவை அம்பாய் அவர், ஏறிய மேல் பறவையாய் ஒவ்வொரு பூவும் சென்று சரியாய் வான் பார்த்து சிரித்தது. அவர் தட்டில் போட்ட விழுந்த தாள்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அவருடைய உலகம் வேறு, சிரத்தை என்ற சொல் மனதில் தோன்றியது.
இன்று வரை இப்படி எளிதாகத்தான் மண வாழ்க்கையும் என்று எண்ணிக்கொண்டேன். மொத்த வாழ்க்கையும் என்றும் சொல்லலாம்.
அவளை முதலில் பார்த்த நாள் நினைவில் வந்தது.
பத்துப்பேர் நாற்காலியிலும் கீழுமாக அமர்த்திருந்தார்கள். காபியை என்னிடம் கொடுப்பது அவளுடைய அந்தக்கண அசைன்மென்ட். கடல் வண்ணப் பட்டும், சிரிப்பில் தனித்து வெளி நின்ற முன் பல்லும் , முன் முடியும், தளிர் கை விரல்களும் இன்றும் நினைவில் வந்தன. எழுந்து போகும் போது என்னுடைய பின் பையில் இருந்த கத்தைப் பணம் கீழே விழுந்திருக்கிறது. அதை எடுத்து என் பாட்டியிடம் கொடுத்திருக்கிறாள். மணிக்கணக்காய் சத்தமில்லாமல் இருந்து என் பாட்டி , திரும்பும் வழியில் எல்லார் முன் போட்டு உடைத்தார். என்னுடைய பெரியம்மா இந்தத் தலைமுடிக்கு அந்தப் பெண் சரியென்று சொல்ல மாட்டாள் என்றார்கள். அப்போது நாலு திசையும் தோளில் தொங்கும் முடி இருந்தது. பின்னர் அதுவும் நடந்தது. அவளுடைய அப்பாவைப் பார்த்ததும் புகழ் பெற்ற பொதிகை டிவி செய்தி வாசிப்பாளர், இசை ரசிகர், எச்.ராமகிருஷ்ணன் நினைவு வந்தது. இரண்டு நாள் முன் ஒரு பழைய காணொளியை அவளுக்கு போட்டுக் காட்டினேன். அ.ச.ஞான சம்பந்தம் அவர்களை அவர் எடுத்த நேர்காணல். என் அப்பாவின் பெயர் விஸ்வநாதன் , அவர் பெயர் ராமமூர்த்தி. பெரும்பாலும் இருக்கும் வரை தலை, மட்டும் செய்கையிலேயே பேசிக்கொள்வார்கள். என் தந்தை போல் கொடுப்பதெல்லாம் கொடுப்பார் , ஆனால் பையை மட்டும் கண்டிப்பாய் திருப்பிக் கேட்பார். இல்லை , பையில் இருந்து எடுத்த பின்னரே கையில் கொடுப்பார்.
இப்படித்தான் என் பார்வையில் எல்லாம் வழுக்கிய வண்ணம் செல்கிறது . ஆனால் அவள் பார்வை இவ்வளவு எளிதாக இருக்காது. அதில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
வீட்டின் நிம்மதி வேலையில் பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். வீட்டில் சிக்கல் இல்லை என்பதாலேயே, எதோ ஒரு அளவு வேலை பார்த்து பிழைக்க முடிகிறது. என்னுடைய பொறுமையின்மை வேலை விஷயத்தில் பைத்தியம் என்றும் சொல்லும் அளவில் வீட்டில் இருக்கிறது. எப்படியோ நம்மை வைத்து வண்டி ஓடுகிறது. பிள்ளைகள் படிப்பிலும் என் ஈடுபாடு இல்லவே இல்லை. ஏனென்றால் அவைகள் எனக்கு இன்று சோர்வை அளிக்கின்றன. கதைகள், எழுத்து, கலை என்று குழந்தைகள் இருந்தால் நன்று என நினைக்கத் தோன்றுகிறது. இன்று எவ்வளவு தூரம் இது சாத்தியம் எனத் தெரியவில்லை. பிள்ளைகளுக்கும் செய்து காட்டினாலும், இதில் பிடிப்பு வருவதில்லை. படிப்புக்கும் பிடிப்புக்கும் இடையில் இடிபடுவது அவள் மட்டுமே.
Comments
Post a Comment