Skip to main content

ஒரு ஆன்லைன் மீட்டிங்




எல்லா நாளுமே இரவு மீட்டிங்குகள் இருக்கும் . சில  நாள் ஒன்றுடன் முடியும்.சில நாட்களில் 3 அல்லது நான்கு மீட்டிங்குகள் கூட இருக்கும். முடியும் போது நள்ளிரவு ஆகி விடும். நாள் துவங்கியதுமே அந்த  நாள் எத்தனை மணிக்கு முடியும், இந்த நாள் அடுத்த நாளை எவ்வாறு நசுக்கும் என்று பார்த்து சந்தோஷமோ , அதிருப்தியோ அடைவது என் வழக்கம். அலுவலகம் திறந்த பின் இது இன்னும் சிக்கல் தான், ராத்திரி லேட் என்பது அடுத்த நாளின் ஆரம்பம் லேட்டாகலாம் என அர்த்தமாகாது . 

இந்த வகையான மீட்டிங்குகள் பெரும்பாலும் ritual-கள் தான். ஒரு சில டெம்ப்ளட்க்களுக்குள் அடக்கி விடலாம். Goldratt -ல் படித்த இந்த வரிகள் தான் எனக்கு அடிக்கடி நினைவில் வரும்.

“Tell me how you measure me and I will tell you how I will behave. If you measure me in an illogical way… do not complain about illogical behavior…”

நான் பார்த்து எல்லா கம்பெனிகளிலும் பெரும்பாலும் எல்லா மீட்டிங்குகளும் 90% நேரம் defects (குறைபாடுகள்)  சுற்றியே இருக்கும். எத்தனை மொத்தம், எத்தனை வரவு, எத்தனை வெளியேறியது ,யார் பேரில் உள்ளது, யார் கீழே போட்டு மேலேறி உட்கார்ந்திருக்கிறார்கள், இது எவ்வாறு ஊர்ந்து செல்கிறது, ICU/அவசர /மேஜர்/மைனர்  எத்தனை , யார் பேரில் உள்ளது.

பொதுவாக ICU மற்றும் அவசர கேஸ்களுக்கே பெரிய மீட்டிங்கில் இடம் இருக்கும். நீங்கள் இந்த மீட்டிங்குக்கு முன்னால் உங்கள் பேர் அடி படாமல் பார்த்துக் கொண்டாலோ அல்லது நல்ல ஒரு கேஸ் பைலை ரெடி பண்ணி வைத்துக் கொண்டாலோ இதிலிருந்து விடுபடலாம். இல்லை என்றால் டிவி ஷோக்களில் வரும் anchor போல், எல்லோரும் பார்க்க உங்களை கொஞ்சம் முக்கி எடுப்பார்கள். நீங்கள் இதையே  ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி ஜொலிக்கவும் முடியும்.  40-50 பேர் இருப்பார்கள் , 5-6 பேர் ஏதோ பேசுவார்கள். மற்ற எல்லோரும் கேட்பார்கள். இல்லை  mute-ல் போட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பர்.  ஒருவர் mute செய்ய மறந்து , பேசியவாறே குளிக்க துண்டு தேடினார், தெலுங்கில் கேட்டது நினைவுக்கு வருகிறது. 

ஸ்ரீக்கு நேற்று தான் தேர்வு முடிந்தது. குதித்துக் கொண்டிருந்தான். ஒரு பஞ்சர் ஆன கால்பந்தை வீட்டுக்குள் சுவரில் படும்படி எத்திக் கொண்டு இருப்பது தான் அவனுக்கு பிடித்த பொழுது போக்கு. அவனே இரு பக்கமும் விளையாடுவான். பந்தை கடைந்து ஹாலில் இருந்து வளைத்து சுவரில் முட்டுவதற்கு முன் இடது காலால் வளைத்துத் தள்ளி, டைனிங் டேபிள் சேரில் படாமல், பிரிட்ஜ்ல் முட்டும் முன்னர் , சுவரில் உதைத்து தள்ளுவான். 'எஸ்'   என்ற படி முஷ்டியை மடக்கி எதிரணிக்கு விளையாட ஆரம்பிப்பான்.

