Skip to main content

சில கவிதைகள்

சில கவிதைகள் 


Potholes 

=========


எங்கும் இல்லாத குண்டும் குழியுமான 

நீளமான சாலையில் 

பல கார்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன் 


நேற்று நடை வந்த குழந்தையாய் 

ஒரு கால் தரையிலும் 

மறு கால் காற்றிலுமாய் 

ஒரே சத்தமும் கும்மாளமுமாய் 

எதிரும் புதிருமாய் 

தத்தித் தாவி 

வீதியில் அசைந்தாடிச் 

செல்கின்றன   


ஒரு ரவுடிக் குழந்தையாய் 

டேங்கர் லாரி 

எல்லோரையும் முந்தியவாறே 

'க்ளக் க்ளக்' என  வழியெல்லாம் 

நீரை எல்லோர் மேலேயும்  

பீச்சியடித்துக் கடந்து  செல்கிறது 


உள்ளே இருக்கும் டிரைவர்கள் 

பெற்றவர்களாய்  

பல் கடித்துப் பார்க்கிறார்கள்


ஒற்றைத்  தாமரை 

==============

இந்தப் புதுக் குடியிருப்பில் 

தனித் தாமரையாய் அவள் 


தனிமை என்கிறாள் 

ஏகாந்தம் என்று சொல்லி 

தப்பித்துப்  போகிறேன்


தணலும் நீரும் 

==========

ஓரிரு நாளாய் 

உள்ளே தணலும் 

வெளியே குளிருமாய் இவ்வுடல் 


வழியெங்கும் கனலாய் எரியும் 

தாமிர இலைகள் 

அதன் மடியைப் பற்றி விழாமல் பிழம்பென நிற்கும்   

ஒரு உதிர்ந்த செங்கொன்றை 

இடையில் பிணைந்து சிறு நதியாய்

ஓர் பசலைக்  கொடி 


வீடு திரும்பும் என் 

காதில் தணல்

தோலெல்லாம்  சன்னமாய்ப் 

படரும் குளிர்

நதியாய் உதிரம் 

நீராய் மேனி 

  

