நீரின்றி (சிறுகதை)
நீரின்றி (சிறுகதை) ----------------------- காயத்ரி வீட்டின் பின் கதவைத் திறந்து கொல்லையில் நின்று நெற்றியில் கை வைத்து கிழக்கே பார்த்தாள். சூரியன் பார்வையை இன்னும் மறைத்தது. நீல வானில் ஒரு துண்டு மேகம் தெற்குப் பக்கம் இருந்தது. வெள்ளைத் தனித் துண்டு. காற்றே இல்லாததால் ஸ்தம்பித்து நின்றிருந்தது. அவள் இங்கிருந்து பார்க்க வேண்டிய ஊரின் நல்ல தண்ணீர்க் கிணறு அவள் நிற்கும் இடத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேலே இருக்கலாம். அவளுக்கு கிணற்றில் கூட்டம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் .ஒரு அரிசி மணியை பத்து எறும்புகள் திசைக்கு ஒன்றாய் இழுப்பது போல் மனதில் ஒரு பிம்பம் வந்து போனது. முள்ளுக் காடுகளாய் மண்டியிருந்த கிடங்கைத் தாண்டி ஓங்கிய இரட்டைப் புளிய மரம் தெரிந்தது. அதை ஒட்டிய மஞ்சள் பள்ளிக் கூடக் கட்டிடம் பார்வைக்குப் பிடி கொடுத்தது. கிணற்றைச் சுற்றி நிறைய தலைகள் தெரிந்தன. அவள் நிற்கும் தரையின் அனல் கழுத்துக்கும் தாடைக்கும் தலைக்கும் ஏறி ஓடு என்றது. இன்னும் கொஞ்சம் நேரம் போகட்டும் என்று உள்ளே போய் விட்டாள். நேற்று தான் காயத்ரி அம்மா ஊரில் இருந்து வந்திருந்தாள். அப்பா தவறிப் போய் ஒரு மா...