Skip to main content

சில கவிதைகள்

சில கவிதைகள் 


ஒரு மறுசுழற்சி 

============

வெள்ளை வெய்யில் அடிக்க ஆரம்பிக்கும் 

இந்தக் காலையில் அந்த மாபெரும் குப்பைத் தொட்டியை 

ஒருவர் கிளறிக் கொண்டிருக்கிறார் 


நான்கைந்து பாட்டில்களை குப்பைத் தொட்டியின் 

சுவரில் தலைகீழாய் வடிய வைத்து 

சுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறார் 


இன்னும் ஆழமாய் கிளறி பாட்டில்களை மட்டும் 

தோளில் தொங்கும் கோணிப்பையில் 

ஒவ்வொன்றாய் சேர்க்கிறார்


அன்றைக்கு தேவைப்படும் அளவு சேர்ந்தபின் 

எடை மதித்து குப்பையை  வாங்கும் கடையில் 

அதை பணமாய் மாற்றுகிறார் 


அதே மாபெரும் குப்பைத் தொட்டிக்கு எதிர் கடையில் 

வேறொரு பாட்டிலை கூண்டின் வழியே 

வலது கைவிட்டு வாங்குகிறார் 


தலை மேலே தட்டி 

டம்ளர் நீர் சேர்த்து 

ஒரு வாயில் உள்ளே ஊற்றுகிறார் 


காலி பாட்டிலை 

அந்த மாபெரும் குப்பைக் தொட்டியில் 

வீசியபடி நிழலில் மறைகிறார்


அந்த ஒரு முடிவின் மேல் உள்ள சுமை  

==============================


இப்போது  இந்த நேரத்தின் பிற எல்லா முடிவுகளும் 

அந்த ஒரே ஒரு முடிவின் மேல் ஏறி நிற்கின்றன 


அந்த ஒரு முடிவின் பின் 

எண்ணற்ற முடிவுகள் 

பதுங்கி ஒளியலாம்  


அந்த ஒரு முடிவு வென்றால்

எண்ணற்ற முடிவுகள் முன் வந்து

தன் பங்கைக் கோரலாம் 


அந்த ஒரு முடிவு தோற்றால்  

வேறு சில முடிவுகள்

கல்லாய் உறைந்து போகலாம் 


அந்த ஒரு முடிவு தோற்றால் 

வேறு சில முடிவுகள்

அழுகி நாற்றம் எடுத்துப் போகலாம் 


அந்த ஒரு முடிவு தோற்றால் 

வேறு சில முடிவுகள்

கண்ணீர் விட்டு கதறி ஓலமிடலாம் 


அந்த ஒரு முடிவு தோற்றால் 

வேறு சில முடிவுகள்

கை தட்டிக் களிக்கலாம் 


அந்த முடிவு மஞ்சள் நீர் கோர்த்து 

புடைத்த புண்ணாய் வீங்கி 

வெடித்து விட இருக்கிறது 


கிளை ஆறுகள் தேடிக் கலக்க 

போக வழி இன்றி  

திமிறி நிற்கிறது 


விழ இருக்கும் 

மாடிக் கட்டிடத்தின் 

அடித்தளமாய் பிதுங்குகிறது 


பின் அது  ஒரு கணம் எழுந்து நின்று 

தன் தோளில் நின்ற 

சிறு முடிவுகளையெல்லாம்

உதறி உலுப்புகிறது 


உடைந்து வழியும் சீழாய்

கரை மீறும் நதியாய்

நிலை குலையும் கட்டிடமாய் 

ஒரு பிரளயமாய் 


ஒரு இனிய பாடலாய் 

விண்ணில் தெரியும் வானவில்லாய் 

கை கூப்பும் பேரிருப்பாய்


உள்ளிருக்கும் நீதிபதி

================

உள்ளிருக்கும் நீதிபதியின் 

இன்றைய தீர்ப்புகளை எண்ணினேன் - 2098

இன்னும் முடியவில்லை 

அதனால் எழுத்தில் வடிக்கிறேன் 


நாளெல்லாம் 

நாம் அவன் அவள் 

இவன் இவள் உவள் 

தாம் அவர் இவர் உவர்  

அவை இவை உவை 


நாளெல்லாம்

நின்றனர் இருந்தனர்  கிடந்தனர் திரிந்தனர் 

நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் 


ஏன் இந்த வேகம் 

ஏன் இந்த பாரபட்சம் 

ஏன் ஒரு நாளில் இத்தனை தீர்ப்புகள் 

எப்படி சாத்தியம் என்றேன்


என் செவி மன மொழி மெய்யெலாம் நீயே 

என் விழி உன் விழி  

என் எழுதுகோலின் மொழியும் அதுவே 

உன் மொழி மட்டும் உன்னுள் உள்ளவரை 

இது எண்ணித் தீராது  என்றார்



