ஒரு சிறிய கணக்கு:
வீட்டில் இருந்து ஆபீஸ் செல்லக் கடக்க வேண்டிய சிக்னல்கள் : 17
சிக்னல்கள் பெரும்பாலும் auto mode-ல் ஓடுகின்றன. டிராபிக் போலீஸ் அவரே இயங்கச் செய்தால் டிராபிக் கிழிந்தது என்று அர்த்தம். ஆகவே இதை விட்டு விடலாம்.
இந்த கணக்குக்காக ஆட்டோ மோட் என்று வைத்துக் கொள்வோம்.
ஆட்டோ மோட் சிக்னல் இயங்கும் விதத்தை இவ்வாறு கூறலாம். 24 மணி நேரத்தை 8 கூறாக பிரிக்கிறார்கள். இரவு 12லிருந்து 7 மணி வரை சிக்னல் கிடையாது. 1) 7-8 2) 8-11 3) 11-5 4) 5-6 5) 6-9 6) 9-10:30 7)10:30 - 11:30 8) 11:30 - 12:00
ஜங்ஷன்-ஐப் பொறுத்து ட்ராபிக்கை 4 அல்லது 5 கட்டமாக (phase) பிரித்து இருக்கிறார்கள். இதை ஒரு திசையில் வண்டியில் உள்ளவர் ரோட்டைக் கடக்கும் வாய்ப்பு எனலாம். நடப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு. இந்த ஒரு வாய்ப்பு காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணிக்குள் கடந்தால் 40 - 60 நொடிகள் (பச்சை விளக்கு). அடுத்த வாய்ப்பு அடுத்த 3 லிருந்து 4 நிமிடங்கள் கழித்து. அதாவது சிகப்பு விழுந்த பின் காத்திருப்பு, cycle time என்பது. சாம்பிளுக்கு ஒன்று கீழே.
ஒரு சிக்னல் ஒரு நிமிடமே என்றாலும் 17 நிமிடங்கள் சிக்கனல்களில் நின்று கழிக்க வேண்டும். அன்றைய ராசியைப் பொறுத்து இது கூடவோ (எல்லாமே ரெட் ) குறையவோ (எல்லாமே க்ரீன் ) ஆகும். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு நேரம். இது ஒரு ஆப்டிமிஸ்டிக் கணக்கின் படி.
முடிவில் சைக்கிள் வேகத்துக்கு வந்து விடுவீர்கள் ~16/17 kmph . இந்த நிற்கும் நிமிடங்கள் சைக்கிளின் பொன்னான வாய்ப்பு.
ஒரு உரசல்:
அப்போது தான் அந்த கார் TVS-50 -ஐ உரசி விட்டுச் சென்றது. அதில் இருந்தவர் எவ்வாறோ தடுமாறி வண்டியை விழாமல் நிறுத்தி விட்டார். இது வேகத்தடைக்கு சற்று முன் என்பதால் ஆள் கீழே விழவில்லை. இடித்த வண்டி நிற்காமல் சென்று விட்டது.
ஆனால் இவர் பின்னால் மூன்றும் , காலுக்கு இடையே ஒன்றுமாய் நான்கு கரி மூட்டைகளை வைத்துக் கட்டி இருந்தார். கித்தான் பைகளில் இருந்து கரி அங்கங்கே வெளியே வந்து கொண்டு இருந்தது. அதில் சாய்ந்தே அவர் ஓட்டியிருக்க வேண்டும். காலில் இருந்த செருப்பெல்லாம் கரியாக இருந்தது. முகமும், உடலும், முதுகும் கரிக்கோடுகளாய் இருந்தது. அவரின் சிவப்பு நிறம் கரியை இன்னும் எடுப்பாக்கியது.
நான்கு மூடைகளும் கீழே விழுந்து விட்டிருந்தன. அவர் தடுமாறியதில் இடத்திற்கு ஒன்றாய் கிடந்தன.
கார்களும் , வண்டிகளும் அவரைக் கடந்த வண்ணம் இருந்தன. ஹார்ன் ஒலிகள் சத்தமாக கேட்கத் துவங்கின. அந்த மூட்டையை அவர் ஒருவரால் தூக்க முடியவில்லை. காலின் இடையில் இருந்ததை திருப்பி வைத்து விட்டார். அந்த இடத்தில இருந்த கடையின் முன்னால் எப்போதுமே கூட்டம் இருக்கும். ஆனால் அவர் யாரையும் பார்க்கவோ , சட்டை செய்யவோ இல்லை. பின்னால் ஒரு மூடையை அவரே தூக்கி வைத்து விட்டார்.
இப்போது இரண்டாவதை தூக்கி அதன் மேல் வைக்க வேண்டும். இடுப்புக்கு மேல் தூக்க அவரால் முடியவில்லை, மூடை கீழே விழுந்தது. அவர் பார்ப்பாரா என்று நோக்கினேன். சைக்கிளை நிறுத்திவிட்டு போவோமோ என்று யோசித்தேன்.
எங்கிருந்தோ ஒரு swiggy பனியன் , அவரை நோக்கிச் சென்றது. இருவரும் சிரித்தனர். அதன் இரு கரங்கள் கரி மூட்டையை தொட்டு தூக்கின.

Comments
Post a Comment