இன்னும் சில அடி தூரத்தில் வீடு 

மஞ்சள் விளக்குகள் எரிய


இரவெல்லாம் 

==========

இரவெல்லாம் அலையலையாய் எண்ணங்கள் 

ஒன்றொன்றாய்ப் திருப்பிப் பார்த்து 

ரமணர் சொல்படி 

செல்லமாய்த் தட்டிச் சிலவற்றையும் 

பலமாய்த் தட்டிச் சிலவற்றையும் 

புறமாய்த் திரும்பிச் சிலவற்றையும் 

வீழ்த்திக்கொண்டே இருந்தேன்  

விடிந்தும் போனது


வட இந்தியாவும் தென்னிந்தியாவும் 

=========================

ஏறக்குறைய 

வட இந்தியாவும் 

தென்னிந்தியாவும் 

ஒன்றாகிவிட்டன 


ஒரே ஒரு 

கருவேப்பிலை மட்டும் 

துறுத்தி நிற்கிறது


கான் புகும் பாடல் - வானப்ரஸ்த கானம் 

============================

நரைகூடிய மைந்தர்களின் 

கையைப் பிடித்தபடி சிலர் 

லேசாய் அணைத்தபடி சிலர்

வண்டியில் சாய்ந்ததமர்ந்து சிலர் 

கண்ணை மூடியோ 

குத்திச் செருகிய பார்வையுடனோ 

இக்காட்டினுள் நுழைகிறார்கள் 


காட்டில் என்றென்றும் பாடப்படும் 

அவர்களின் துதிப் பாடலைப்  பாடி 

பச்சைச் பறவை அவர்களை வரவேற்று  

அவர்களுக்காக அன்று எழுதிய 

தனிப் பாடலின் முதல் வரியை எழுதுகிறது   


அதை ஒரு இளஞ்சிவப்பு  பறவை படித்து 

பாடலை மேலும் சில வரிகள் எழுதி 

நீலப் பறவையிடம் செலுத்துகிறது 


நீலப் பறவை தியானத்தில் அமர்ந்து 

அவர்களின் ஸ்பரிசம் தொட்டு 

அப் பாடலை முழுதாய் எழுதி முடித்து 

இன்னொரு வெள்ளைப் பறவையிடம்  அனுப்புகிறது 


வெள்ளைப் பறவை பாடலை  

சொல்லின் அளவு பார்த்தும்  

பதம் பிரித்தும்  சேர்த்தும்  

பழைய ராகத்தில் அழகாய்க் கட்டுகிறது 


பின்னர் எல்லாப் பறவைகளும் 

சேர்ந்து ஒன்று கூடி 

அந்த  தனிப் பாடலை  அவர்களுக்காக 

ராகத்தில் பாடிக் காட்டுகின்றன 


எண்ணிலாப் பாடல்கள் அங்கே 

ஆனால் அந்த ஒருவருடைய பாடல் அன்று 

உயர் ரத்த அழுத்தம் 


இப்படித்தான் 

என் தந்தையும் ஒரு பாடலுடன் 

வானப்ரஸ்தம் ஆரம்பித்தார்


அலுவலக அந்தாதி 

==================


சென்ற வருட கடைசிச் சொல்லில் 

இவ்வருடம் சரியாய்த் துவங்க வேண்டும் 


அப்படி ஆயிரம் ஆயிரம் அந்தாதிகள் 

ஒன்று கூடிப்  சீர்பார்த்து பாராயணம் செய்து 

ஊரே அந்தாதி பாடும்  ஓர்  பருவமிது 


சென்ற வருடத்தில் செயலான சொற்கள்  எல்லாம்  

திரும்ப மேலெழுந்து வந்து 

சொல்வது நிஜமே என்றன 

சில மிகையாகவே சொல்லிச் சென்றன 

சில சொல் ஏதும் இல்லாமல் மௌனமாய் நின்றன 

செயலாகாத சொற்களும் தோள் உயர்த்தி நின்றன 

செயல் இன்னும் வீரிய விதையாய் உள்ளே என்றன 

 

பின்னர் சிலர்  சொற்களை ஒன்று கூட்டி  காவல் நின்றார்கள் 

ஒன்று கூட்டிய சொற்களை குத்திக் கிழித்தனர் சிலர் 

சிதறிய சொற்கள் கைவிடப்பட்டன 


எஞ்சிய சொற்களை பிரித்து மீண்டும் அடுக்கினார்கள் 

மூன்று அடுக்காய் பிரித்தார்கள் ஜாக் வெல்ச் சொல்படி 


முதல் அடுக்கு விண்ணில் பறந்தது 

இரண்டாம் அடுக்கு கட்டிடமாய் ஆனது 

மூன்றாம் அடுக்கு மண்ணில் புதைந்தது 


அடுத்த வருடம் ஒரு பெரிய கவிஞன் 

புதைந்த அச்சொல்லுக்கும் சிறகளிப்பான்


ஆர்கெஸ்ட்ரா 

===========


ஆள் உயர 

ஒலிபெருக்கிகள் ஒலிக்க 

குரலெடுத்து பாடகர் பாடுகிறார் 


வாத்தியக்காரர்கள்  மைக்கின் முன் 

கதியாய் வாத்திய ஒலி எழுப்புகிறார்கள் 

எங்கும் பாடல்  பேரொலியாய்  கேட்கிறது 


புலனெல்லாம் நிரம்பி வழிகிறது 

பிற எல்லாம் செவியில் முட்டி

வெளியில் தெறிக்கின்றன 


இருந்தும் கேட்கும் எல்லோரும் 

ஏதோ சிறு ஒலியில் பேசிக்கொள்கிறார்கள் 

அதுவும் கேட்பவர் காதில் எல்லாம் சரியாய் விழுகிறது 

தலையாட்டி சிரித்துக் கேட்கிறார்கள் 


அவை எல்லாம் ஒன்றிணைந்து  

கஞ்சிராவின் சலங்கை மட்டும் போல் 

தாள கதியில் பாடலில் சேர்ந்து கொள்கின்றன   


ஒன்று ஆர் கடல் 

மற்றவை அதில் மிதக்கும் தோணிகள் 

இல்லை அதன் அலையும் நுரையும்

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...