Skip to main content

பூக்கள் பூக்கும் தருணம்

பூக்கள் பூக்கும் தருணம் 




ஸ்ரீக்கு இப்போது ஒன்பது வயதாகிறது. ஒரு சில வருடம் முன் இவன் உடலுக்கும் என் உடலுக்கும் வித்தியாசமே இல்லாமல் ஒட்டியே இருப்பான். நான் வீட்டில் ஒரு இடம் இருந்து இன்னோரு இடத்திற்கு போன் பேச போனாலோ கூடவே வருவான். மீட்டிங்குகளுக்கு நடுவே நிச்சயம் ஓரிரு முறை கதவு திறந்து வருவான். மீட்டிங்கில் இருப்பது யார் என்று கேட்பான். mute -ல் இருக்கிறேனா என்று கேட்பான். 

எப்படியும் நாளுக்கு சிலமுறை தலைக்கு மேல் தூக்கி விர்ரென்று கீழே இறக்கச் சொல்லி சிரிப்பான்.வண்டிச் சாவியை எடுக்கும் சப்தம் கேட்டாலே உள்ளிருந்து வெளியே வந்து 'கடைக்கா ? நானும் வரேன், ஒன்னும் கேக்க மாட்டேன் ' என்பான். 'வண்டில போல, நடந்து போறேன்' என்றால் , 'பரவால்ல நானும் சும்மா வரேன்' என்பான். நான் அவன் தோளில் கைபோட்டவாறு நடப்பேன். பதிலுக்கு அவனும்  ஒரு மாதிரி எனது தோளைப் பிடித்து ,இறக்கி, வளைத்து கஷ்டப்பட்டு, என்னையும் கஷ்டப்படுத்தி வளைந்தவாறு என் தோள் மேல் கை போட்டு நடந்து வருவான்.

அன்று அவனுக்கு ஒரு பிரிண்ட்-அவுட் கடைசி நேரத்தில் எடுக்க வேண்டி இருந்தது, ஆனால் ஒரு சிக்கல். இதற்க்கு முன் ஒரு நாள் அவனுக்காக Ruby cube வாங்கிய அதே கடை. வாங்கி ஒரு மணிக்குள் எல்லா cube ஒரு பிளாஸ்டிக் பையில் அள்ளி வைக்கும் படி ஆனது. அடுத்த நாள் வேலை. கடைக்கு செல்ல முடியவில்லை. மறுநாள் அவன் அம்மா சொல்லி மாற்றி விட முயற்சித்தேன். ஆனால் கடைக்காரர் சேட் . நமக்கு தனியாக சென்றால் உறுதியான தோல்வி தான். அந்த சமயத்தில் எனக்கு ஹிந்தி வரும், நான் வருகிறேன் என்றான். கூட கூட்டிச் சென்றேன். அவர் சொன்னார் அன்றே வந்திருக்க வேண்டும். பையனுக்கு வாய் அடைத்து விட்டது, 'எனக்கு இனிமே cube வேண்டாம் என்றான்'. நானும் விட்டு வெளியே வந்தேன். இன்றும் அதே கடையா என்ற யோசனை எனக்கு. ' இல்லப்பா அன்னிக்கு தப்பு நம்ம மேல இல்ல. இன்னைக்கு நம்ம அதே கடைக்கு போலாம்' என்றான். 'இல்லப்பா முடியாது' என்றேன். இப்போதெல்லாம் இப்படியும் உண்டு. 

இரண்டு நாளுக்கு முன் ,  அவனுடைய அக்காவை pick up செய்ய அவனையும் கூட்டிச்சென்றேன். அவளுடைய தோழிகள் எல்லாம் வகுப்பு முடிந்து கூட்டமாக வெளியில் வந்தனர்.  எல்லோரும் இவன் தான் தம்பியா என்று கேட்டவாறு hi சொல்லி சென்றனர். அவளும் ஸ்ரீயை காட்டியவாறு எதோ பேசி சென்றாள். இவர்கள் எல்லாம் கூட்டமாக பேசி வெளியே வர, நான் இவனை முன் அழைத்தவாறு நடக்க முயன்றேன். தோளில் கையை வைத்து அணைத்து இழுத்தேன்.' அப்பா அக்கா friends எல்லாருக்கும் என்னைத் தெரியும்' என்றவாறே, தோளில் இருந்த என் கையை எடுத்து விட்டு விட்டு  தனியாக நடந்தான். .



