Skip to main content

சில கவிதைகள்


பாட்டிலும் மூடியும் 

--------------------

அவரவர் பாட்டில்கள்  

அவரவர் மூடிகள்  


அவருடைய ஒரு  பாட்டிலை 

என் மூடியை 

வைத்தும் மூடலாம் 

என்கிறேன் 


என்னுடைய ஒரு பாட்டிலை

எப்போதும்  ஒருவர் 

மூடியை மாற்று 

என்கிறார் 


எனவே என் 

எல்லா பாட்டில்களும் 

கசிந்து கழுத்து நடுங்கியபடியே  

இருக்கின்றன 


ஓர்  கணத்தில் 

எல்லா மூடிகளையும்  கழற்றி 

விண்  பார்க்க 

பாட்டில்களை வைத்தேன்

 

கையில் இருந்தது பெரும்பாலும் 

காலி பாட்டில்கள் என்றறிந்தேன் 

மேலும் சிலவற்றை ஒளி வற்றியது 

சிலவற்றை காற்று இல்லாமல் ஆக்கியது 


கடைசியில்  ஒன்றை 

நானே ஓர்  மிடறாய்  

குடித்துக் கவிழ்த்தேன்


பாடபேதம்

-------------

தொலைபேசிக் கூடுகையில் 

அந்தச் சீனாக்கார பெண்மணி 

இன்னொருவரை  லகுவாய் மதம் மாற்றினார் 


ரவி என்ற ஒரே சொல்லை 

ரஃபி என்று மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி


எதிர்காலம் என்பது 

---------------------

இளமையின் 

எட்டுத் திசையும் அவரை 

உள்ளிறங்கி மீதமின்றி 

உறிஞ்சியபின் 


மேல் குத்திய விழி  

சூப்பிய கன்னம் 

நீர் வற்றிய தோல் 

குச்சிக் கை கால்  


தினம் ஊசியால்  

எழுதிய முழங்கை 

மூடப்பட்ட 

லேசர் துளைகள்


உடம்பில் கருணையுடன் 

குறுவாள் ஓடிய தடம் 

மூன்று வேளை 

காசி மூலிகை  


கூறாக்கி பிறர்

கையில் உடல் 

செய்வதை செய் என 

ஆட்டும் தலை 


இரண்டு வால்யூம்  

மெடிக்கல் ஹிஸ்டரி  

அரை போத 

அரசியல் ஆன்மிகம் 


எங்கு சரிகிறது   

இந்த  எதிர்காலம் 

இப்பாடலின் முதல் வரி 

என்று எழுதப்பட்டது 


என்னுள்   எங்கோ  

பீடத்தில் அமர்ந்துவிட்டது 

இந்த நிகழ்காலமும் 

இதே  கழிமுகம் சேரவே இல்லையா 


கை நழுவி கணத்தில் 

உடைந்த கண்ணாடி போல் 

கடல் மேலே விழும்  

மழைத்துளியாய் கடல் சேர 

வழி ஏதும் இல்லையா


பாலையாய்த் திரிந்து 

வழியில் வற்றினாலும் 

வேண்டாம் இந்தக் கடல்


எதிர்காலம்  என்பது 

---------------------

இளமையின் 

எட்டுத் திசையும் அவரின்  

உள்ளிறங்கி மிச்சமின்றி  

உறிஞ்சியபின் 


மேல் குத்திய விழி  

சூப்பிய கன்னம் 

நீர் வற்றிய தோல் 

குச்சிக் கை கால்  


தினம் ஊசியால்  

எழுதப்பட்ட  முழங்கை 


காற்றில்

பிடி தேடி 

எந்நேரமும் அளையும்

கைகள் 


உடம்பில் கருணையின்  

குறுவாள் ஓடிய தடம் 

மூன்று வேளை 

அகிபீனா  


கூறாக்கி பிறர்

கையில் உடல் 


முடிந்ததைச்  செய் என்றே 

ஆட்டும் தலை 


இரண்டு வால்யூம்  

மெடிக்கல் ஹிஸ்டரி  

அரை போத 

அரசியல் ஆன்மிகம் 


எங்கு சரிகிறது   

இந்த  எதிர்காலம் 


இப்பாடலின் முதல் வரி 

என்று எழுதப்பட்டது 


என்னுள்   என்றோ எங்கோ  

பீடத்தில் அமர்ந்துவிட்டதா ?

நிகழ்காலத்தின் கழிமுகப் 

பயணம் துவங்கிவிட்டதா ?


கை நழுவி கணத்தில் 

உடைந்த கண்ணாடி போல் 

கடல் மேலே மட்டும் விழும்  

மழைத்துளியாய் கடல் சேர 

வழி ஏதும் இல்லையா


பாலையாய்த் திரிந்து 

வழியில் வற்றினாலும் 

வேண்டாம் இக் கடல் சேர்தல் 

என்றால்   


'பரந்ததன் பரவையுள்

நீர்தொறும் பரந்துளன்'

என்றொரு குரல் 

கழிமுகத்தில்  கேட்கிறது


பெருவிசை 

--------------

தள்ளாடும் குழந்தைக்கு 

சேலை நுனிப் பிடி 


கிடையில் ஓடும் ரயிலுக்கு 

மின்சாரம்


விண்ணெழும் விமானத்திற்கு  

உந்தும்  பெருவிசை


தென்திசை நோக்கும் நெஞ்சுக்கு 

அதிகாலை வெளிச்சம் 


பயணம் சீராய்ப் போகையில் 

விசை இல்லை 

 

துன்பத்திற்க்கே 

யாழ்


விடுதலை 

—————

வேலைக்குப் போகும் 

வழியில் 


கழுத்தில் கயிறு 

இல்லாமல் 

கழுத்தறுக்கும் அந்தக் கையின் 

பிடி இல்லாமல் 


முன்னங்கால்கள் உயர்த்தி 

தலை நிமிர்த்தி 

நா நீட்டி  சிங்கமென 

யோகத்தில் அமர்ந்து 


இன்று என்னை 

நேர்கண் பார்த்த 

தூய வெண் 

பொமரேனியன்


இறப்பும் பிறப்பும் 

————————-

அருகில் அமர்ந்திருக்கும் 

அவர் 


அதன் பழைய 

உடலின் கீறல்கள்

மேல் தொட்டுத் தேடி


அதன் வழியே 

மீண்டும் ஒரு 

புது போன் 

வரவழைக்கிறார்


கருவில் உறங்கும் நேரம்          

----------------------------------------

காது குத்தில் பிறந்து 

எங்கோ பூப்புனித நீராடலில் வளர்ந்து 

சில கல்யாணங்கள் கடந்து 

பெயர்சூட்டல்கள்  பார்த்து  


இன்று அறுபதாவது கல்யாணத்தில் 

இந்த அம்மாவின் அருகில் 

இருக்கிறது , 


அதே

கிப்ட் கவர் பிரிக்கப்படாத 

சுவர்க் கடிகாரம்

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...