இன்று காலையில் கொஞ்ச நேரம் க.நா.சு பற்றி தமிழ் விக்கியில் படிக்கப் போய்( க.நா.சுப்ரமணியம், தமிழ் விக்கி), லிங்குகளின் வழியாக பாரதி மணி(க.நா.சு வின் மருமகன், பாரதி படத்தில் அப்பாவாக வருபவர்) எழுத்துக்களை சிறிது படித்து பின்னர் துவரனில் போய் முடிந்தது.
க.நா.சு வுக்கு டில்லியில் ஒரு கவிஞர் பழக்கம் (ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன்). ஒரு நாள் சந்திப்பில் இடையில் மகன் வருகிறார்.
பின்வரும் வரிகள் பாரதி மணி எழுதியது.
கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh‘என்று அறிமுகப்படுத்தினார். கநாசு அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத கநாசு கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.
பத்திரிகைகளுக்கு பலவருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப் பச்சன் முதல் தடவையாக பம்பாய் ஃபிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப்பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) கேட்ட கேள்வி தான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால் தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப்படங்களுக்குப்பிறகு, என்னை இந்தியாவில் சிறுகுழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப்பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப்பார்த்தேன். இல்லை…..ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’
நிற்க.
எனக்கு நெடு நாட்களாக பலாக்காயை எப்படி சாப்பிடுகிறார்கள் என்று புரியவில்லை. இதற்கான விடையும் இன்று கிடைத்தது. விடை கீழே, நன்றி பாரதி மணி அவர்கள். இப்போது இவர் இல்லை. கடைசியாக இவர் எழுதியது சக்கை துவரன் செய்முறை . இதை க.நா.சு விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்.
சுருங்கிய செய்முறை கீழே.
- பலாக்காயை தோல் சீவ வேண்டும். மேல் தோல் சீவியே கடையில் கிடைத்தது. இதைக் கேட்டவுடன் கடைக்காரர் மலையாளத்தில் பேசினார். பதிலில் ஏமார்ந்திருப்பார்.
-சதுரமாய் நறுக்க வேண்டும்.நடுத்தண்டு குறுக்கே வரும். இதைக் களைய வேண்டும். மிகுந்த முனைப்புடன் செய்ய ஆரம்பித்த என்னை பின்னுக்கு இழுத்தது இந்த இடம் தான். ஒரு மாதிரி சதுரம் தான் வந்தது. ஆனால் வெட்டும் போது, ஏதோ ஒரு வயலில் நடப்பது போன்ற ஒரு உணர்வு. உள்ளே அங்கங்கே வரப்புகள், நாற்றுகள், கிழங்குகள்.
-சக்கரை, உப்பு, மஞ்சள் சேர்த்து வேக வைத்து , வெந்தபின் முதலில் தேங்காய் எண்ணெயில் தாளித்து பின்னர் , தேங்காய்/காய்ந்த மிளகாய் / சீரகம், கலவையை இதன் தலையில் "அரோகரா' சொல்லி கொட்டி இறக்கவும்.
முதல் முறை பலாக்காய், எதுவும் இல்லாமல் சாலட் போல் சாப்பிடலாம் , இது சாலடா தெரியாது.


Comments
Post a Comment