Skip to main content

சில குறுங்கதைகள் - 1. சோதனை ஓட்டம் 2.ஸ்க்ரோல் பேக் 3.மறுசுழற்சி

4/30 சோதனை ஓட்டம் 

--------------------------

அன்று மாலை ஏழு பேர் அறையின் கிழக்குச் சுவரில் சாய்ந்திருந்தான். 
எல்லோரும் டிகிரி பாஸ். நல்ல வேலையை எதிர்பார்த்திருந்தால், பிழைப்பு?

அவளுக்கு இப்போது அவசரம்.

பைக் டாக்சி அழைத்தாள்.


அவனுக்கு அழைப்பு வந்தது. சிரித்தபடி  ஏற்றுக் கொண்டான்.

சர்ச் ஸ்ட்ரீட் பப் சவாரி . 
பைக்கையும் இரண்டாவது தலைக் கவசத்தையும் எடுத்தான். அந்த யூனிபார்மை அக்கணம் வெறுத்தான்.


இப்போதெல்லாம் எல்லோரையும் அழகென்றே தோன்றுகிறது. 
பெர்ஃப்யூம் வாடை தலையை எட்டியது.
தாறுமாறாய் ஓட்ட எண்ணினான். புகார் செய்வாள்.   


பெரிய  வேலை கிடைத்து விட்டதென்று கற்பனை செய்தான். 
பின்னால் மனைவி. நடுவில் குழந்தை. இருவரும் ஆங்கிலத்தில் பேசினார்கள்.

இருவருக்கும் இடையில் தோள்ப்பை வேலி. 
கை  படாமல் இறங்கி UPI செய்து சாலையைக் கடந்தாள். 

 

வீடு திரும்ப இரவு பிடித்தது. 
கொடியில் தொங்கிய பத்து நிமிட டெலிவரி சட்டையில் வேறொன்றை மாட்டினான்.
அடுத்த மணி சரியாய் ஒலித்தது. 
டின்னர் டைம்.

5/30 ஸ்க்ரோல் பேக்  
------------------------------ 
ஒழுங்கற்ற சத்தம் பெருவிசையாய் தலையில் முட்டியது.
நாசியில் ரப்பர் வாடை. இருளற்ற முடிவில்லாத பொன்னொளிக் குகை.

கண் மூடிய அந்தக் கடைசி ஐந்து நொடிகளில், அவன் தன்னையே திரையில் கண்டான்.

தாயின் மார்பில் முலை உறிஞ்சினான்.  
அப்பாவின் தோளில் தூங்கினான்.
அக்காவின் கை பிடித்துத் தளர் நடை நடந்தான்.

விளையாட்டில் எப்போதும்  சண்டை போட்டான்.
பள்ளியில் ஆசிரியர் அடிக்கையில் பிரம்பைப் பிடித்தான்.
இள வயதில் யாரையோ துரத்தி அடித்தான்.
அம்மாவிடம் குரலெடுத்துக் கத்தினான்.

முதல் வேலை,கல்யாண மேடையில் சிரித்தான். 

சிகரெட்டுடன் நள்ளிரவில் ரீல்ஸ் பார்த்தான்.
மனைவி பேசுவதை அடுத்த அறையில் இருந்து கேட்டான்.
பணி  இழந்தான். விவாகரத்து ஆனது. 
நாளெல்லாம் குடித்தான்.

போதையில் வாகனம் ஓட்டினான்,
தூரத்தில் மை இருளில் கண்களில் ஒளி கொண்ட எருமை , பரிவுடன் தன்னை நோக்கி வந்தது.
அன்று முழு அன்புடன் ஓர் உயிரைத் தழுவினான்.

6/30 மறுசுழற்சி
---------------------
காலை ஒன்பதரை.

பிரதம மந்திரி மக்கள் மருந்தகத்தில் தலைவலி மாத்திரை வாங்கினான். 
நீரில்லாமல் ஒன்றை விழுங்கினான். 

டாஸ்மாக் எதிர் குப்பைத் தொட்டியில் மேய்ந்திருந்த இரண்டு மாடுகளை விரட்டினான். 
அவனைத் தெரிந்ததால் அவை எளிதில் அகன்றன.

குவியலைக்  கிளற ஆரம்பித்தான்.
அதற்கென நகராட்சி அலுவலகச் சுவரில்  குச்சி வைத்திருந்தான்.
பாட்டில்களை மட்டும் பொறுக்கி எடுத்தான்.  
பெரும்பாலும் உள்ளங்கையில் அடங்குபவை. 
கழி கிளறியபடி இருந்தது. பெட்டிகளின் ஓசையே வந்தது. 
ஈரமாக இருந்தவற்றை வரிசையாகக் கவிழ்த்து உலர்த்தினான்.  
எண்ணிக்கை போதும் என்று தோன்றியது.

பூங்காவின் கல் பலகையில் படுத்து எழுந்தான்.  

மூன்று தெரு தள்ளிய பழைய காகிதக் கடையை அடைய மணி நேரம் பிடித்தது.
தானாய் போத்தல்களை எடை பார்த்தான்.

தேநீர் அருந்தி பொழுதை இழுத்தான்.
வட்டமாய் அங்கு மீள பன்னிரண்டு ஆனது. 

கவுண்டர் திறந்தது. 
மர நிழல்களில் காத்திருந்தோர் சிலேரே எனினும் சிறு அவசரம்.

நீர் சேர்த்துக் குடித்து மீண்டும் ஒரு குப்பியை அப்பெட்டியில் சேர்த்தான். 

Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...