மழை நம்மைத் துரத்தித் தழுவும் போது 

-----------------------------------------

மழை ஓய்ந்த பின்னும் மழை 

எங்கோ இன்னும் 

நமக்காய்க்   காத்திருக்கிறது  


எங்கோ ஒரு கடையின் தார்ப்பாயில்  

குச்சியால் நெம்பியதும் 

மேலிருந்து பொத்தென்று விழுகிறது 


எங்கோ ஒரு மரம் கடக்கும் போது 

யானையின்  துதிக்கை நீராய்  

மொத்தமாய் கொட்டுகிறது  


நீங்கள்  அமரும் 

ஜன்னலோர இருக்கையில் 

உங்களுக்கு முன்னே அமர்ந்திருக்கிறது 


யாரோ உதறும் குடையில் 

கூர் வாளாய்க் கிளம்பி 

நிலம் வெட்டிப் புதைகிறது 


சில துளியேனும் சாக்ஸ்களில் புட்டங்களில் 

ஒரு இலையில் பூ இதழில் 

உள்ளங்கையில் ஒட்டி இருக்கிறது  


எல்லாம் தப்பிப்  போனாலும்

சாலையில் தன் ஆயிரம் கைகள் விரித்துக் 

காத்திருக்கிறது உங்கள் கால் படவேனும்   


இதுவும் இல்லயென்றான போது 

சாலையில் ஆள் வைத்து துரத்தி 

வளைத்துத் தழுவிக் கொள்கிறது மூச்சு முட்ட



மெட்ரோவில் நீந்தும் மீன்கள்  

-------------------------------------

அகன்ற நீலத் தரைவிரிப்பில் 

நீந்த இடமற்று நிற்கின்றன 

இந்தச் செப்பல்கள் 


பார்மல் பான்டின் தூண்டிலில் சிக்கி  சில செருப்புகள்  

சலனம் தவிர்த்து அசைவற்று நடித்தன 


சுட்டியும் ராக்கொடியும் பூவும் கொண்டையுமாய் 

நளினமாய்த் தயங்கியும் ஆடியும்  சில செருப்புகள் 


ஒரு தளிர் செருப்பு செருப்புக் குடும்பம் சூழ 

தலை கவிழ்ந்து நிற்கிறது 


உடலெல்லாம் கண்களுடன் ஒரு crocs 

எதிர் நிற்கும் மற்றொரு crocs -ஐ 

கண்ணுடன் கண் பார்க்கிறது 


ஒரு சிறு அலை வீச கதவு திறந்து 

ஒன்றை  ஒன்று நெருக்கி வளையமாய்

கோர்த்தும் தழுவியும் நடனமிடுகின்றன    


பின்னர் எல்லாம் சிற்றலைகளுக்கும் 

மீன்கள்  கூட்டாய் சேர்ந்தும் பிரிந்தும் 

என்றும் போல் தாள கதியில் ஆடின 


அலை சற்றே ஓய 

பேரலை வருகிறது (மெஜஸ்டிக் நிறுத்தம்)

மீன்கள் பிதுங்கி சிதறி 

வெடித்து வெளியேற முயல்கின்றன 


மெட்ரோ சொன்னது :

'நானே நகரின் பெரிய திரட்சி மீன் 

நீங்கள் தினமும் 

என் வயிற்றினுள் நீந்துகிறீர்கள் 

நான் நீந்திக் கொண்டிருப்பது 

இந்த நகரின் காலக் கடலில் '


வெளியேறிப்  பின் 

இப்போது தரையில் மீன்கள்


மின்னலைக் கையில்  பிடித்தல்  

-----------------------------------

இன்றைய சிக்கலை சற்றேனும் முன்னே நகர்த்த தேவையான   

நம்மை தனித்து துலங்க  வைக்க வேண்டிய 


தலையினுள் எரியும் பிழம்பில் கையளவு நீர் ஊற்றக்கூடிய 

என்னுடைய அன்றைய பாடலாய் ஆக வேண்டிய 


அரை மணி முன் என்னுள் தோன்றி மறைந்த அந்த

முக்கியமான யோசனையைத்தான் சலித்துத் தேடுகிறேன் 


மரக்கிளையில் கண் பார்த்து முடிக்கும் முன் 

எங்கோ பறந்து மறையும் பறவை போல் 


கருவறையில் கைகூப்பி நிற்கையில்   

முன் விழும் திரை போல 

 

காலில் இடறும்  கல்லாய்

உதிர்ந்து கீழே விழுந்த

அந்த சொல்லைத்தான் 

மீண்டும் மீண்டும் தேடுகிறேன் 


அறிகிறேன் முளைக்காத விதைகள் 

இப்புவியில் ஏன் இத்தனை என்று

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...