குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன (ஜென் கதை -2)
குழாயைத் திறந்தால் ஆகாயமும் காற்றும் வருகின்றன
-------------------------------------------------------------------
'எனக்கு, எப்போ 'என்று கேட்டதும், 'பிளம்பிங் சரியா இருந்தா எல்லாம் ஸ்மூத்தா இருக்கும்' என்று மேலாளர் மதிய ஏப்பத்தை வெளியேற்ற முடியாமல் கண்ணாடி அறையில் சொன்னது நினைவில் வந்தது.
இந்த வருஷமும் பதவி உயர்வு தள்ளிப் போகும் என்று பால்-வண்ணன் எதிர் பார்த்திருந்தாலும் அவனுக்கு ஏன் என்று பிடிபடவில்லை.
பிளம்பிங் பற்றித்தான் ஆபீஸ்-புத்தரிடம் பேச நினைத்தான்.
வழியில் பார்த்த தூண்கள் , விளக்குகள், கட்டிடங்கள் எல்லாமும் , இலைகளில் ஓடிய நரம்புகள், மரங்களின் ஓங்கிய கிளைகள், வேர்கள் என எல்லாமும் , தன் உடலின் நரம்புகள், எலும்புகள், மூடிய தோல் என்று எல்லாமும் வெறும் குழாய்கள் மட்டுமே என்றே அவனுக்குத் தோன்றின.
எப்போதும் யாரோ, எங்கோ ஏதோ ஒரு குழாயைத் தோண்டிப் , பிரித்துப் , புதைத்து என ஏதேனும் செய்து கொண்டே இருந்தார்கள்.
பிரபஞ்சமே குழாய்களால் கட்டப்பட்டது என்று தோன்றியது.
இதில் தான் ஒரு குழாயா இல்லை, அதைப் பிரிப்பவனா என்று அவனுக்குப் புரியவில்லை.
'குருவே , நான் குழாயா , ப்ளம்பரா?' என்று கேட்டான்.
ஆபீஸ்-புத்தர் சொன்னார் 'நீ அதனுள் ஓடும் ஆகாயமும் காற்றும் '.

Comments
Post a Comment