Comments

Popular posts from this blog

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1

தோல் பாவைக்கூத்து - ஒளியின் கலை  ============================== சில வாரங்கள் முன்னர் இப்போது நாங்கள்  குடியிருக்கும் வளாகத்தில் ஆச்சரியப்  படவைக்கும் வகையில் தோல் பாவைக் கூத்து ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். குழந்தைகளுக்கு கட்டணம் இல்லாமல், பெரியவர்களுக்கு சினிமாக் கட்டணத்தை விட குறைவாக நுழைவுக் கட்டணம். புகழ் பெற்ற தோல்பாவைக் கூத்துக் கலைஞர் பத்மஸ்ரீ .திரு ராமச்சந்திர புலவர் குழுவுடன் இதை நடத்துகிறார் என்று படித்தேன். அவருடைய விக்கி பக்கத்தை மேலோட்டமாகப் பார்த்து, தமிழ் விக்கியின் தோல்பாவைக் கூத்துப் பக்கங்களையும் மேலோட்டமாய் கடைசி நேரத்தில் படித்துப் பின்னர் , அந்த இரண்டு மணி நிகழ்வை பார்த்து முடித்து , இன்னும் ஆர்வம் மேலெழுந்து , அ.கா.பெருமாள் அவர்களின் தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து என்ற நூலையும், அதற்குப் பின் அவர் கொடுத்த குறிப்பின் வழியே Stuart Blackburn எழுதிய Inside the Drama House என்ற புத்தகத்தையும் படித்து, இன்னும் சில இணையப் பக்கங்களை மேய்ந்து, காணொளி சில பார்த்து முடித்து , இதை தொகுத்து  எழுதி வைக்க ஆர்வம் வந்து பின் வரும் சொற்களை எழுதுகிறேன். ராமச...

பாராவின் எழுத்துப் பட்டறை - அனுபவக் குறிப்புகள் -1 - பாரா என்ற கதைசொல்லி

ஒரு பெரிய எழுத்தாளர் வகுப்பு எடுப்பது அரிது. அதிலும் எப்படி எழுதுவது என்று அவர் சொல்வது. எட்டு நாட்களில் இருபத்திநாலு மணி நேரமாக. நாளுக்கு மூன்று மணி. பத்துப்பேர் இருந்த வகுப்பு.  அதனால் முடிகையில் அவரே எல்லோரையும் பேர் சொல்லிக் கூப்பிடும்படி தனி வகுப்பாக ஆகிவிட்டது.எனக்கும் ஒரு எழுத்தாளரிடம் நீண்ட நேரம் அருகில் இருக்கமுடிந்தது இப்போது மட்டுமே. அவர் எழுதும் அறையில் இருந்து வகுப்பை எடுத்தார் என நினைத்தேன். இருக்கையின் பின்னால்  ரமணரின் படம். 'நீ என்ன செய்தாலும் உலகில் ஒன்னும் ஆகாது, எனவே தைரியமாய்ச் செய்'  சத்வ குணமுள்ள சிற்பமாய் அந்தப் படம். அதன் பின்னால் எதோ ஒரு சித்தர்.  எப்போதாவது பாட்டில் திறந்து நீர் குடிப்பார் , ரெண்டு நிமிஷம் என்று என்றாவது எழுந்து செல்லும் இடைவெளி. மற்றபடி கதை ,கதை பெரிய கதை சொல்லி என்று முதல் வகுப்பில் முடிவு செய்தேன். சொல்லிய புத்தகத்தை திடீரென எழுந்து எடுத்துக் காண்பித்தார் (எளிய தமிழ் இலக்கணம்). குறிப்பு எடுப்பது முக்கியம் என்று தன்னுடைய டயரிக் குறிப்பை திறந்து காண்பித்தார். தினமும் ரமணரை வணங்கி வகுப்பு ஆரம்பிக்கும். 'கலை என்பது வெளிப்பாட...

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல் - 2

தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை, ஆவணப் படுத்துதல்   - 2 (  தோல் பாவைக்கூத்து- ஒளியின் கலை - 1  ) இன்றைக்கு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் மேல்மட்டத்தில் பேசப்படும் உருட்டல் மிரட்டல்கள் நடுவில் Stuart Blackburn போன்ற ஒருவரை தெரிந்து கொண்டால் அடிமட்டத்தில், ஆழத்தில் என்ன நிகழ முடியும் என்று தெரியும். இவர் அமெரிக்காவில் பிறந்தவர், 1984ல் முதலில் கேரளத்தில் தோல்பாவைக் கூத்து நிகழ்வொன்றைப் பார்க்க வருகிறார். அப்போது அடுத்த பத்து வருடங்கள் அந்த ஆராய்ச்சி தன்னை இழுத்துக் கொள்ளும் என்று தெரியாது என்கிறார். 1970ல் இருந்தே நாட்டார் கலை ஆராய்ச்சிக்காக தமிழகம் வந்திருக்கிறார்.  இந்தப் புத்தகம் ஒரு நாவல் போல விரிகிறது. இந்த நாட்டார் கலையைத் இவர் பார்வையில் விரிகிறது.  இவர் பார்க்கப்போகும் முதல் நிகழ்வுக்கு புகழ்பெற்ற பாவைக் கலைஞர் கிருஷ்ணன் குட்டியுடன் டாக்ஸியில் சுகவரம் என்னும் ஊருக்கு செல்வதில் ஆரம்பிக்கிறது.இது இரவில் மட்டுமே நடப்பது, எத்தனை இரவு கண்முழிக்க வேண்டுமோ என்ற நினைப்பு இவருக்கு. பகவதி கோயிலின் அருகில் இருக்கும் கூத்து மாடம் இவருக்கு பெரிதாகப் படவில்லை. ...