Skip to main content

சில குறுங்கதைகள் - 1.பச்சோந்தி, 2.% குறி, 3.சலிப்பு

குறுங்கதை - பச்சோந்தி  (1/30)

-------------------------------------------

இரண்டு மாதத்தில் அவனை பதினாறு முறை சந்தித்திருக்கிறாள்.


எட்டு திரைப் படங்கள்.

நாலு நீண்ட தூரப் பஸ் பயணங்கள்.


மூன்று தடவை கோவில்கள். 

தவறாமல் பூ வாங்கிக் கொடுத்திருக்கிறான். அர்ச்சனையும் உண்டு.


தன்னுடைய அலுவலக வளாகத்தில்   கடைசியாய்ப்  பார்த்தது .


ஏப்ரல் 1.

இன்றைய  திட்டம் கப்பன் பார்க்.


சிவப்புக்  கொன்றை மரத்தடிப் புல் தரையில் சட்டைப்  பொத்தானைக் கழற்றிக் காண்பித்தான். 

நெஞ்சில் நேற்று வரையப்பட்ட டாட்டூ. 

செம்மையும் பச்சையுமாய். 

துப்பட்டாவை  வாயில் பொத்தினாள் . அழுகை வரவில்லை. 

ரொம்ப வலித்ததா எனக் கேட்டாள்.


கிளியின் படம் . பக்கத்தில் அவள் பெயர். ரோகிணி.

முன்னரே இருந்த   'ச' காலும்  மூக்கும்  முளைத்து அமைதியான பறவையாய்  நின்றிருந்தது . கண் விடுபட்டிருந்தது.


முந்தைய காதலி சரோ.. அது நடந்தது வேறொரு விருட்சத்தின் அடியில்.

'ஏமாத்தலியே?'  என்று கேட்டு வைத்தாள்.

 2/30    % குறி

--------------------------

என்றும் போல் அதிகாலை கண்ணாடியைத் தேடுவதில் துவங்கியது.

வெளிச்சம் தெரிய தூக்கிப் பிடித்தார்.

  

சூரிய உதயம் முன்னால் பரந்த புல் வெளி.

நடுவில் கிழக்கே பார்த்த மூன்று மாடி வீடு. வெயிலில் பொன்  தகடாய் ஜொலித்தது.

நீல வானில் வெள்ளை மேகங்கள் உறைந்து நின்றன.

வாசலில் அல்லி பூத்த தடாகம். 

அன்னங்கள் நான்கு. இரண்டு நீந்திய படி. 

மற்றது கரையேறி மலர்ச் சோலையில் நடந்தது. 


தண்டலைச் சுற்றி வளையத்தில் வயதான தம்பதிகள் நடை பழகினர்.

மணமான ஜோடிகள் மெது ஓட்டம் சென்றனர்.

நாயைப் பிடித்து ஒருவர்  சாலை கடந்தார்.

ஒரு கார் போனது . மற்றொன்று அதை எதிர்ப் பக்கம் கடந்தது.

தெற்கே யோகப் பயிற்சிக் கூடம். ஒரு அணி கண் மூடி புஜங்காசனம் செய்தது.


கீழே புள்ளி போட்ட எண்கள்,  சதவீதக் குறிகள் , கடன் கொடுக்க வங்கிப் பெயர். 


பேப்பரை மடித்து மேஜையில் வைத்தார். 


என்னங்க காபி இந்தாங்க என்றாள். 

மடக்கு உறிஞ்சி, சக்கரை பத்தல என்றார். 


3/30 - சலிப்பு 

-------------------------------

நாற்காலியில் புத்தகம் படிக்கும் போது ஏதோ காலில் கடித்தது.

அவன் கை வலித்த இடத்திற்குச் சென்றது.


உண்ணி.


நசுக்கும் முன் கறையாகும் என நொடி நிறுத்தினான்.

பூச்சி பேசியது.


கொன்று விடு.  அவளைக் காணாமல் அலுத்து விட்டேன். 

இங்கு எங்கோ இருக்க வேண்டும்.

பொழுதுக்கும்  ஊர்ந்தபடி உடல் தேடிப்  பைத்தியமாய் அலைகிறேன். 


ஆனால் உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஒரே சமயத்தில் மரணத்தையும்  தேடிச் செல்கிறேன் . 

எனக்கு இச்சை தீர்தலும், இறப்பும் ஓர்  கணத்தில்.

அது அன்றி அழிவில்லை  எனும் வரம்.


நடுவில் தீராப் பசி. உன் மயிர்க் கால்களை அடைந்தேன். 


ஒன்று என்னை காலத்தின் மேல் ஏற்று. இல்லை எங்கேனும் எருமை கண்டு சேர்த்து வை.  

தயங்காதே, இரண்டில் ஒன்றாய் விடுதலை அளி. 


உலகில் ஓயாத தேடுதல் போரடிக்கிறது.


யோசித்தான்.

வி...ர...ல்...அ..ழு


பாவி மீண்டும் கீழே விட்டான். 

படிப்பவன் முடிவெடுக்க மாட்டான் என்று சொல்லி நகர்ந்தது.


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...