எனக்கு நேற்றும் மீட்டிங் இருந்தது. ஒரு கையில் தட்டுடன் ஸ்பூனால் சாப்பிட்டவாறே ரூமில் நுழைந்தேன். கதவை மூட முடியவில்லை, லேசாக சாற்றி விட்டு உள்ளே வந்தேன். சேரை இழுத்து உட்கார்ந்தேன், டேபிள் மீது தட்டை வைத்தேன்.எப்போதும் sofa-ல் உட்கார்ந்தவாறு மடியில் கணினியை வைத்து பேசுவேன்.  

மீட்டிங்குள் உள்ளே இருந்தவர் என்னுடன் பேச ஆரம்பித்திருந்தனர். ஒரு அமெரிக்க பெண் இருந்தார் கேட்டபடி. முதலில் நீலா அறைக்குள் வந்தாள் , எரிச்சல் வந்தது. அவளாக தட்டை எடுத்துச் சென்றாள். இன்னொரு முறை கதவு திறந்தது. மறுமுறை உணவு எடுத்து வந்தாள். அதை எவ்வளவு பெரிய கரண்டி வைத்து சாப்பிட்டாலும் முடிக்க முடியாது. எனக்கு இன்னும் கோபம் வந்தது. 'முதல்ல போ , நான் அப்புறம் சாப்பிடறேன் ' என்றேன். மறுபடி குறைத்து எடுத்து வந்தாள். இன்னும் கோபம் அதிகரித்தது. கோபத்தை கட்டுப்படுத்தி தட்டு, கதவு சத்தங்களைப் பொருட்படுத்தாமல் மீட்டிங்குக்குள் பேசிக் கொண்டு இருந்தேன். நடுவில் இன்னும் சிலர் மீட்டிங்குக்குள் வந்தனர், மேனேஜர், அவரின் மேனேஜர் , அவரின் மேனேஜர் எல்லாரும்.  

இப்போது பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ உள்ளே வந்தான். என்னைத் தாண்டி ஓடி balcony கதவைத் சத்தத்துடன் திறந்தான். அங்கு இருந்த சுழலும் சேரை உருட்ட முயன்றான். அது சுவரில் முட்டி இன்னும் சத்தப் படுத்தியது. இப்போது தூக்க முற்பட்டான்.அது அவனை விட உயரமாய் இருந்தது. கீழே பட்டு சக்கரம் உருளும் சத்தமும் , பிளாஸ்டிக் முட்டும் சத்தமும் என்னை பொறுமை இழக்கச் செய்தது. சொல்லி விட்டு , mute செய்தவாறே எழுந்து சென்றேன். 

'வெளியே போ' , என்றேன் 

'இல்லப்பா, நான்...' என்று எதோ சொல்ல வந்தான்.

'idiot உடனே வெளியே போ' என்று  பெரிய குரலெடுத்து கத்தினேன்.

'சாரிப்பா..' என்றவாறு தலையைக் குனிந்து வெளியே சென்றான். கதவை படாரென்று இழுத்து மூடினேன்.

எனக்கே அதிர்ச்சியாய் இருந்தது.நான் அவனிடம் அவ்வாறு நடந்து கொள்வது இல்லை. மிகுந்த குற்ற உணர்ச்சியாய் இருந்தது.

மீட்டிங் முடிந்து கதவை திறந்து வெளியே போனேன். 

'இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு' என்றாள் நீலா . 

'நடுவில தொந்தரவு பண்ணிட்டே இருந்தா எப்படிம்மா' என்றேன்.

'நீங்க உட்கார்ந்து இருந்த சேர் சரி இல்லன்னு, சுத்துற சேர இழுத்து குடுக்கலாம்-னு போயிருக்கான். இத நீங்க அவனை சொல்லவே விடலையாம். வெளிய அனுப்பிட்டிங்களாம்.. '

ரூமில் எட்டி பார்த்தேன், தூங்கி விட்டிருந்தான்.  


Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...