பஷீரின் பசியும் , என்னுடைய பசியும்
பஷீரின் பசியும் , என்னுடைய பசியும் ------------------------------------------------ சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு தாமதமாகி விட்டது. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். சாப்பிட்டது செரித்தது தெரிந்த பின் அடுத்த வேளை உண்பவன் உடலுக்கு மருந்து வேண்டாம். செரித்ததா என்று எப்படி அறிவது? காலை எழுந்ததும் முதல் ஏப்பம் உணவின் மணத்துடன் வராமல் இருப்பது என்னுடைய அறிகுறி. மறுநாள் அப்படி ஆகி விட்டது. பல்லைத் தேய்த்துப் பின் அரை மணி மெதுவாய் ஓடினால் சரியாகும். ஆனால் நேரமில்லை. குற்ற உணர்ச்சியில் நேற்று பகலில் உண்ண வேண்டாம் என்று முடிவு செய்தேன். வண்டி போய்க் கொண்டிருக்கும் போது இரண்டு நாள் பட்டினி போடலாம் என்று தோன்றியது. திங்கள் கிழமைகளில் பொழுது வேகமாக ஓடிவிடும். அன்று ஒரு மணியில் இருந்து மூணு வரை தொடர் மீட்டிங்காகப் போனது. ஒரு மணி வரை எப்போதும் போல் கடுங் காப்பியில் உப்புப் போட்டுக் குடித்தேன். மூன்று மணிக்கு மேல் கொஞ்சம் நிதானமாய், பட்டினியைப் எப்படி சரியாகச் செய்வது என்று படித்துப் பார்த்தேன். தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். உப்புகள் குறையும்போது மூட்டுகள் உளைய...