கவிதை ஒரு சுய புரிதல் மரபு இலக்கியம் வாசிக்கும்போது நம்மாலும் இப்படி எழுத முடியுமா என்று ஆசை எழுகிறது. மனுஷ்ய புத்திரன் , விக்ரமாதித்யன் , கல்யாணி, கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளை விரும்பிப் படிப்பேன். முன்னெல்லாம் தேவ தேவன் பிடிபடக் கடினமாக இருந்தன. இப்போதெல்லாம் பரவாயில்லை. ஆனால் அவர் சொல்லும் வால்ட் விட்மன் போன்ற ஆங்கிலக் கவிஞர்கள் படித்ததில்லை. இப்போது ஒரு ஆர்வம் வருகிறது, இதற்கெல்லாம் காரணம் கம்ப ராமாயணம் படிக்க ஆரம்பித்ததே என நினைக்கிறேன்.கம்பன் என்றால் கற்பனை, காட்சிப் படுத்துதல், மொழி அழகு, நாடகத் தருணங்கள், நாலு வரிக்குள்ளும் இருக்கும் மிக நுண்ணிய விவரணைகள் என்று சொல்வேன். இதை ஏன் (இன்னும் முதல் புத்தகம் மட்டுமே ) எனக்குப் படிக்கத் தோன்றுகிறது என்றால் 'செஞ்சொற் கவி இன்பம்' என்பதே. படித்ததும் ஒரு உவகை ஏற்படுகிறது. இதையே தேவதேவன் தன்னுடைய கவிதை பற்றி என்ற நூலில் கவி அனுபவம் என்கிறார். ஏனோ சில நாட்களாக இதிலேயே மனம் செல்கிறது. இப்போதெல்லாம் வண்டியில் செல்லும் போதும் வரும் போதும் பெரும்பாலும் கிண்டிலில் கவிதையே படிக்கிறேன். கவிதை படித்துப் பின் வருவதை இது ஒரு போதை போல என்...