ஆமெனில் எப்படிப் பயன் படுத்துவது?
பொதுவாக பெரிய எழுத்தாளர்கள் அந்தப் பக்கம் போகாதே என்று தான் சொல்கிறார்கள்.பாராவின் இந்தப் பகுதி பதிவர் ஆக எண்ணம் இருப்பவர்களுக்குச் சொல்வது என்று நினைத்தேன்.அவர் சொல்லியது தலைகீழ்.
கண்டிப்பாக சமூக வலைத்தளங்களை எழுதுபவர் பயன்படுத்த வேண்டும்.
ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு.
என் அம்மாவிற்கு AI , LLM போன்ற இக்காலகட்ட முக்கிய வார்த்தைகள் தெரிகின்றன. மனிதமூளை ஆராய்ச்சி இல்லை என்றால் இன்றைய AI/LLM தொழில்நுட்பம் இருந்திருக்காது. ஆனால் மருத்துவத்துறையின் விளிம்பில் இருக்கும் ஆராய்ச்சிகள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை ஏன் இப்படி? . LLM ஆட்கள் சமூக வலைதளங்களில் ஓயாமல் பேசுகிறார்கள். கொண்டுபோய் சேர்த்திருக்கிறர்கள். மருத்துவத்துறையினர் பேசுவதில்லை. அவர்கள் மொழியும் கவிதைபோல் இன்னும் எட்டாமல் நிற்கிறது. இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் குறையாக இந்த பொதுவெளி உரையாடல் அவர்களிடம் இல்லாமல் இருப்பது. டாக்டர்.Pal(ழனியப்பன் மாணிக்கம்) என்றொரு டாக்டர் இதைச் செய்கிறார். அமெரிக்க பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பலர் பொதுமொழியில் காணொளி, வளையொலிகளை நடத்துகிறார்கள். இதை எழுதுபவர்கள் செய்யக்கூடாதா?
பாரா கடைசியாக போஸ்டர் அடித்து நூல் வெளியீடு நடந்தது அவருடன் முடிந்தது என்றார். சவி ஷர்மா என்ற எழுத்தாளரின் புத்தக வெளியீட்டுக் கதை எப்படி நடக்கிறது என்ற புரிதல் கொடுத்தது. அவர் எப்படி ஆளுமையை முன்வைக்கிறார் என்று தெரிந்தது.
சில வருடங்கள் என்னுடன் நெருங்கிப் பணி புரிந்தவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். 7 Steps to Joyful Living - 2nd Edition: The User Manual for Human Life. விற்பனைப் பட்டியலில் பெரிய இடத்தில் இருக்கிறது என்கிறார். இது எப்படி விற்கிறது என்று தெரியவில்லை. போன மாதம் சாஹித்திய ஸ்பர்ஷ் என்று விருது வாங்கிய செய்தி அனுப்பினார். நேற்று அவர் பகிர்ந்த சுட்டியில் பிசினஸ் ஸ்டாண்டர்ட் முதல் பத்து எழுத்தாளர்களில் அவர் பெயர் இருக்கிறது. முதல் இடத்தில் அருந்ததி ராய் பேர் இருக்கிறது. அவரைப் பற்றிய செய்திகள் நிறைய சொல்ல இருக்கிறது. புத்தகத்தில் சொல்லிய எதையும் செய்தாரா என்று சொல்ல முடியவில்லை. உடனிருந்த ஐந்து வருடங்களில் ஒரு பத்தி இவர் எழுதி நான் பார்த்ததில்லை. புத்தகம் உடம்பை ஹார்ட்வெர் என்றும், மனதை , எண்ணங்களை சாப்ட்வேர் என்று வெளிப்படையாக சொல்லிக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஹார்ட்வெர் தேய்ந்து இறுதியில் வேலை செய்யாமல் போவது இறப்பு. இதெல்லாம் விஷயம் இல்லை. இவரும் தொட வேண்டியவர்களை(ஐ.டி) வலைதளங்கள் மூலம் தொட்டிருக்கிறார்.
பாரா வகுப்பில் சொன்னதும் இதுதான். தயங்கினால் நஷ்டம் நமக்குத்தான். நம் பெயரும், முகமும் , நாம் செய்வதும் நம் அடையாளங்கள். அடையாளங்கள் வழி நம்மை யாரென்று முன் வைக்க முடிகிறது. யோசிக்கையில், ஒழுங்காக குட் மார்னிங் தினமும் போடும் ஒருவர் மேல் நல்ல பிம்பமே எழுகிறது.
கவனம் சிதறி, ஸ்க்ரோல் செய்தே பொழுது செல்வதால் , அந்தப் பக்கம் செல்வதை வருடக் கணக்கில் நிறுத்தியிருந்தேன் . வாட்சப் ஒன்றைத் தவிர. அவர் சொன்னபின்பு தான் வலைத்தளங்களில் எல்லா பெரிய எழுத்தாளர்களும் இருப்பதைப் பார்த்தேன். நேர விரயம் இல்லாமல், எழுத்தாளராக மட்டும் , தொடர்ச்சியாக முன் வைப்பது.
திரும்ப கடவுச் சொல் புதிப்பித்து பேஸ்புக்கில் நுழைந்திருக்கிறேன். தொடர்ச்சியாக ஒருமணி நேரம் ஸ்க்ரோல் செய்து முடிந்தது. எழுத்தாளர்களின் பக்கங்கள் என்று நிதானப் படுத்திக் கொள்கிறேன்.
கற்றுக்கொள்ள, செய்ய நிறைய இருக்கிறது. செய்ய வேண்டியவை அழகான சிறிய ஒற்றை வாக்கிய பி.டி.எப் கோப்பில்.இதில் வேறொன்றும் மேலே சொல்ல இல்லை. (நிறைவு)

Comments
Post a Comment