உள்ளிருக்கும் காடு
உள்ளிருக்கும் காடு ------------------------ ஒரு வாரமாக காடு மனதினுள்ளே இருந்து கொண்டிருக்கிறது. சென்ற வார குடகுப் பயண எச்சம். இதை எழுதியெடுக்க இன்னும் உள்ளே உருட்டித் திரட்ட வேண்டியிருக்கிறது. இப்படி எழுத நினைப்பது முதல் நாள்களில் கொழுந்து விட்டு எரிந்து, அதன் பல நூறு நாவுகள் வாய் மூடி மௌனமாகி கனலாய்க் கரியாய்ப் போவது புதிதல்ல. வேலையையும் பொழுதையும் குறை சொல்லிகொண்டே இருக்கலாம். விஷயம் அதுவல்ல. மனதின் உள்ளே ஒருங்க வேண்டும். அது வேறு ஒரு காடு. கிளை பிரிந்து பொழுதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. காலையோ, கையோ, கழுத்தையோ பற்றி வெளியிருக்கும் வனத்திற்கு வர நினைத்தேன். எனவே கானுலா செல்லும் வீடியோக்களை பார்த்தபடி இருந்தேன். ஒருவர் பங்களுரில் இருந்து மைசூர் தாண்டிப் போகும் காவி என்னும் காட்டு வழியைப் பதிவு செய்திருந்தார். நாற்பத்தைந்து நிமிடமும் பெரிய திரையில் பார்த்தேன். ஒரு வழிப் பாதையில் அரசாங்கப் பேருந்தில் செல்லும் பயணம். மரங்களில் உரசி பேருந்தின் கண்ணாடியில் இலைகள் பயணித்தபடி வந்தன. ஏதோ ஒரு பறவையின் எச்சம் ஒட்டியிருந்தது. ஒரு காட்டெருமை அழகிய ப்ராக்கெட் போன்ற கொம்புகளை ...